PUBLISHED ON : ஆக 15, 2021

நாகேஷ் - கவுண்டமணி பாணிக்கு மாறும், யோகிபாபு!
தமிழ் சினிமாவில், காமெடி நடிகர்களான நாகேஷ், கவுண்டமணி போன்றோர், சிரிப்பு நடிகர்கள் என்றாலும், சில படங்களில், குணசித்ர வேடங்களில் நடித்து, ரசிகர்களை கண்கலங்கவும் வைத்துள்ளனர். அந்த வகையில், யோகிபாபுவும், தற்போது அவர்களின் பாணியில், காமெடியை தாண்டி, உணர்வுகளை வெளிப்படுத்தும் கனமான கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். முக்கியமாக, 'இனிமேல், நான் காமெடி செய்யும் படங்களில் கூட, கண் கலங்க வைக்கும் காட்சிகளில் நடித்து, ரசிகர்களை உருக வைக்கப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
ஷகீலாவாக உருவெடுக்கும், நடிகை!
ரஜினியின், காலா படத்தில் நடித்த பாலிவுட் நடிகை, ஹூமா குரோஷி, தற்போது, அஜீத்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஆபாச நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்காக, நடிகை தேடப்பட்டு வருகிற சேதி அறிந்து, அந்த படத்தை வலிய தேடிச்சென்று கைப்பற்றியுள்ளார். அதைப்பார்த்து, 'போயும் போயும் ஆபாச நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறீர்களே...' என்று, பலரும் கேள்வி கேட்டனர். அதற்கு, 'மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த, வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல், இந்த ஷகீலா படத்திற்கும் விருது கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கலாம். அந்த நப்பாசையில் தான், இந்த படத்தில், 'கமிட்' ஆகியிருக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?
— எலீசா
பரவசப்படுத்தும், ஜனனி அய்யர்!
ரசிகர்களை வசியப்படுத்த பெரும்பாலான நடிகையர், அதிரடி போட்டோ, வீடியோக்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனனி அய்யரோ, தன் வீட்டு படுக்கையறையில், 'கிளுகிளு' உடையணிந்து, அங்கு ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப உடலை வளைத்து, நெளித்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, 'மற்றவர்களைப்
போன்று அதிரடியான ரவுசு காட்ட என்னால் முடியாது. அதனால், என் படங்களில் இதுபோன்ற ரம்மியமான, 'கியூட்' நடனமாடி, ரசிகர்களை 100 சதவிகிதம் பரவசப்படுத்த முடியும்...' என்று, ரசிகர்களுக்கு ஒரு சேதி வெளியிட்டுள்ளார். எல்லாரும் உலர்த்தினர் என்று, எலியும் தன் வாலை உலர்த்தியதாம்!
— எலீசா
சிவகார்த்திகேயனின், புதுமையான அடிமுறை!
காதல் பிளஸ் காமெடி நாயகனாகவே இருந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போது ஒரு படத்தில், 'ஆக் ஷன்' அவதாரம் எடுத்துள்ளார், சிவகார்த்திகேயன். அதேசமயம், தன் அடிமுறையும் வழக்கமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக, ஜப்பான், கொரியன் மொழி படங்களில் இடம்பெறுவது போன்று, எதிரிகளை வித்தியாசமான கோணத்தில் தாக்குகிறார். 'இந்த, 'ஆக் ஷன்' அந்த நாடுகளில் பழசாக இருந்தாலும், நம் ஊருக்கு புதுசுதானே. அதனால், இந்த அடிமுறையைப் பார்த்து, நம் ரசிகர்கள், என்னை கொண்டாடுவர்...' என்று, அடித்துச் சொல்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தளபதி நடிகர், இதுவரை, தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், விரைவில் டோலிவுட்டில் நேரடியாக, 'என்ட்ரி' கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்து, டோலிவுட்டில் உள்ள, 'மெகா ஹீரோ'கள் செம கடுப்பில் உள்ளனர். தளபதி நடிக்கும் படம், டோலிவுட்டில், 'ஹிட்' அடித்து, தங்களது படம் தோல்வியடைந்தால், அது மானப் பிரச்னையாகி விடும் என்று கருதி, 'தளபதி போன்ற மெகா நடிகர்களை, டோலிவுட்டிற்கு இழுத்து வராதீர்கள். எங்கள் தாய்மொழியில் நாங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவோம்...' என்று, தளபதி படத்தை இயக்கயிருக்கும் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆக, தளபதியால், டோலிவுட்டில் சத்தமில்லாமல், 'ஈகோ' களேபரம் நடந்து கொண்டிருக்கிறது.
பஸ் உரிமையாளரும், இரு நண்பர்களும்...
'சார்... நீங்க செய்யிறது நியாயமா? எங்க ஊருக்கு எப்ப பஸ் விட்டீங்களோ, அப்பவே அந்த பஸ்சில் கண்டக்டராக வரணும்ன்னு, கஷ்டப்பட்டு படித்து, வந்துள்ளோம்.
'வெட்டி பயல்கள்ன்னு ஊருக்குள்ள எங்கள இழிவா பேசினவங்க முன், இப்பதான் தலை நிமிர்ந்து நிற்கிறோம். எங்க அடி மடியிலே கை வைக்கலாமா, சார்...'
'ஏல... இப்ப என்னாச்சு... என்னன்னு சொல்லி தொலையுங்கள்!'
'சார்... வெளியூரிலிருந்து, விஜய்ன்னு ஒரு புது கண்டக்டரை, ஊருக்குள்ள கொண்டார முடிவு செஞ்சிருக்கீங்களே... அததான் சொல்றோம். அப்புறம், உள்ளூரில் இருக்கும் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கும். பழையபடி குட்டிச்சுவர் தான் கதியா... நம்ம ஊருல ஓடுற உங்க பஸ்சுக்கு, நாங்க தான் எப்பவுமே கண்டக்டரா இருப்போம்...' என்று அழாத குறையாக புலம்பினர், இரு நண்பர்கள்.
சினி துளிகள்!
* வடிவேலுவிற்கு பின், யோகிபாபுவிற்கு, தன் படங்களில் காமெடியனாக நடிக்க சிபாரிசு செய்கிறார், விஜய்.
அவ்ளோதான்!
