
மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன்!
தன் சக்திக்கு மீறிய கனமான கதைகளில் நடித்து வரும், சிவகார்த்திகேயனிடம், 'எதற்காக இப்போதே இத்தனை, 'ரிஸ்க்' எடுக்கிறீர்கள்...' என்றதற்கு, 'ரிஸ்க் எடுத்தால் தான் அடுத்த, 'லெவல்' நடிகராக முடியும்...' என்று, 'கூலாக' சொன்னார். அந்த கேள்விக்கு பதில் கொடுத்து முடிப்பதற்குள், இப்போது, ஒரு படத்தில், மூன்று வேடங்களில் நடித்து வருவதாக சொல்லும், சிவகார்த்திகேயன், 'ரிஸ்க் எடுப்பதையெல்லாம் நான், 'ரஸ்க்' சாப்பிடுவதை போன்றே எடுத்துக் கொள்கிறேன்...' என்று வடிவேலுவின், 'டயலாக்'கை எடுத்து விடுகிறார்.
— சினிமாபொன்னையா
சமந்தாவின் தவிப்பு!
சமந்தா நடித்து வந்த, ஜானு என்ற படம், வெளியாகி விட்டதை அடுத்து, நடிப்புக்கு முழுக்குப் போட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அந்த படத்தின், 'ஹிட்' காரணமாக, பல பட வாய்ப்புகள், சமந்தாவை முற்றுகையிட்டு வருகிறது. அதனால், நடிப்பை தொடருவதா, இல்லை முழுக்குப் போடுவதா என்பது தெரியாமல் தவித்து நிற்கிறார். மீசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை!
- எலீசா
விஜயை, அண்ணனாக ஏற்க தயங்கும், நடிகை!
விக்ரம் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துவிட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்தபடியாக, விஜய்க்கு ஜோடியாகும் ஆசையில் இருந்து வந்தார். இந்த நேரம் பார்த்து, ஒரு படத்தில், விஜய்க்கு தங்கையாக நடிக்க, அவருக்கு அழைப்பு வர, அதிர்ந்து விட்டார். 'இன்று வரை, அவர் தான், என் கனவு நாயகன். நடிப்பு தான் என்றாலும் அவரைப் போய், அண்ணனாக எப்படி ஏற்க முடியும். அதை, என் உள் மனசு ஒத்துக்கொள்ளாது...' என்று சொல்லி, அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல், தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிறார். அது அதற்கு ஒரு கவலை; அம்மையாருக்கு எட்டுக் கவலை!
—எலீசா
மூன்று மாதங்களில், 30 கதைகள் கேட்ட, நடிகை!
மகாநதி படத்தில், சாவித்திரியாக நடித்து, தேசிய விருது பெற்ற பின், கீர்த்தி சுரேஷின் கதை தேர்வே மாறி விட்டது. அழுத்தமான கதையில், கனமான கதாபாத்திரங்களில் நடிக்கும் தொனியில் கடந்த, மூன்று மாதங்களில், 30 கதைகளை கேட்டுள்ளார். ஆனால், 'அதில் ஒரு கதை கூட என்னை, 'இம்ப்ரஸ்' பண்ணவில்லை...' என்று தட்டிக்கழித்து விட்டார். அதனால், 'கீர்த்தி சுரேஷுக்காக, புது, 'ஸ்கிரிப்ட்' எழுத 'ஐடியா'வும் இல்லை; 'எனர்ஜி'யும் இல்லை...' என்று, தெறித்து ஓடுகின்றனர்,இயக்குனர்கள்.
— எலீசா
விஜய்சேதுபதி பாணிக்கு மாறும், ஆர்யா!
திருமணத்திற்கு பின், பரத்தை போலவே, ஆர்யாவின் மார்க்கெட்டும், 'டல்' அடிக்கத் துவங்கி விட்டது. அதனால், இதுவரை, 'ஹீரோ' ஆக மட்டுமே நடித்து வந்துள்ள, ஆர்யா, தற்போது, விஷால் நடிக்கும் ஒரு படத்தில், வில்லனாக நடிக்கப் போகிறார். அதோடு, விஜய்சேதுபதி பாணியில், தொடர்ந்து, 'ஹீரோ-' மற்றும் வில்லன் என, இரண்டு விதமான கதைகளிலும் நடிக்க தயாராக இருப்பதாகவும், கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார், ஆர்யா.
— சினிமாபொன்னையா
கறுப்புப்பூனை!
சினிமா சங்கங்களில் தலைவரான, சண்டைக்கோழி நடிகர், அதே வேகத்தில், அரசியல் ரீதியான தேர்தலில் போட்டியிடவும் களமிறங்கினார். அதிலிருந்து அவருக்கு, எதிர்ப்புகள் அதிகரித்து விட்டன. புதுப்புது பிரச்னைகள், அவரை, விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை கூட திருமணம் செய்ய முடியாமல், நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் நடிகர், அரசியல் தான், தன் நிம்மதியை கெடுத்து விட்டது என்பதை புரிந்து கொண்டார். 'எதிர் காலத்தில் தப்பித் தவறி கூட, அரசியல் ஆசை கொள்ள மாட்டேன்...' என்று, நட்பு வட்டாரங்களில் சொல்லி, புலம்பிக் கொண்டிருக்கிறார்.
'விஷால், நீ, வகுப்பு, 'லீடரா' ஒரு வருஷம் இருந்த சரி... அதற்காக, பள்ளி மாணவர் தலைவர் தேர்தலிலும் போட்டி போடுவேன்னு சொல்றியே... பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் உன்னால், அந்த பொறுப்பை சரி வர செய்ய முடியுமா என்று யோசி... படிப்பு பாதிக்கப்பட்டால், எதிர்காலமே வீணா போயிடும் பார்த்துக்க...' என்று எச்சரித்தார், ஆசிரியர்.
சினி துளிகள்!
* துப்பறிவாளன் படத்தை அடுத்து, அதன் இரண்டாம் பாகத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார், விஷால்.
அவ்ளோதான்!

