தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகையும் குழந்தைகளும்!

நகையும் குழந்தைகளும்!

நகையும் குழந்தைகளும்!


PUBLISHED ON : மார் 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்யாண மண்டபம், ஆட்களால் நிரம்பி, பேச்சு சத்தம் அதிகம் இருந்தது. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர், குழந்தைகள். நாதஸ்வர, தவில் ஓசை எங்கும் வழிந்தது. எல்லார் முகத்திலும் சந்தோஷம்; கலகலப்பு. இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம். அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

நாற்காலியில் அமர்ந்து, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், குரு. அவன் நண்பன், அசோக்கும் வந்திருந்தான்; மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள். மணமகன் அறையில் மாப்பிள்ளையை பார்த்து, சிறிது பேசி, பொங்கல், இட்லி, வடை மற்றும் காபியை முடித்து, மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

''அப்புறம், குரு... பிரகாஷும் மாப்பிள்ளை ஆயிட்டான். திருமண பாக்கியம் இல்லாத, நம், 'வருத்தப்படும் வாலிபர் சங்க'த்திலிருந்து மேலும் ஒருவரை சங்கம் இழந்துட்டுது. எஞ்சியிருப்பது நாம் இருவர். உனக்கு, 28; எனக்கு, 30 வயசு. நாம் கரையேறுறது எப்ப?'' என்று தோளில், கை போட்டு, ஜாலியாக கேட்டான், அசோக்.

''அதான் மண்டபம் பூராவும் வலை வீசிக்கிட்டிருக்கேன். 35 வயசு முதிர்கன்னி கிடைச்சாலும் சரி தான், நீயும் தேடு!'' என்றான், குரு.

''இது, சுயம்வர மண்டபமாடா... கல்யாண மண்டபம்!''

''ஒரு கல்யாணத்துல தான் இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும்ன்னு சொல்வாங்க,'' என்று, குரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மண்டபத்தின் ஓர் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை ஒன்று அழ, அதன் அம்மா ஏதோ விசாரித்து கொண்டிருந்தாள். நிறைய பேர் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

'என்ன, ஏது... அப்படியா, கண்ணு... நகையை எங்கம்மா வச்சே, சொல்லு...' என, அந்த சிறுமியை கேட்டனர்; பரபரப்பாக தேடினர்.

அங்கு சென்று விசாரித்து வந்த அசோக், ''சிறுமியின் ஜிமிக்கி காணோமாம். தேடுறாங்க. நாமும் தேடுவோம்,'' என்றான்.

முகூர்த்த நேரம், தேடுதல் தாமதமாயிற்று. அவர்களை ஒதுக்கி, திருமணம் முடிந்தது. ஆசிர்வதிக்க மறந்து, அவர்கள், நகையை தேடிக் கொண்டிருந்தனர்.

மண்டப மேனேஜருக்கு தகவல் போனது.

'போலீசுக்கு சொல்லப் போறேன். மண்டபத்தில், 'சிசிடிவி' கேமரா இருக்கிறது. எடுத்திருந்தால் கொடுத்திடுங்க...' என்று எச்சரிக்கை செய்தார்.

சில நிமிடம் அனைவரும் அந்த சம்பவத்தில் மூழ்கி பரபரத்தாலும், அடுத்தடுத்து அவரவர் வேலைகளை கவனிக்கலாயினர். அரை மணி நேரத்துக்கு பிறகு, குருவை அழைத்து புறப்பட்டான், அசோக்.

''ஜிமிக்கி, எத்தனை பவுன் இருக்கும்?'' என்றான், குரு.

''அரை கிராமாக கூட இருக்கட்டும். தொலைத்தவங்களுக்கு, அது பெரிய இழப்புதானே!''

''ஜாக்கிரதையா இருந்திருக்கணும்!''

''எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், தொலையறதும், களவு போறதும் நடக்க தான் செய்யும். பாவம், அந்த குழந்தை. பயந்து, அழுது அழுது, சோர்ந்து போச்சு. இதோட விடப்போறாங்களா... காலம் முழுக்க சொல்லி காட்டிகிட்டு இருப்பாங்க...

