தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உழைப்பு உயர்வு தரும்!

உழைப்பு உயர்வு தரும்!

உழைப்பு உயர்வு தரும்!


PUBLISHED ON : செப் 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில், கடுமையாக உழைக்கிறோம். அதன் மூலம், ஓரளவிற்கு நன்றாகவே உயர்வு பெறுகிறோம். பெற்ற உயர்வை தக்க வைத்துக்கொள்ள பலரால் முடிவதில்லை. இது ஏன் -என்பதை விளக்கும் கதை.

இரண்யாட்சனின் மகன் அந்தகாசுரன், பிரம்ம தேவரை நோக்கி கடும் தவத்தில் ஈடுபட்டான். அதன் விளைவாக, அந்தகனின் எதிரில் தோன்றி, 'வேண்டும் வரத்தை கேள்...' என்றார், பிரம்ம தேவர்.

'சிவபெருமானைத் தவிர, வேறு யாராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் வேண்டும்...' என, வரம் கேட்டான், அந்தகன்.

'அப்படியே ஆகட்டும்...' என்றார், பிரம்ம தேவர்.

வரம்பெற்ற அந்தகன், பெருங்கூச்சலிட்டான். தங்களைச் சேர்ந்தவன், வரம் பெற்று விட்டான் என்பதை அறிந்ததும், அசுரக் கூட்டம் முழுவதும் அந்தகனிடம் வந்து சேர்ந்தது.

'நாமனைவரும் இனி சும்மாயிருக்கக் கூடாது. தேவர்களையும், முனிவர்களையும் உண்டு - இல்லை என்று ஆக்கிவிட வேண்டும். புறப்படுங்கள்...' என கூவினான், அந்தகன்.

தேவர்களையும், முனிவர்களையும் படாதபாடுபடுத்தினான், அந்தகன். வரபலம் பெற்ற அவனை எதிர்க்க, யாராலும் முடியவில்லை.

இந்திரன் முதலான தேவர்களும், முனிவர்களும், கைலாயம் சென்று, 'அந்தகனின் அட்டகாசம் தாங்கவில்லை; காப்பாற்றுங்கள்...' என்று, சிவபெருமானிடம் முறையிட்டனர். காப்பாற்றுவதாக கூறினார், சிவபெருமான்.

அதே சமயம், கைலாயத்திற்கே வந்த அந்தகன், 'மரியாதையாக தேவர்களையும், முனிவர்களையும் என்னிடம் விட்டு விடுங்கள். இல்லாவிட்டால், அவர்களுக்கு ஏற்படும் நிலை தான் உங்களுக்கும் ஏற்படும்...' என்று, இறைவனையே மிரட்டினான்.

சிவபெருமானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கேட்பதாயில்லை, அந்தகன். 'கைலாயத்தை தாக்கி அழியுங்கள்...' என, உத்தரவிட்டான். அதை ஏற்று, கைலாயத்தை அழிக்க முயன்ற படைகள், நொடிப் பொழுதில் அழிந்தன. அந்தகனை சூலத்தின் நுனியால் குத்தி துாக்கிப் பிடித்தார், சிவபெருமான்.

சூலத்தின் நுனியிலிருந்த அந்தகனின் உடம்பிலிருந்து ஏராளமாக ரத்தம் வழிந்தது. அந்தகனின் ஆணவமும் அகன்றது. கைகளைக் கூப்பிய அவன், 'என் கெடுமதி நீங்கி விட்டது. இனி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன். அடியேனை மன்னியுங்கள்...' என, வேண்டினான். திருந்திய அந்தகனை, தம் கணங்கள் ஒன்றின் தலைவனாக நியமித்து அருள் புரிந்தார், சிவபெருமான்.

துயரம் நீங்கிய தேவர்களும், முனிவர்களும் கைலாய நாதரை வணங்கி மீண்டனர். உழைப்பு உயர்வைத் தரும். எச்சரிக்கையாக இருப்பது அந்த உயர்வை நிலைக்கச் செய்யும் என்பதை விளக்கும் கதையிது.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us