PUBLISHED ON : ஆக 06, 2023

சரித்திர படத்தில், 'ஹீரோ'வாகும், சிம்பு!
பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற, சரித்திர படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக, தற்போது, இந்தியா முழுக்க, பல மொழிகளிலும் சரித்திர படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சிம்புவின், 48வது படமும், சரித்திர கதையில் உருவாகிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய, தேசிங்கு பெரியசாமியின் இந்த படத்திற்காக, லண்டன் சென்று, சில போர் பயிற்சிகளை கற்று வந்தார், சிம்பு. தற்போது, நீளமான தலை முடி, தாடி மற்றும் முறுக்கு மீசை வளர்த்து, சரித்திர கால, 'கெட் - அப்'புக்கு மாறிக் கொண்டிருக்கிறார்.
சினிமா பொன்னையா
சம்பளத்தை குறைத்த, கங்கனா ரணாவத்!
தலைவி படத்தில் நடித்த, பாலிவுட் நடிகை, கங்கனா ரணாவத், தற்போது, சந்திரமுகி- 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்த படம், தனக்கு தமிழில் பெரிய, 'என்ட்ரி'யை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார், கங்கனா.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தபடியாக, மாதவன் நடிக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பவர், அடுத்தடுத்து ஹிந்தியைப் போலவே, தமிழிலும் அதிகப்படியான கவனம் செலுத்த போவதாக கூறுகிறார்.
அதோடு, பாலிவுட்டில் பல கோடிகள் சம்பளம் வாங்கும் நிலையில், தமிழ் படங்களில் நடிப்பதற்கு, தன் வழக்கமான சம்பளத்திலிருந்து, 25 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளார்.
— எலீசா
பிரியா பவானி சங்கரை அலற விட்ட இயக்குனர்கள்!
'நானும் கவர்ச்சி கொடி ஏற்றப் போகிறேன்...' என்று, பிரியா பவானி சங்கர் சொன்னதும், சில இயக்குனர்கள், அவரை, தமன்னா ரேஞ்சுக்கு தோலுரிக்க படையெடுத்தனர். அப்போது, அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரங்களை கேட்டு, ஆடிப்போனார். அந்த அளவுக்கு, அவரை, ஜூனியர் ஷகீலாவாக்கும் அளவுக்கு, 'கில்மா' கேரக்டர்களாக சொல்லியுள்ளனர்.
கொஞ்சம் அசந்தால், நம்மையும் உரிச்ச கோழியாக்கி விடுவர் போலிருக்கே என்று, தற்போது, 'ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன். குளியல் மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க வாய்ப்பே இல்லை. அதுபோன்ற வேடங்களுடன், என்னை யாரும் அணுக வேண்டாம்...' என்று, கோலிவுட்டுக்கு, அவசர செய்தி அனுப்பியுள்ளார், பிரியா பவானி சங்கர்.
— எலீசா
ஏ.ஆர்.ரஹ்மானை பின்தள்ளிய, அனிருத்!
கடந்த, 2012ல், தனுஷ் நடித்த, 3 என்ற படத்தில் அறிமுகமானவர், இசையமைப்பாளர் அனிருத். தற்போது, ஹிந்தி சினிமா வரை முத்திரை பதித்து வருகிறார். தமிழில், ரஜினி, கமல், விஜய், அஜித் என, அனைத்து முன்னணி, 'ஹீரோ'களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், ஹிந்தியில், ஷாருக்கான் தயாரித்து நடித்துள்ள, ஜவான் படத்திற்கு இசையமைத்திருக்கும், அனிருத்துக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற, ஏ.ஆர்.ரஹ்மானே, இப்போது வரை, எட்டு கோடி தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில், சினிமாவில் அறிமுகமாகி, 10 ஆண்டுகளில், ஏ.ஆர்.ரஹ்மானை பின்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார், அனிருத்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து, அந்த கணவர்களை விவாகரத்து செய்துவிட்டார், மூன்றெழுத்து வாரிசு நடிகை. தற்போது, சில படங்களில் நடித்துக் கொண்டே, நான்காவது திருமணத்திற்காக, சில பெரும்புள்ளிகளுக்கு துாண்டில் போட்டு வருவதாக, கோலிவுட்டில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இந்த நடிகை, 'டைம் பாஸ்'க்காக திருமணம் செய்து, ஓரிரு ஆண்டுகளில் கழட்டிவிடக் கூடியவர். எனவே, இவரது துாண்டிலில் விழுந்தால், அசிங்கமாகி விடும் என்று, அவரது கடைக்கண் பார்வையில் விழாமல், தொடர்ந்து, 'எஸ்கேப்' ஆகி வருகின்றனர், சில நடிகர்கள்.
அந்த மலையாள வாரிசு நடிகை, தேசிய விருது பெற்ற போதும், அதன்பின், தமிழில் அவர் நடித்த படங்கள், பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. சமீபத்தில் அவர் நாயகியாக நடித்து வெளியான, ஐந்தெழுத்து படம், வெற்றியை கொடுத்ததை அடுத்து, தன் படக் கூலியை, இரண்டு கோடியிலிருந்து, நான்கு கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார், வாரிசு நடிகை.
இதன் காரணமாக, புதிய படங்களுக்கு, அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளர்கள், பலத்த அதிர்ச்சி அடைந்து, 'இந்த படத்தில், இவரது நடிப்பே பேசும்படியாக இல்லை. படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, படக்கூலியை டபுளாக உயர்த்துவதா?' என்று, அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சினி துளிகள்!
* பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கேரக்டர் நடிகையாக, சில படங்களில் நடித்து வரும், வனிதா விஜயகுமார், ஒரு படத்தில், கதையின் நாயகியாக நடிப்பதற்கு, ஒப்பந்தமாகியுள்ளார்.
* மாமன்னன் படத்திற்கு பிறகு, கன்னிவெடி, சைரன், ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகு தாதா போன்ற படங்களில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.
அவ்ளோதான்!
