தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நான்காயிரம் பணமும், நல்லாயிருந்த பையனும்!

நான்காயிரம் பணமும், நல்லாயிருந்த பையனும்!

நான்காயிரம் பணமும், நல்லாயிருந்த பையனும்!


PUBLISHED ON : ஜூலை 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகரின் அழகை, வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தான், பிரபு.

அவன் பேன்ட் பாக்கெட்டில், 4,000 ருபாய் இருந்தது. கை விட்டு, பணத்தை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டான். எதையோ சாதித்த மாதிரி, 'த்ரில் லிங்' உணர்வு அவனுள்! 'சபாஷ்' என்று தன்னைத்தானே மனதுக்குள் பாராட்டினான்.

'முதலில், ஓட்டலில் மூக்கு முட்ட சாப்பாடு; அப்புறம், சினிமா, புதுசா ரெண்டு, 'செட்' டிரஸ். எல்லாத்தையும் முடித்து, இரவு ஊருக்கு போயிடணும். அப்பா - அம்மாவுக்கு வேட்டி, சேலை வாங்கணும். மிச்ச காசை வச்சு, நண்பர்களோடு ஜாலியாய் ஊர் சுற்ற வேண்டியது தான்! கையில் இவ்வளவு பணத்தை பார்த்தால், நண்பர்கள் எல்லாம் திகைச்சுப் போயி, 'ஏதுடா ஏதுடா'ன்னு சுத்தி சுத்தி வருவானுங்க.

'முழுசா ஒத்தை ரூபாய் பாத்திராத பசங்க, ஆயிரக்கணக்கான பணத்தைப் பாத்தால், மயக்கம் போட்டு விழுந்தாலும், ஆச்சரியப்படறதுக்கு இல்ல...' என்று நினைத்தவன், அவர்கள் எப்படி மயக்கம் போட்டு விழுவர் என்று கற்பனை செய்து பார்த்து, அது கடை வீதி என்றும் பாராமல், 'குபுக்' என, சிரித்தான்.

வீதியில் சென்று கொண்டிருந்தோர், திரும்பி பார்க்க, சிரிப்பை கட்டுப்படுத்தி, தலைகுனிந்து நடந்தவன், சட்டென்று, எதிரில் வந்த நபர் மீது மோதினான்.

நிமிர்ந்து பார்த்ததும், அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. உடல் வெட வெடத்து, வியர்வை பொங்கி வழிய, விழிகளில் பயம் எட்டிப் பார்த்தது. திரும்பி ஓடி விட நினைத்தான்.

''அந்த பக்கம் போலீஸ் இருக்கு,'' என்று எச்சரித்த ரங்கசாமி, ''வா... என் கூட...'' என்றார்.

ஓடும் எண்ணத்தை கைவிட்டு, அவரை பின்தொடர்ந்தான். அருகில், ஓட்டல் தென்பட, உள்ளே நுழைந்தார். அவன் தயங்கி நிற்பதைப் பார்த்து, ''பிகு பண்ணாத... டிபன் சாப்பிட்டிருக்க மாட்ட... நானும் சாப்பிடல. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்,'' என்று அவனை கட்டாயப்படுத்தி, ஓட்டலுக்குள் அழைத்துப் போனார்.

''என்ன வேணும்?'' என்று கேட்டு வந்த சர்வரிடம், ''ஒரு செட் இட்லி, ஒரு செட் பொங்கல், வடை,'' என்று ஆர்டர் கொடுத்தார்.

''என்னடா... தலைகவிழ்ந்தபடியே இருக்க... என்னைப் பாக்கப் பிடிக்கலையா...'' என்று கேட்டார்.

அவனுக்கு பேச்சே வரவில்லை; தலைகுனிந்தபடியே, சட்டை பாக்கெட்டிலிருந்து, 4,000 ரூபாயை எடுத்து, டேபிள் மேல் வைத்தான்.

''பொது இடத்துல பணத்தை இப்படி பளிச்சுன்னு வெளியில எடுக்கக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்; பாக்கெட்ல வை,'' என்று கடிந்து கொண்டார்.

சர்வர் சுடச்சுட கேட்டதை கொண்டு வந்து வைத்து, ''வேற...'' என்றான்.

''சாப்பிட்டுட்டு சொல்றோம்,'' என்று அனுப்பி, பொங்கல் பிளேட்டை பிரபு முன் நகர்த்தி, ''உனக்கு பொங்கல், வடைன்னா ரொம்ப பிடிக்குமே... சாப்பிடு,'' என்றார்.

அவன் சாப்பிடவில்லை.

''நீ சாப்பிடலன்னா, நானும் சாப்பிட மாட்டேன். நான் பட்டினி கிடந்தா, பரவாயில்லயா...'' என்றதும், மெதுவாக பொங்கலை எடுத்து விழுங்கினான்.

