PUBLISHED ON : ஏப் 10, 2022

மிரட்டுவதற்கு தயாராகும், சிவகார்த்திகேயன்!
தமிழில் இதுவரை, 65 படங்களில் நடித்துள்ள, விஜய், தன், 66வது படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த முதல் படத்திலேயே, தெலுங்கு ரசிகர்களை பெரிய அளவில், 'இம்ப்ரஸ்' செய்து விட வேண்டும் என்பதற்காக, தன், 'கெட் - அப்' மட்டுமின்றி, இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட நடன அசைவுகளையும் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அதேபோன்று, தமிழில், 'ரொமான்டிக்' கதைகளாக நடித்து வரும், சிவகார்த்திகேயனும் தற்போது, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்திலேயே அதிரடியான, 'ஆக் ஷன் ஹீரோ'வாக டோலிவுட்டில் களமிறங்கும் சிவகார்த்திகேயன், இதன் மூலம் அடுத்த லெவலுக்கு போய்விட வேண்டும் என்பதற்காக, ஹாலிவுட் பைட் மாஸ்டர்களை அழைத்து வந்து சண்டை பயிற்சி எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
அந்த வகையில் விஜயும், சிவகார்த்திகேயனும் தமிழ் ரசிகர்ளுக்கு காட்டாத புதிய நடிப்பு வித்தைகளை தெலுங்கில் எடுத்து விடப்போகின்றனர்.
— சினிமா பொன்னையா
காதலரை அதிர வைத்த, ரகுல் பிரீத் சிங்!
பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்த, ரகுல் பிரீத் சிங், அதன்பிறகு தான், முன்பை விட படு கவர்ச்சியாக நடிக்க துவங்கி இருக்கிறார். அதோடு, தன் புகைப்படங்களையும் வெளியிட்டு, ரசிகர்கள் மட்டுமின்றி, தன் காதலரையும் அதிர விட்டுள்ளார்.
இதையடுத்து, 'இத்தனை கிளாமராக நடிப்பதற்கு, உங்கள் காதலர் தடை போட மாட்டாரா?' என்று, அவரிடம் கேட்டதற்கு, 'ஜாக்கி பாக்னானிக்கு முன்பே நான், சினிமாவை வெறித்தனமாக காதலித்து வருகிறேன். அதனால், நடிப்பு விவகாரத்தில், எனக்கு யாரும் தடைபோட முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்...' என்று, அதிரடி, 'ஸ்டேட்மென்ட்' விட்டு, காதலரை மேலும் அதிர விட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங்.
— எலீசா
போயஸ் கார்டனில் குவியும் நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமா பிரபலங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தான், போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறினர். தற்போது, பல கோலிவுட் இளவட்டங்களுக்கு, போயஸ் கார்டனில் குடியேறும் ஆர்வம் மேலோங்கி உள்ளது.
அந்த வகையில், தனுஷ், போயஸ் கார்டனில் வீடு கட்டி வரும் நிலையில், நயன்தாராவும், அவரது காதலரும், அங்கு அப்பார்ட்மென்டில் ஆளுக்கு ஒரு வீடு வாங்கி இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது, இயக்குனர்களான அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும், போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளனர்.
அதுபோல், சிவகார்த்திகேயன், போயஸ் கார்டனில் சொந்தமாக ஒரு அலுவலகம் வைத்திருக்கிறார். அந்த வகையில், போயஸ் கார்டன் தற்போது, சினிமா சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.
— சி.பொ.,
அஜித்தை கடுப்பேற்றிய, 'நெகட்டிவ்' விமர்சனம்!
சமீபத்தில் வெளியான, அஜித்குமாரின், வலிமை படத்தை, ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவரது தோற்றம், நடனத்தை கடுமையாக விமர்சித்தனர், சினிமா விமர்சகர்கள். இதனால், அடுத்தபடியாக, ஒரு அதிரடியான கதையில், மாறுபட்ட, 'கெட் - அப்'பில் நடித்து, 'நெகட்டிவ்' விமர்சனங்களை விரட்டியடிக்க முடிவெடுத்துள்ள, அஜித் குமார், தன், 61வது படத்தில், 'ஹீரோ - வில்லன் டபுள் ரோலில்' மிரட்டப் போகிறார்.
மேலும், புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதால், ஒரு வேடத்தில், 25 கிலோ எடை குறைத்து, 'ஸ்லிம்'மாக நடிப்பதற்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
— சி.பொ.,
'இமேஜை' மாற்றிய, ஷகிலா!
மலையாள சினிமாவில், ஆபாச நடிகையாக கொடி நாட்டி வந்தவர், ஷகிலா. சமீபகாலமாக, கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ளவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இதன் காரணமாக, அவர் மீது இருந்த ஆபாச நடிகை என்ற முத்திரை படிப்படியாக மாறி இருப்பதோடு, அவரை, 'ஷகிலா அம்மா...' என்று அனைவரும் மரியாதையுடன் அழைக்க துவங்கி விட்டனர். அந்த அளவுக்கு, திரைக்குப் பின்னால் அனைவரிடத்திலும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தி, அம்மா இமேஜை உருவாக்கி விட்டார்.
தற்போது, 'யூடியூப்' சேனல் நடத்தி வரும் அவர், கூடிய சீக்கிரமே திரைப்படங்களை வெளியிடும், ஓ.டி.டி., தளம் ஒன்றையும் துவங்க திட்டமிட்டுள்ளார். ஆக, டிஜிட்டல் மீடியாவில் தொழிலதிபராகிறார், ஷகிலா.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன் தயாரித்து, நடித்துள்ள, விக்ரம் படத்தில், கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
அவ்ளோதான்!
