
அடிமடியில் கை வைத்த, இயக்குனர் ஷங்கர்!
பிரமாண்ட இயக்குனர், ஷங்கரின் படத்தில் நடித்தால், இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், அவரது புதிய படத்தில் நடிப்பதற்கு, பல மெகா நடிகையர் வரிசை கட்டினர். ஆனால், அவரோ, 'பார்த்த நடிகையரையே, திரும்பத் திரும்ப பார்ப்பது, ரசிகர்களுக்கு போரடிக்கும். அதனால், என் புதிய படத்திற்கு, கொரியாவில் இருந்து, பே சூஜி -என்ற நடிகையை இறக்குமதி செய்யப் போகிறேன்...' என்று சொல்லி, அத்தனை மெகா நடிகையருக்கும், மெகா அதிர்ச்சி கொடுத்து விட்டார். இதையடுத்து, 'மற்ற இயக்குனர்களாவது, அண்டை மாநில நடிகையரை தான், ஒரு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். இவரோ, வெளிநாட்டு நடிகையை அழைத்து வந்து, ஒட்டுமொத்த இந்திய நடிகையரின் அடிமடியிலும் கை வைத்து விட்டாரே...' என்று, புலம்பித் தள்ளுகின்றனர்.
— சினிமா பொன்னையா
'சினிமா களம், போரடிக்கிறது!' த்ரிஷா
'சினிமாவில், 19 ஆண்டுகளாக நான் பயணித்து வருகிறேன் என்றால், சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பல போட்டி நடிகையர் தான், காரணமாக இருந்தனர். அவர்களை முந்த வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்ததால், ஒரு உந்து சக்தி கிடைத்தது. ஆனால், சமீபகாலமாக, போட்டி போட ஆளில்லை. அதனால், மார்க்கெட்டில் பின்தங்கி விட்டதாக உணரத் துவங்கியுள்ளேன்...' என்று சொல்லும், த்ரிஷா, 'போட்டி இல்லாத களம், ரொம்ப போரடிக்கிறது...' என்று சொல்லி, 'பீல்' பண்ணுகிறார்.
— எலீசா
மாறுவேடத்தில் தனுஷ்!
தன் படங்களை பார்க்கும் ரசிகர்களின், 'ரியாக் ஷனை' தெரிந்து கொள்ள, தியேட்டர் களுக்கு மாறு வேடத்தில், 'விசிட்' அடிப்பார், ரஜினி. இப்போது, அவரது மருமகன் தனுஷும், அதை பின்பற்றி வருகிறார். தன் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும், சென்னையிலுள்ள பிரதான தியேட்டர்களுக்கு, நண்பர்களுடன், இரவு காட்சி பார்க்க, மாறு வேடத்தில் செல்கிறார். அப்போது, ரசிகர்கள், எந்த மாதிரியான காட்சிகளுக்கு, எப்படிப்பட்ட, 'ரியாக் ஷன்' கொடுக்கின்றனர் என்பதை நேரில் தெரிந்து, அதுபோன்ற காட்சிகளை தன் படங்களில் அதிகமாக இணைக்குமாறு, இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.
— சி.பொ.,
சொர்ணாக்காவாகும், பிரியாமணி!
விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட சில, 'ஹீரோ'கள் வில்லனாக நடிக்க தயாராகி விட்டதைத் தொடர்ந்து, சிம்ரனும், தற்போது, வில்லியாகி வருகிறார். இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு, சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ள, பிரியாமணி, ஸ்ரேயா மற்றும் காஜல் அகர்வால் போன்ற நடிகையரும், அதிரடி வில்லியாக உருவெடுக்க, தயாராக இருப்பதாக கூறி வருகின்றனர். இவர்களில், பிரியாமணியின் முகத்தில் வில்லி தோரணை இருப்பதாக சொல்லி, அவரை வில்லியாக்க, ஒரு இயக்குனர், 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார். அதனால், கூடிய விரைவில், ஜூனியர் சொர்ணாக்காவாக, பிரியாமணி உருவெடுப்பார் என, எதிர்பார்க்கலாம்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
திருமணத்திற்கு பின், அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள, 'மச்சான்ஸ்' நடிகைக்கு, சில மேலிடத்து தலைவர்கள் மத்தியில், உறவுகள் அதிகரித்துள்ளதாம். அதையடுத்து, மேல்தட்டு தலைவர்களின் அந்தரங்க பினாமியாகவும் மாறி, அவர்களிடமிருந்து, கணக்கில் வராத கறுப்பு பணத்தை, கோடி கோடியாய் கறக்கத் துவங்கியிருக்கிறார். அந்த பணத்தை வைத்து, தற்போது சொந்தமாகவே ஒரு படம் தயாரித்து, நடித்து வரும் அம்மணி, எதிர்காலத்தில், பெரிய அளவில் சினிமாவில் முதலீடு செய்யவும், 'மெகா பிளான்' போட்டு வைத்திருக்கிறார். அதன் காரணமாக, ரகசிய சந்திப்புகள் நடத்த, அடிக்கடி டில்லிக்கு பறக்கும் அம்மணி, மாதக்கணக்கில் இன்ப சுற்றுலா செல்வதை, வாடிக்கையாக்கி விட்டார்.
'நம்ம சேர்மன், இந்த பேக்டரி தவிர, இன்னும் நாலைந்து கம்பெனியின் பங்குதாரராக இருக்கிறார் என்பது, உனக்கு தெரியும்தானே... கணக்கில் வராத, கோடிக்கணக்கான பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்கு என்ன வழி என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார், அவர்.
'அவரது காரியதரிசி நமிதா இருக்கிறாளே... அவளுக்கு, ஆள் பலமும், கொஞ்சம் கிரிமினல் மூளையும் இருக்கவே, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கிட்டா...'
'எப்படி?'
'சேர்மனிடம், மெதுவாக, கறுப்புப் பண விவகாரம் பற்றி, பேச்சுக் கொடுத்து, தன் வலையில் விழ வைத்து விட்டாள்.
'சேர்மனுக்கும் வேறு வழி இல்லாததால், நமிதாவை முழுவதுமாக நம்பி, அவ்வளவு பணத்தையும் ஒப்படைத்து விட்டார்.
'அந்த பொண்ணும், தன் பெயரில் மற்றும் அம்மா - தம்பி பெயரில் வெவ்வேறு நிறுவனத்தை துவங்கி, புது புது, 'பிசினஸ்' செய்வதற்காக, ஊர், ஊரா பறந்துட்டு இருக்கு...'
'பெரிய காரியவாதியா இருப்பா போலிருக்கே...' என்று, இரு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* சினிமாவில், துக்கடா உடையணிந்து நடித்து வரும், நமீதா, அரசியல்வாதியான பின், புடவை கட்டாமல், வெளியில் தலை காட்டுவதே இல்லை.
* தமிழில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள முதல் படமான, சுல்தான் படத்தை தொடர்ந்து, இரண்டு மெகா, 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு கல்லெறிந்து வருகிறார்.
* ஹிந்தியில் மட்டுமே நடித்து வரும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர், மகேஷ்பாபுவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க, ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்ளோதான்!