''அது ஒரு வடுவாக, குழந்தை மனசுல பதிஞ்சு போனால், 'நாம் சாமர்த்தியசாலி இல்லையோ, ஏமாந்த சோணகிரியா ஆயிட்டமோ...'ன்னு ஒரு வருத்தம். கொஞ்ச காலத்துக்காவது இருக்கும்; எனக்கும் இருந்தது.

''சின்ன வயசில் மொட்டை போட கோவிலுக்கு போயிருந்தோம். மூணு வயசிருக்கும், கழுத்துல செயின் போட்டிருந்தேன். தாய் மாமன் சீரா கொடுத்த நகை. 'பத்திரம் பத்திரம்' என்று, அம்மா சொல்லிகிட்டே இருந்தாங்க. காவலுக்கு என்னுடன் இரண்டு பேர் இருப்பாங்க.

''எப்படியோ அவங்களுக்கு, 'டேக்கா' கொடுத்து, அந்த கோவிலில் உலவிய குரங்குகளை வேடிக்கை பார்க்க ஓடிட்டேன். அப்பதான், எப்படியோ நகை தொலைந்து போனது அல்லது எனக்கு தெரியாமல் யாரோ நகையை எடுத்துட்டாங்க. எவ்வளவு தேடியும் கிடைக்கலை. கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துட்டு வந்தோம். 'கிடைத்தால் தகவல் சொல்றோம்'ன்னு அனுப்பிட்டாங்க.

''வீட்டுக்கு வந்ததிலிருந்து அர்ச்சனை, திட்டு. 'கொஞ்சமாவது கவனமா இருக்க வேணாமா... 'பே'ன்னு குரங்கை வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குது. என்னத்த உருப்படப் போறியோ'ன்னு. இன்னைக்கும் அந்த திட்டு, அடி நெஞ்சில் வடுவா இருக்கு.

''நல்ல வேளை, நகை கிடைத்த தகவல் வந்து, போய் வாங்கிட்டாங்கன்னாலும், என் மேல் சுமத்திய வடு இருக்கு பாரு... 'சுதாரிப்பு இல்லாத பையன்'னு. அது இன்னும் மறக்கலை,'' என்று சொல்லியபடி வந்தான், அசோக்.

அமைதியாக தலை குனிந்தபடி நடந்த குரு, ''மாப்ள...'' என்று நிறுத்தினான்.

''என்ன?''

''மண்டபத்துக்கு போலாம்டா!''

''என்ன திடீர்னு!''

''வா, சொல்றேன்!''

அவனுக்கு, லேசாக புரிந்தது.

''ஏண்டா இப்படி?''

''வேணும்ன்னு செய்யல, தற்செயலா தரையில் பார்த்தேன். நப்பாசை, எடுத்து வச்சுகிட்டேன். அமளி எழுந்ததும், ஒப்படைக்கணும்ன்னு தோணல. இப்ப கொடுக்க போனால், தப்பா நினைச்சுடுவாங்களோன்னு ஒரு தயக்கம். மேனேஜர் மிரட்டல், கேமரா பத்தியெல்லாம் அலட்டிக்கலை.

''எடுத்தது எடுத்ததா இருக்கட்டும்; மறைச்சது மறைச்சதா இருக்கட்டும்ன்னு ஒரு பிடிவாதம். அந்த குழந்தை அழுதது காதில் விழுந்தும்... ச்சே, அசிங்கமா இருக்கு,'' என்றான்.

அவன் தோளில் கை போட்டு ஆறுதலாக தட்டி கொடுத்தான், அசோக். ஜிமிக்கியை வாங்கிக்கொண்டான். மண்டபம் அடைந்தனர். கூட்டம் குறைந்து கொண்டிருந்தது. நகை தொலைத்த குழந்தையையும், அதன் குடும்பத்தையும் தேடி

பார்த்தனர்; தென்படவில்லை.

