PUBLISHED ON : மார் 25, 2018

தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்!
பாரதிராஜா இயக்கிய, பொம்மலாட்டம் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தவர், இந்தி நடிகர், நானா படேகர்; இப்படத்தில், அவருக்கு டப்பிங் கொடுத்தவர், நிழல்கள் ரவி. ஆனால், அப்படத்திற்கு பின், தற்போது, ரஜினியின், காலா படத்தில் நடித்துள்ள படேகர், தானே தமிழில் பேசி, நடித்துள்ளார். இதற்காக, அப்படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்தே, தமிழில் பேச பயிற்சி எடுத்து வந்தவரின் முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளார், ரஜினி.
— சினிமா பொன்னையா
அனுஷ்காவை பாதித்த படங்கள்!
சரித்திர கதைகளில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகையாக திகழ்பவர், அனுஷ்கா. ஆனால், அவருக்கு இப்போது, பெண் விடுதலை சம்பந்தமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், தன் அபிமான இயக்குனர்களிடம், அந்த மாதிரியான கதைகளில் வெளியாகி, தன்னை பாதித்துள்ள சில படங்களை பற்றி சொல்லி, அந்த சாயலில் கதைகள், தயார் செய்யுமாறு கூறி வருகிறார்.
— எலீசா
ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்!
நயன்தாரா, த்ரிஷா மற்றும் அனுஷ்காவை தொடர்ந்து, சமந்தாவும், கன்னடத்தில் வெளியான, யு டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கில், கதையின் நாயகியாக நடிக்கிறார். அதே போன்று, பாரிஸ் பாரிஸ் படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார், காஜல் அகர்வால். இந்நிலையில், ஸ்பைடர் படத்தின் நாயகியான ரகுல் பிரீத் சிங்கிற்கும், தன் உடல் அமைப்பிற்கு, ஆக் ஷன் கதைகளில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால், சில ஆக் ஷன் பட இயக்குனர்களை அணுகி, தன்னையும் கதையின் நாயகியாக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!
— எலீசா
விக்ரமை அதிர வைத்த பாலா!
நடிகர் விக்ரமை, சேது படத்தில் நடிக்க வைத்து பிரபலபடுத்தியவர், இயக்குனர், பாலா. தற்போது, விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடிக்கும், வர்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். கதைக்கேற்ப, நடிகர்களின், கெட்டப்பை மாற்றும் பாலா, இப்படத்திற்காக, துருவ் விக்ரமிற்கு, தாடி, மீசை வைத்து, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு மாற்றி விட்டார்.
நேபாளத்தில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற விக்ரம், தன் மகனின் தோற்றத்தை பார்த்து, அதிர்ச்சி கலந்த ஆச்சரியமடைந்தவர், 'எப்படி இருந்த என் மகனை, இப்படியாக்கி விட்டார் பாலா...' எனச் சொல்லி, துருவ் விக்ரமின் முந்தைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும், இணைத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
வாரிசு நடிகர் நடித்து வந்த, போத படம், பைனான்ஸ் பிரச்னையில் நிற்கிறது. குறிப்பாக, அப்படத்தில் நடிக்கும் சில கதாநாயகியருக்கு சம்பள பாக்கி இருந்ததால், அம்மணிகள், படப்பிடிப்புக்கு, 'டேக்கா' கொடுத்து வந்தனர். இந்நிலையில், அந்த நடிகையருக்கு, தான் அடுத்தபடியாக நடிக்கும் படங்களில் நடிக்க, சிபாரிசு செய்த நடிகர், அதற்கு பிராயசித்தமாக, தன் படத்தில் நடித்து தர வேண்டும் என்று மேற்படி நடிகையரை கேட்டுக் கொண்டுள்ளார்.
வம்பு நடிகர் தான் அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்துவார். ஆனால், இப்போது, அவர் கடைசியாக நடித்து வெளியான படம் ஓடாததற்கு, அவரை காரணம் சொல்லி, அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார், அப்பட தயாரிப்பாளர். அத்துடன், வம்பு நடிகருக்கு எப்படியேனும், 'ரெட் கார்டு' போட்டே தீருவது என்றும் அவர் வரிந்து கட்டி நிற்கிறார். அதனால், இதுவரை யாருக்குமே பயப்படாமல் இருந்து வந்த வம்பு நடிகர், முதன் முறையாக அந்த தயாரிப்பாளரிடம் பயப்படத் துவங்கியுள்ளார்.
சினி துளிகள்!
* அரவிந்த்சாமி நடிக்கும், நரகாசூரன் படத்தில், வில்லனாக நடிக்கிறார், சந்தீப் கிஷன்.
* பூமராங் படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக, நடித்து வருகிறார், மேகா ஆகாஷ்.
* மணிரத்னம் இயக்கத்தில், செக்கச்சிவந்த வானம் படத்தில், இன்ஜினியராக நடிக்கிறார், சிம்பு.
* துருவங்கள் பதினாறு படத்தை அடுத்து, நரகாசூரன் படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன், இந்த படத்தை அடுத்து, நாடக மேடை என்ற படத்தை இயக்குகிறார்.
அவ்ளோதான்!
