PUBLISHED ON : டிச 11, 2022

83 வயதில், 'ஹீரோ'வாக நடிக்கும், கவுண்டமணி!
கடந்த 2015ல், 49ஓ என்ற படத்தில், 'ஹீரோ' ஆக நடித்த, கவுண்டமணி, அதையடுத்து சில படங்களோடு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், வடிவேலு கதாநாயகனாக, 'ரீ - என்ட்ரி' கொடுத்திருப்பது போல், 83 வயதாகும் கவுண்டமணியும், பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தின் மூலம், 'ஹீரோ' ஆக மீண்டும், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.
அதோடு, 'ஹீரோ' மட்டுமின்றி, காமெடியன், குணச்சித்திர வேடம் என, கலந்து கட்டி நடிக்கவும் தயாராகிவிட்ட கவுண்டமணி, 'வடிவேலு, சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட காமெடியன்களுக்கு, 'டப்' கொடுக்க போகிறேன்...' என, கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
மீண்டும் துாசு தட்டப்படும், ரஜினி, கமல் படங்கள்!
கமல் நடித்த, ஆளவந்தான் படம், 2001ல், திரைக்கு வந்தது. தற்போது, அந்த படத்தை மறு படத்தொகுப்பு செய்து, விரைவில், 'டிஜிட்டல்' தொழில் நுட்பத்தில், மறு வெளியீடு செய்கின்றனர்.
இதே போல், 2002ல், ரஜினி நடித்து வெளியான, பாபா படத்தையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிட போகின்றனர். அதனால், 'முன்பு வெளியான, பாபா படத்தை விட இந்த படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்...' என்கின்றனர். என்றாலும், முன்பு இந்த இரண்டு படங்களுமே, ரஜினி, கமலின் கேரியரில், தோல்வி பட பட்டியலில் இடம்பிடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தளபதி நடிகருடன் கடைசியாக வெளியான, மூன்றெழுத்து படத்தில் நடித்த, மும்பையை சேர்ந்த பீஸ்ட் நடிகை, அடுத்தடுத்து தமிழில் நடிப்பதற்கு, தீவிரம் காட்டினார். அதோடு, தளபதிக்கே இவர் ஜோடியாகி விட்டதால், தங்களுக்கும் அவரை ஜோடியாக்க வேண்டும் என்று, சில மேல்தட்டு 'ஹீரோ'கள் அம்மணியை வட்டம் போட்டனர்.
ஆனால், அப்படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டதால், பீஸ்ட் அம்மணி மீது, கோலிவுட்டில் ராசி இல்லாத நடிகை என்ற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டனர். இதனால், இந்த நடிகைக்கு சிபாரிசு செய்தால், அவரது ராசி நம்மையும் ஒட்டிக் கொள்ளும் என்று, வட்டம் போட்ட, 'ஹீரோ'கள், ஓட்டம் பிடித்து விட்டனர்.
* முத்தின கத்திரிக்காய் ஆகிவிட்ட, மூனுஷா நடிகையை, திருமணம் செய்து கொள்ள, சில மாதங்களுக்கு முன், தொழிலதிபர் ஒருவர் நுால் விட்டுள்ளார். ஆனால், நடிகையோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. காரணம், சமீப காலமாக, சோமபான குளத்தில் நீச்சலடிக்க துவங்கி விட்டார். இதன் காரணமாகவே, இரவு நேரங்களில், பாட்டிலும் கையுமாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறார், அம்மணி.
அதனால், திருமணம், குடும்பம் என்று ஆகிவிட்டால், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வந்து விடும். குறிப்பாக, நள்ளிரவு, 'பார்ட்டி'களுக்கு செல்லும் தன் சுதந்திரத்திற்கு தடை போட்டு விடுவர் என்பதற்காகவே, திருமணம் என்று சொன்னாலே, அருவருப்பாக முகம் சுளிக்கிறார், மூனுஷா.
சினி துளிகள்!
* சல்மான்கானுடன் ஹிந்தி படத்தில் நடித்தபோது, பூஜா ஹெக்டேவின் காலில் அடி பட்டதால், கடந்த ஒரு மாதமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.
* திருமணத்திற்கு பிறகு கதையின் நாயகியாக, 'என்ட்ரி' கொடுத்த, ஜோதிகாவுக்கு சில படங்கள் மட்டுமே வெற்றியை கொடுத்தது. அதனால்,தற்போது, அழுத்தமான குணச்சித்ர வேடங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார். மலையாளத்தில், காதல் தி கோர் என்ற படத்தில், மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருப்பவர், அடுத்து, தன் தாய்மொழியான ஹிந்தியில், ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க போகிறார்.
* பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, தி ரோடு என்ற படத்தில், 'ஆக் ஷன் ஹீரோயின்' ஆக நடித்து வருகிறார், த்ரிஷா.
* ஏற்கனவே, சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஒரு பாடலில் நடனமாடிய, ப்ரியாமணி, தற்போது, மீண்டும், ஜவான் படத்திலும், அவருடன் ஒரு பாடலில் அதிரடி நடனமாடி இருக்கிறார்.
அவ்ளோதான்!
