தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குழந்தை வளர்ப்பில் கவனம்...

குழந்தை வளர்ப்பில் கவனம்...

குழந்தை வளர்ப்பில் கவனம்...


PUBLISHED ON : அக் 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 30 - கந்த சஷ்டி

குழந்தைகளை தாய் எப்படி வளர்க்கிறாளோ, அதன்படி தான் அவர்களின் எதிர்காலம் அமையும் என்பதற்கு உதாரணம் தான், சூரசம்ஹார திருவிழா. பத்மாசுரன் எனும் அசுரனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியன்று, சம்ஹாரம் செய்தார், முருகப்பெருமான்.

காசியபர் முனிவருக்கு அதிதி, திதி என்ற இரண்டு மனைவியர். அதிதி பெற்ற பிள்ளைகள் நற்குணமுள்ளவர்கள். இதனால், இவர்கள் வானுலகில் தேவர்களாகும் அந்தஸ்து பெற்றனர். திதி பெற்ற பிள்ளைகள், அசுர குணமுள்ளவர்கள்.

தேவர்களின் குருவாக பிரகஸ்பதியும், அசுரர்களின் குருவாக சுக்ராச்சாரியாரும் நியமிக்கப்பட்டனர். அசுரர்களை விட தேவர்கள் புகழுடன் விளங்குவது, சுக்ராச்சாரியாருக்கு பிடிக்கவில்லை. தன் மாணவர்களை உயர்த்த, குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தார்.

அசுரர்களின் தலைவனாக அசுரேந்திரன் என்பவனை நியமித்தார். அவனது மனைவி மங்களகேசினி. இவர்களுக்கு சுரசை என்ற மகள் பிறந்தாள். அவளிடம், 'மகளே... நீ, நம் அசுர குலம் நீடுழி வாழ, ஒரு தியாகம் செய்ய வேண்டும். காசியபர் வசிக்கும் காட்டிற்கு சென்று, அதன் நடுவில் அரண்மனையை உருவாக்கு. பேரழகு மிக்கவளாக உன்னை மாற்றிக் கொள். காசியபரை மயக்கு.

'அவர் சிறந்த தபஸ்வி என்பதால், அவர் மூலம் பிறக்கும் குழந்தைகள் வலிமை மிக்கவர்களாக இருப்பர். தாடியும், மீசையுமாக வயதான கோலத்தில் இருக்கும் அவரை அணுக கஷ்டமாக இருந்தால், அவரை ஒரு அழகனாக மாறச் சொல். அவர் மூலமாக நிறைய குழந்தைகளைப் பெறு.

'தவ வலிமை மிக்க அவரும், மாயங்கள் செய்வதில் வல்லவளான உனக்கும் பிறக்கும் பிள்ளைகள், யாராலும் அழிக்க முடியாதவர்களாக விளங்குவர். அப்படி நிகழ்ந்தால், நம் அசுர இனத்தை யாராலும் அழிக்க முடியாது...' என்றார்.

அவர் சொன்னபடியே அனைத்தும் நிகழ்ந்தது. அப்படி பிறந்தவர்களில் பத்மாசுரன், சிங்கமுகாசுரன், தாரகன் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் தந்தை காசியபரை அணுகி, தங்களின் பணி என்ன என்று கேட்டனர். 'சிவனை நினைத்து தவமிருந்து ஆன்மிக வாழ்வு வாழுங்கள். நிம்மதியாக இருப்பீர்கள்...' என்றார்.

அப்போது சுரசை குறுக்கிட்டாள்.

'இவர் சொல்வதைக் கேட்காதீர்கள். கடும் தவம் செய்து, சாகாவரம் பெறுங்கள். உங்களை யாரும் அசைக்க முடியாத வல்லமையைப் பெறுங்கள். வரம் தந்த தெய்வம் உட்பட அனைவரையும், உங்கள் கட்டுக்குள் வையுங்கள். எதிர்ப்பவர்களைக் கொல்லுங்கள்...' என்று துர்போதனை செய்தாள்.

பத்மாசுரன் மற்றும் அவனது சகோதரர்களுக்கு தாய் சொல்வதே சரியெனப் பட்டது. அவள் சொன்னதை சாதித்தும் காட்டினர். ஆனால், சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து உருவான முருகப்பெருமானால் அழிந்து போயினர்.

ஆன்மிக வாழ்வு மட்டுமே நிரந்தர இன்பம் தரும். போலியான, உலக இன்பங்கள் தற்காலிகமானவையே. இது சுரசைக்கு புரியவில்லை. இதனால், தன் பிள்ளைகள் எல்லாரையும் அவள் இழந்தாள்.

பத்மாசுரனின் கதையைப் படித்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நல்வழி காட்டுங்கள். நல்லதைக் கற்றுக் கொடுங்கள். கந்தசஷ்டி உணர்த்தும் தத்துவம் இதுவே.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us