PUBLISHED ON : ஏப் 08, 2012

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா!
வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது, இசை என்றொரு படத்தை இயக்கி நடிக்கும் முயற்சியில் உள்ளார். இதில், தனக்கு ஜோடியாக நடிக்க, அனுஷ்கா, அமலா பால் போன்ற நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் அவர்கள், இந்தாண்டு முழுக்க பிசி என்று கூறி விட்டனர். அதனால், இப்போது, லட்சுமி ராயை, 'புக்' செய்த எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க, அஜித் அல்லது விஜய்யிடம் கால்ஷீட் கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
—சினிமா பொன்னையா.
ஹீரோக்களுக்கு இணையான காஜல் அகர்வால்!
துப்பாக்கி, மாற்றான் படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், இவ்விரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலுமே தயாராகி வருவதால், அதிக உற்சாகமாக உள்ளார். காரணம், தெலுங்கில் காஜலுக்கு இருக்கிற மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, அவருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இரு மொழிகளையும் மனதில் வைத்து, மேற்படி, பட ஹீரோக்களுக்கு இணையான சம்பளமும் காஜலுக்கு கைமாறியுள்ளது. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா.
ராசு மதுரவன் படத்தில் ராகவா லாரன்ஸ்!
ஏற்கனவே லாரன்சை வைத்து, பாண்டி என்ற படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். தற்போது, மைக் செட் பாண்டி என்ற படத்தை சபரீஷ் - சுனைனாவை வைத்து இயக்கும் அவர், மீண்டும் தன் இயக்கத்தில் நடிக்க, லாரன்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரை மையமாக வைத்து, ராசு மதுரவன் சொன்ன கதையை கேட்டு புல்லரித்துப்போன லாரன்ஸ், 'எப்போது கேட்டாலும் கால்ஷீட் தருகிறேன்...' என்று சொல்லி, ராசு மதுரவனையும் புல்லரிக்க வைத்துள்ளார்.
—சி.பொ.,
சென்னையில் குடியேறிய அமலாபால்!
மைனாவுக்கு பிறகு, அமலா பால் நடித்த எந்த படமும் வெற்றி பெறாத போதும், அவரது தமிழ் சினிமா மார்க்கெட் எகிறி நிற்கிறது. இன்னும் ஓரிரு படங்களிலேயே, சம்பளமாக, 50 லட்சம் ரூபாயைத் தொட்டு விடும் நிலையில் இருக்கிறார். இந்நேரத்தில், அண்டை மாநில படங்களில் நடித்தால், தமிழில் கிடைத்த இடம் பறிபோய் விடக்கூடும் என்று, மற்ற மொழிப் படங்களை தவிர்க்கிறார். அதோடு, சென்னைக்கும், கொச்சிக்கும் விமானத்தில் பறப்பதையும் நிறுத்தி, தற்போது, சென்னை தி.நகரில், சொந்த வீடு வாங்கி குடியேறி விட்டார். கரும்பு உள்ள போதே ஆலை கட்டிக்கொள் என்ற கதை!
— எலீசா.
மாதவன் மாதிரி கணவர் வேண்டும்!
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமை, ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தவர் பிபாஷா பாசு. ஆனால், தற்போது, அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால், திருமணம் செய்து கொள்ள, வேறு மாப்பிள்ளை பார்த்து வருபவர், அந்த மாப்பிள்ளை, நடிகர் மாதவனை போல் அழகுடையவராகவும் குணமுடையவராகவும் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, ஒரு இந்தி படத்தில் இணைந்து நடித்தபோது, தன்னை மாதவன் கவர்ந்து விட்டதாக வெளிப்படையாக சொல்கிறார் பிபாஷா பாசு. ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
— எலீசா.
தெலுங்கு கற்கும் பார்த்திபன்!
ஆப்பு படத்தில் நடிப்பதற்கு முன், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் பார்த்திபன். அப்பா வேடம் என்றதும், இப்படத்தில் நடிப்பது பற்றி, எந்த பதிலும் சொல்லாமல் இருந்த பார்த்திபனுக்கு, ஒரு நாள் சிரஞ்சீவியே போன் போட்டு, அப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனால்தான் மறுபரிசீலனை இன்றி உடனே ஓ.கே., சொல்லியுள்ளார் பார்த்திபன். அதோடு, அப்படத்தில் தனக்குத் தானே டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக, தற்போது தெலுங்கு பயின்று வருகிறார்.
— சி.பொ.,
தன்சிகா தாராளம்!
அங்காடித்தெருவுக்கு பிறகு, அஞ்சலியின் மார்க்கெட் எகிறியதை போன்று, அதே வசந்த பாலனின் இயக்கத்தில், அரவான் படத்தில் நடித்திருப்பதால் தன், மார்க்கெட்டும் சூடுபிடிக்கும் என்று எதிர் பார்க்கிறார் தன்சிகா. மேலும், முன் வரிசை நடிகர் படங்களை கைப்பற்றும் முயற்சியாக, 'அஞ்சலி மாதிரி நான் கவர்ச்சி விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க மாட்டேன். டைரக்டர், ஹீரோக்கள் விரும்பும் தாராளம் காட்டி நடிப்பேன்...' என்றும் முன் மொழிந்து வருகிறார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!
— எலீசா.
வடிவேலு கேட்ட சன்மானம்!
அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர், அங்கு நடத்தும் விழாவில் கலந்து கொள்ள, நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு, 'நான் வர வேண்டுமென்றால், 20 லட்சம் ரூபாய் சன்மானம் தர வேண்டும்...' என, நிபந்தனை விதித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அமெரிக்க தமிழ்ச் சங்கம், வடிவேலுவை அழைக்கும் திட்டத்தை கை விட்டது.
—சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