'என்ன போனீங்க, திரும்ப வந்துட்டீங்க... இருந்து சீர்வரிசை பொட்டி பிரிச்சதும், மதியம் சாப்பிட்டு போற ஐடியாவா?' என்று, தமாஷாக கேட்டனர், தெரிந்தவர்கள்.

'அப்படியும் வச்சுக்கலாம்...' என்று சொல்லி, அலுவலகம் பக்கம் சென்றனர்.

''என்ன வேணும்?''

'எங்களுக்கு ஒண்ணும் வேணாம். ஒரு பொருளை திருப்பி கொடுக்க வந்தோம்...' என்று, ஜிமிக்கியை எடுத்து கொடுத்து, 'வழியில் கிடந்தது. ஏதோ ஒரு குழந்தையோட நகை இது. அவங்களிடம் ஒப்படைச்சுடுங்க...' என்று சொல்லி திரும்பினர்.

நீண்ட தொலைவு வந்த பின், குரு முகத்தில் நிழலாக ஒரு வருத்தம்.

''அதுதான் நகையை ஒப்படைச்சிட்டோமே... ரிலாக்ஸ்,'' என்றான், அசோக்.

''பாவம், அந்த சிறுமி, நிறைய திட்டும், அடியும் வாங்குமோ,'' கவலையுடன் கேட்டான், குரு.

''அப்படி சொல்ல முடியாது. சில வீடுகளில் குழந்தைகளை நல்லாவே நடத்துவாங்க. 'தொலைஞ்சு போச்சேன்னு வருந்தாதே... வேற புதுசா வாங்கிக்கலாம் அழாதே'ன்னு சமாதானம் சொன்னாலும் சொல்லுவாங்க... நகையை விட, குழந்தை முக்கியம். அதன் மனசு காயப்படக்கூடாதுன்னு நினைப்பாங்க!''

''எனக்கும் அப்படி ஆறுதல் சொல்லுடா, மாப்ள... இப்படி அல்பமா எப்பவும் நடந்ததில்லை. அப்பாவோட சம்பள பணம் வெளியில் தெரியற மாதிரி டேபிள் மேல வச்சுட்டு போனாலும், அதிலிருந்து, 10 ரூபாய் கூட தொட மாட்டேன். எனக்கு தேவைன்னா சண்டை போட்டு வாங்குவேனே தவிர...'' என, மேற்கொண்டு பேச முடியாமல் நின்றவன் தொடர்ந்தான்...

''முதல் முறையா இந்த தப்பை பண்ணிட்டேன். மண்டபத்துக்குள் வரும்போது, ஏதோ ஒண்ணு காலில் தட்டுச்சு... பார்த்தால், நகை. யாரோடதுன்னு கேட்டிருக்கணும்; சட்டுன்னு தோணலை. இந்த விஷயம் தெரிந்தால், சம்பந்தப்பட்டவங்க என்ன நினைப்பாங்க. 'பிரெண்டு' தான் என்ன நினைப்பான். கல்யாண மண்டபத்தில் என் மானம் காத்தில் பறக்காதா?'' என்றான், குரு.

''அதான் திருப்பிக் கொடுத்தாச்சே... இனி, இப்படி செய்ய ஆசை வராது; நல்ல புள்ளையாயிட்டே. விடு,'' என்று சமாதானம் சொல்லி அழைத்து போனான், அசோக்.

கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது, குருவுக்கு. அது, காலத்துக்கும் தன்னை தொடர்ந்து வரும் என்று தோன்றியது.

எப்போதும் நகைச்சுவையான பேச்சும், சிரிப்புமாக இருக்கும், குருவிடமிருந்து அந்த இரண்டையுமே பறித்துக் கொண்டது, அச்சம்பவம்.

அதற்கு, காரணமாயிருந்த ஜிமிக்கி, அவன் கண்களில் படாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான், அசோக்.

எஸ். ராஜசிம்மன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us