''நீ சாப்பிடலங்கறதுக்காக, சட்னி, சாம்பாருக்கெல்லாம் பில்லுல குறைக்க மாட்டாங்க; அதுக்கும் சேத்து தான் காசு. வீட்ல அக்காகிட்ட அதிகாரம் செய்து, சட்னி அரைக்கச் சொல்லி கேட்ப... இப்ப என்ன தயங்கற. சாப்பிடு,'' என்று சொல்லி, சாப்பிட வைத்தார்.

காபியும் வாங்கிக் கொடுத்து, பில்லுக்கு பணம் கொடுத்து வெளியில் வந்ததும், துணிக்கடைக்கு அழைத்துப் போனார்.

''உனக்கு பிடிச்ச மாதிரி, ரெண்டு செட் சட்டை, பேன்ட் எடுத்துக்க,'' என்றார்.

வேண்டாமென தலையசைத்து மறுத்தான். எந்த நேரம், என்ன நடக்குமோ என்று அவன் மனம், 'திக் திக்' என்று அடித்தது.

''நீ வேணாம்ன்னாலும் நான் வாங்குவேன்; உன்னோடது எல்லாம் பழசா போச்சு. இப்ப போட்டிருக்கறது உட்பட,'' என்று கூறி, ரெடிமேட் ஆடைகளை வாங்கினார்.

''இந்தக் கலர் பிடிச்சிருக்கா... அளவு சரியாயிருக்கான்னு வச்சுப்பாரு,'' என்று பார்த்து பார்த்து வாங்கினார்.

அப்போதும், அவன் பணத்தை கொடுக்க முயன்றான். ''வைடா... நான் என்னமோ வெறுங்கையா வந்த மாதிரி...'' என்று கடிந்து கொண்டவர், ''உன் கூட கொஞ்சம் பேசணும்,'' என்று அருகிலிருந்த பூங்காவுக்கு அழைத்துப் போனார்.

நிழலில் இருந்த பெஞ்சில், தூசு தட்டி அமர்ந்தவர், அவனையும் உட்காரச் சொல்ல, அவன், கை கட்டியபடி நின்றான். கைப்பிடித்து இழுத்து உட்கார வைத்ததும், விசும்பினான்.

''என்னடா இது... கண்ணைத் துடை; நான், உன்னை அடிக்கப் போறனா இல்ல திட்டப் போறனா... சும்மா ரெண்டு வார்த்தை... அதைகூட பேசணும்ன்னு அவசியமில்ல தான்! ஆனா, எனக்கு, உன்னை பிடிச்சிருக்கு; என் மனைவிக்கு உன் மேல் பாசம். பத்து வயசா இருக்கும் போதே, கடை வேலைக்கு வந்துட்ட... ஏழு, எட்டு வருஷமா குடும்பத்துல ஒருத்தனா இருக்க...

''மத்த பசங்க மாதிரி முரடான, திருடனா இல்லாம, அப்பாவியாவும், சுறுசுறுப்பாவும் இருந்த... அதனால, உன்னை எங்களுக்கு பிடிச்சு போச்சு. அப்படியே, கொஞ்சம் வருஷம் போனதும், உனக்கொரு கல்யாணத்தை செய்து வச்சு, தனிக்கடை போட்டுக் கொடுக்கணும்ங்கற அளவுக்கு யோசிச்சிருந்தோம். ஆனா, 'நான் ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல; மத்தவங்க போல சராசரி தான்'னு செய்துட்டியேடா... ஒரு நொடி திக்குன்னு ஆயிருச்சு!

''நேத்து ராத்திரி கடையடைச்சு, சாப்பிட்டு, தூங்க போறவரைக்கும் உன் பேச்சிலும், நடவடிக்கையிலும் துளி கூட சந்தேக ரேகை தெரியலயடா... எங்க கண்ணுல மண்ணை தூவி, அதிகாலையில பஸ் ஏறி வந்துட்டியே... எனக்கு, இந்த, 4,000 ரூபாய் பெருசு இல்ல; ஆனா, கண்ணாடி பாட்டிலை, தரையில் போட்டாப்புல, உம்மேல நாங்க வச்சிருந்த நம்பிக்கைய சிதறடிச்சுட்டேயே... அதுக்காக கூட நான் உன்னை தேடி ஓடிவரலை. இன்னமும், உன் பேரில் உள்ள அக்கறையும், பிரியத்தாலும்தான் வந்தேன். நீ யாருக்கும் தெரியாம வந்தது மாதிரி தான் நானும் வந்திருக்கேன்.

