PUBLISHED ON : ஏப் 15, 2012

பிரசவம் என்பது, பெண்களுக்கு மறு பிறவி என கூறுவதுண்டு. வயிற்றில் கரு உருவானதிலிருந்து, பத்து மாதங்கள் கடந்து, குழந்தை வெளியில் வரும் வரை, பெண்களுக்கு ஏற்படும் வலியையும், துன்பத்தையும், வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
பிரசவத்துக்காக, உலகில் உள்ள மற்ற பெண்கள் அனுபவிக்கும் வேதனையை விட, பல மடங்கு அதிகமான வேதனையை அனுபவித்திருக்கிறார், போலந்து நாட்டைச் சேர்ந்த, ஜோயான்னா கிறிசிஸ்டொனெக். வயது: 31. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, மூன்று கருக்கள் உருவாகியிருப்பது தெரிய வந்தது. ஐந்து மாதத்திலேயே, திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வயிற்றில் இருந்த மூன்று குழந்தைகளில், ஒரு குழந்தை இறந்தே பிறந்தது.
ஜோயான்னாவுக்கு சில பிரச்னைகள் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு வலி ஏற்பட்டால், மீதமுள்ள இரண்டு குழந்தைகளும் இறந்தே பிறக்கும் அபாயம் <உள்ளதாகவும், தெரிவித்தனர் டாக்டர்கள்.
ஜோயான்னா, சில கடினமான முயற்சிகளை மேற்கொண்டால், மீண்டும் அவருக்கு பிரசவ வலி ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், இரண்டு குழந்தைகளும், உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக, ஜோயான்னா என்ன செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறிய போது, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கடும் அதிர்ச்சியாகி விட்டது. இன்னும் சில மாதங் களுக்கு, ஜோயான்னா, சற்று செங்குத்தான நிலையில் (கிட்டத்தட்ட தலைகீழாக) படுத் திருக்க வேண்டும் என்பது தான், டாக்டர்கள் கூறிய அந்த அதிர்ச்சி செய்தி. 30 டிகிரி கோணத்தில் சாய்வாக அமைக்கப்பட்ட படுக்கையில், ஜோயான்னா படுத்திருக்க வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும்போது, சாதாரணமாக படுப்பது, அமர்வது, எழுந்திருப்பது, நடமாடு வதே மிகவும் சிரமம். இதில், தொடர்ந்து சில மாதங்களுக்கு தலைகீழாக படுத்திருக்க வேண்டும் என்றால், எவ்வளவு சிரமமாக இருக்கும்? ஆனாலும், ஜோயான்னா இதற்கு சம்மதித்தார்.
இதற்கு பின், 75 நாட்கள், படுக்கையிலேயே, சற்று தலைகீழான நிலையில் படுத்திருந்தார். அந்த நிலையிலேயே, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அந்த அவஸ்தைக்கு பின், பிரசவம் நடந்தது. ஜோயான்னாவின் வயிற்றில் இருந்து, இரண்டு குழந்தைகளும் பத்திரமாக வெளியில் எடுக்கப்பட்டன.
அவற்றில் ஒரு குழந்தை ஆண். மற்றொன்று பெண். ஆண் குழந்தைக்கு இக்னசி என்றும், பெண் குழந்தைக்கு இகா என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஜோயான்னா கூறுகையில், '24 மணி நேரமும், தலைகீழாக இருக்க வேண்மென, டாக்டர்கள் கூறியதும், முதலில் யோசித்தேன். ஆனாலும், எப்பாடு பட்டாவது, குழந்தை பெற்றுக் கொள்வது என, முடிவு செய்து விட்டேன். குழந்தைகள் பிறந்ததும், அவற்றின் முகங்களை பார்த்த அடுத்த நொடியே, அத்தனை அவஸ்தையும் மறந்து விட்டது. <<குழந்தைகள் முகங்களை பார்த்த அந்த நொடி தான், என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நொடிகள். தாய்மையின் மகத்துவத்தை புரிய வைத்த நொடிகள் அவை...' என, உணர்ச்சிவசப்படுகிறார்.
பிரசவம் என்பது, பெண்களை பொறுத்தவரை, ஒரு தவம். அதிலும், இந்த போலந்து பெண், பிரசவத்துக்காக, 75 நாட்களாக ஒரு தலைகீழ் தவமே இருந்திருக்கிறார்.
***
