PUBLISHED ON : செப் 19, 2021

தம்பிகளை களத்தில் இறக்கிவிடும், கமல்!
கடந்த, 1992ல், சிவாஜியுடன் இணைந்து, கமல் நடித்து வெளியான படம், தேவர்மகன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த, கமல், அரசியல் பணி காரணமாக தள்ளி வைத்திருந்தார்; இப்போது, 'ஸ்கிரிப்ட்' வேலைகளை துவங்கியுள்ளார். தேவர்மகன் முதல் பாகத்தை, மலையாள இயக்குனர், பரதன் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தையும், மகேஷ் நாராயணன் என்ற மலையாள இயக்குனரே இயக்குகிறார். இப்படத்திற்கான திரைக்கதையை, கமல் எழுதுகிறார். ஆனால், இந்த படத்தில், கமல் நாயகனாக நடிக்கவில்லை. கமல் நடித்த வேடத்தில், விக்ரமும், வில்லனாக, விஜய் சேதுபதியும் நடிக்கப் போகின்றனர்.
— சினிமா பொன்னையா
'பாலிசி'யை மாற்றிய, விஜய்!
விஜயைப் பொறுத்தவரை, இரவு - பகல் என, ஓய்வெடுக்காமல் நடிப்பார். ஆனால், வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு சென்றால் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக விடுமுறை எடுத்து விடுவார். தற்போது, பீஸ்ட் படத்தில், தனக்கு ஜோடியாக நடிக்கும் பூஜாஹெக்டே, தெலுங்கு மற்றும் ஹிந்தியில், 'பிசி'யாக இருப்பதால், அவர் கொடுத்த, 'கால்ஷீட்'டில் அவருடனான அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்து விடவேண்டும் என்பதற்காக, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஓய்வெடுக்காமல் நடித்து வருகிறார், விஜய்.
— சி.பொ.,
சீரியசான வேடங்களை தவிர்க்கும், நிவேதா பெத்துராஜ்!
சீரியசான வேடங்களில் இயக்குனர்கள் நடிக்க சொன்னால், மறுத்து விடுகிறார், நிவேதா பெத்துராஜ். காரணம், 'என் ரசிகர்கள் அனைவருமே இளசுகள். அவர்கள் என்னை விதவிதமான கவர்ச்சி, 'கெட் - அப்'பில் பார்க்கத்தான் ஆசைப்படுகின்றனர். அவர்களை திருப்திபடுத்துவதையே என் முதல் கடமையாக கருதுகிறேன். மேலும், நான் சீரியசான வேடங்களில் நடிப்பதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது...' என்று சொல்லி, அவரைத் தேடி வரும் அதுபோன்ற வேடங்களை, அவருக்கு நெருக்கமான சீனியர் நடிகையருக்கு திருப்பி அனுப்பி விடுகிறார். ஆய உபாயம் அறிந்தவள் அரிது அல்ல வெல்வது!
— எலீசா
மாதவனை, 'டென்ஷன்' செய்த, இயக்குனர்கள்!
அர்ஜுன், ஆர்யா என, சில நடிகர்கள் வில்லன்களாகவும் உருவெடுத்து வருவதால், மாதவனைத் தேடியும் சில வில்லன் வாய்ப்புகள் கதவை தட்டுகின்றன. அதுவும் அவரை, 'ஹீரோ'வாக வைத்து, 'ஹிட்' படங்களை இயக்கியவர்களே அழைக்கின்றனர். இதனால், பலத்த அதிர்ச்சியடைந்த, மாதவன், 'நான் நிஜ வாழ்க்கையில் எப்படி, 'ஹீரோ'வோ, அதேபோல், சினிமாவிலும், 'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பேன். நடிப்புக்காக கூட, வில்லனாக மாற மாட்டேன். அதனால், என்னை வில்லனாக்க யாரும் முயற்சி எடுத்து, தேவையில்லாமல், 'டென்ஷன்' செய்ய வேண்டாம்...' என்று, அவர்களுக்கு பிடி கொடுக்காமல், 'எஸ்கேப்'பாகி வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* பரதேசி நடிகரின் மார்க்கெட் அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதால், தன் புதிய படங்களில் முன்னணி நடிகையருடன் நடித்தாவது மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்துவிடலாம் என, சில மேல்தட்டு நடிகையருடன் பேச்சு நடத்தினார். அப்போது, தன்னை விட தயாரிப்பாளர்களிடத்தில் கூடுதல் சம்பளம் வாங்கி தருவதாகவும், உத்தரவாதம் கொடுத்தார். ஆனபோதும், எந்த நடிகையும் உடன்படவில்லை. 'மார்க்கெட் இல்லாத உங்களுடன் நடித்து, எங்களது மார்க்கெட்டை இழக்க தயாராயில்லை...' என்று சொல்லி, நடிகரை துரத்தியடித்து விட்டனர். இதனால், கடும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர், சரக்கு பாட்டிலும், கையுமாக புலம்பித் திரிகிறார்.
திருமண கான்ட்ராக்டர் இருவர் பேசிக் கொண்டது:
'நல்லா, 'மிமிக்ரி' எல்லாம் செய்வானே, அதர்வா, இப்ப, அவன் நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு...'
'ஏன்... என்னாச்சு?'
'மிமிக்ரி பண்ற திறமை மட்டுமில்லாம, விதவிதமா, 'கிரியேட்டிவா' யோசிச்சு, ஏற்கனவே பல கலைநிகழ்ச்சிகள நடத்திய அனுபவத்தால், 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் பெரிய அளவில் ஆரம்பிச்சான். கோவில் திருவிழா, திருமண விழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என்று, நகரில் எந்த விழா நடந்தாலும், அதர்வாவின் பல்சுவை நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனா, இப்ப கொஞ்சம் சறுக்கல் வந்துருச்சு...'
'என்ன காரணம்?'
'ஏற்கனவே இருந்த பெண் கலைஞர்கள், இவன் செய்த கெடுபிடியால் ஓட்டம் பிடித்து விட்டனர். இப்ப, நிகழ்ச்சியில் பங்கெடுக்க, பெண் கலைஞர்கள் யாரும் சரியா அமையலையாம். புதிதாக யாரும் இவனுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்த முன் வராததால், கூடுதலாக சம்பளம் வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தை கூறியும், மறுத்து விட்டனராம். அதான், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளான்...'
சினி துளிகள்!
* 'ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள, தள்ளிப்போகாதே படம் திரைக்கு வந்தால், நான் மீண்டும் வெற்றிப்பட நாயகனாகி விடுவேன்...' என்கிறார், அதர்வா.
* தற்போது, 'ஸ்லிம்' ஆகி, முன்பை விட 'கியூட்'டாக மாறியுள்ள, சினேகா, 'கதையின் நாயகி வேடம் கேட்கவில்லை; குழந்தைக்கு அம்மா வேடம் கொடுத்தாலும், தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை, 'டச்' பண்ணி விடுவேன். ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்...' என்று, இயக்குனர்களுக்கு, வேண்டுகோள் வைக்கிறார்.
அவ்ளோதான்!
