PUBLISHED ON : ஜூலை 10, 2022

குழந்தை இல்லை என வருந்துபவர்கள், 30 வயதைத் தாண்டியும் திருமணமாகாத கன்னியர், பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு அனாதைகளாக நிற்கும் பெற்றோர், சிறுநீரகம், இதயம் போன்ற ஆபத்தான நோயுள்ளவர்கள் மற்றும் தாங்க முடியாத கஷ்டத்தில் தவிப்பவர்களுக்கு ஆறுதலாய் இருக்கிறார், பாதிரி மலர் விநாயகர்.
கடலுார் திருப்பாதிரிபுலியூரில் அருள்பாலிக்கும் இவரை, கன்னி விநாயகர், வலம்புரி விநாயகர் என்றும் அழைப்பர்.
கோடைகாலத்தில் மலரும், பாதிரி என்ற பூ; இதை, பாடலம் என்று இலக்கியங்களில் குறிப்பிட்டனர். இந்த பூவின் மகிமை காரணமாக, இங்குள்ள சிவனுக்கு, பாடல ஈஸ்வரர் என்று பெயர் சூட்டினர். இதுவே பாடலீஸ்வரர் ஆயிற்று.
தந்தைக்கு பிடித்த இந்த மலரை, விநாயகரும் தன் கையில் ஏந்திக் கொண்டார். நாம் கோவில்களுக்கு செல்லும் போது, மலர்களை பிரசாதமாக தருகின்றனர். இதற்கு காரணம் உண்டு. குறிப்பிட்ட சில வகை மலர்களுக்கு மருத்துவ குணம் உண்டு.
குழந்தை இல்லாதவர்கள், எவ்வளவோ மருத்துவ முயற்சி எடுத்த பின், கடவுளையே சரணடைகின்றனர். பல வேண்டுதல்களை செய்கின்றனர். அவர்களுக்கு நல்ல நேரம் இருந்தால், இந்த பாதிரி மலர், அவர்களுக்கு கிடைக்கும். இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி, கணவனும், மனைவியும் குடித்தால், கர்ப்பக் கோளாறு நீங்கும்.
பூலோகத்தில் எங்கேனும் குடியிருக்க விரும்பினால், சிவனும் - பார்வதியும் ஊடல் கொள்வது போல திருவிளையாடல் நிகழ்த்துவர்.
இதன்படி ஒருமுறை, அவர்களிடையே ஊடல் நிகழ, பார்வதியை பூலோகம் செல்லும்படி கூறிவிட்டார், சிவன். மீண்டும் சிவலோகத்தை அடைவது எப்போது என கேட்டாள், பார்வதி.
'நீ பூலோகத்தில் பல இடங்களில் சிவலிங்க பூஜை செய். எந்த இடத்தில் உன் இடது கண் துடிக்கிறதோ, அப்போது நான் வந்து, மீண்டும் சிவலோகம் அழைத்து வருவேன்...' என்றார், சிவன்.
அதன்படி, பாதிரி மரங்கள் அடர்ந்த கானகம் ஒன்றில், சிவ பூஜை செய்தாள், பார்வதி. அங்கு வந்த விநாயகர், அந்த மரங்களிலுள்ள மலர்களைப் பறித்து, தாயின் சிவ பூஜைக்கு உதவி செய்தார். அத்துடன், தன் கையிலும் சில மலர்க்கொத்துக்களை வைத்துக் கொண்டார். தன் ஆயுதங்களான மழு, கோடரி, பாசம், அங்குசம் ஆகியவற்றை கீழே வைத்து விட்டார். மலர்க்கரங்களுடன் இருந்த மகனை பார்த்து மகிழ்ந்தாள், பார்வதி.
'மகனே, இந்த மலர்களின் சக்தி அபூர்வமானது. இந்த மலர்களுடன் நீ இங்கேயே தங்கியிரு. உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அளித்து வா...' என்றாள்.
இதையடுத்து அவர், தன் தும்பிக்கையை வலமாக வளைத்து, வலம்புரி விநாயகராக, பாதிரி மலர்களுடன் அருள் தந்தார். எவ்வளவு கஷ்டத்திலும் வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தீராத கஷ்டம் உள்ளவர்கள், ஆயுதமில்லாத இவரைத் தரிசித்து வாருங்கள்.
தி. செல்லப்பா