''பணம் போனால் சம்பாதிச்சுக்கலாம்; பேர் கெட்டுப்போனால் அவ்வளவுதான், வாழ்க்கையே போயிடும். இந்த சின்ன வயசுல திருட்டுப் பட்டம் விழுந்திருச்சின்னா, அது, நெத்தியில பச்சை குத்தினாப்ல, போற இடமெல்லாம் காட்டி கொடுத்துடும். கல்லாவுல கை வச்சவன்னு தெரிஞ்சா, எந்த கடையிலும் உன்னை வேலைக்கு எடுக்க மாட்டாங்க. திருடிய பணத்துல, எத்தனை நாளைக்கு சுகமா இருக்கமுடியும் சொல்லு... ஒரு வாரம் இல்ல பத்து நாள்ல தீர்ந்து போனதும், அடுத்த நாள் செலவுக்கு என்ன செய்வ... திருடுறதுல ருசி கண்டுட்டா, அப்புறம் எங்க போனாலும், கை அரிக்கும்; உழைச்சு, கஷ்டப்பட்டு சம்பாதிக்க தோணாது. குறுக்கு வழியில பணம் பார்க்க ஆசை வந்து, உழைப்பிலிருந்து கவனம் திசை திரும்பிப் போகும். கெட்டு சீரழிஞ்சுடுவடா...

''இன்னைக்கு ஒரு வேகத்துல காசை திருடினது, இந்த நேரத்துக்கு சாகசமா தெரிஞ்சாலும், பின்னால நினைச்சுப் பாக்கும்போது வேதனையும், வருத்தமும் ஏற்படும். குற்ற உணர்வு வந்துடும். அது மட்டுமில்ல, எங்கே போனாலும், யாரோ உன்னை துரத்துவது போலவே பயம் வரும். யாரைப் பாத்தாலும் 'திருடினது தெரிஞ்சு, அடிக்க வர்றாங்களோ, பிடிக்க வர்றாங்களோ'ன்னு சதா ஒரு பதற்றத்தோடு, திரிய வேண்டியிருக்கும். கடைசி காலம் வரைக்கும், இது முள்ளாய் மனசுல உறுத்தும். இதெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன். அப்பாவுக்குத் தெரியாம அவர் சட்டைப் பாக்கெட்டிலிருந்து, 10 ரூபாய் திருடி, சினிமா பாத்துட்டேன். அது எத்தனையோ வருஷத்துக்கு அப்புறமும், இன்னமும் என் நெஞ்சில் குத்துது.

''உனக்கு அப்படி நேர்ந்துடக் கூடாதுன்னுதான் வந்தேன். புரியுதா... பணத்தோடு, நீ தனியா உங்க ஊருக்குப் போனா, 'என்னாச்சு, ஏன் வந்தே'ன்னு உங்க அப்பா, அம்மா கேட்டா, என்ன பதில் சொல்வே... 'கல்லாவுல, கை வச்சுட்டு வந்தேன்'னு நேர்மையா உன்னால பதில் சொல்ல முடியுமா... என் மேல ஏதாவது பழி போடுவே... அங்கயே பொய் ஆரம்பிச்சுடும்...'' என்று அவர் முடிக்கும் முன், ''இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பேசிக்கிட்டிருக்கப் போறீங்க முதலாளி... பஸ்சுக்கு நேரமாவுது,'' என்றான் பிரபு.

''அட அறிவு கெட்டவனே... நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்னு உனக்கு புரியலயா... நான் வேலைமெனக்கெட்டு உனக்கு வெட்டி உபதேசம் செய்துகிட்டிருக்கேன்னு நினைச்சியா... வேணும்டா... பிடிச்ச கையோடு, ரெண்டு சாத்து சாத்தி பணத்தை பிடுங்கிட்டு விரட்டாம, கூப்பிட்டு வச்சு பேசிகிட்டிருக்கேன் பாரு...'' என்றார் கோபமாக!

''கோபப்படாதீங்க முதலாளி... என்னை பாத்ததும், அடிக்காம, திட்டாம, ஓட்டலுக்கு கூட்டிப்போய் டிபன் வாங்கி, என் பசியாத்தும்போதே நான் திருந்திட்டேன். 'காலம் முழுக்க நல்லவனா இருக்கணும்; கனவுல கூட தப்பு செய்யக் கூடாது'ன்னும் முடிவு செய்துட்டேன். நீங்க என்னை மன்னிச்சு சேர்த்துக்குவிங்கன்னு நம்பிக்கையும் வந்திருச்சு. இதுக்கு மேல என்ன முதலாளி... நேரத்துக்கு கடை திறக்க வேணாமா... எழுந்து வாங்க... இந்த, 4,000 ரூபாய்க்கு கடைக்கு ஏதாவது சரக்கு வாங்கிட்டு போவோம்,'' என்று தெளிவாக கூறி, முதலாளி போல பிரபு முன்னே நடக்க, 'அடப்பாவி' என்று சிரித்தப்படி, கடைப்பையன் போல, அவனை பின் தொடர்ந்தார், ரங்கசாமி.

எஸ்.மவுலீஸ்வரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us