
பணம் இருந்தாலும் சரி, ஏழ்மையில் தவித்தாலும் சரி... குழந்தை பிறக்கவில்லை என்றால், ஒரு பெண் படும் மனக்கஷ்டத்துக்கு அளவே இருக்காது. இனி, நமக்கு ஏது குழந்தை என்று விரக்தியின் உச்சியில் இருப்பவர்களுக்கான மருந்து தான், கருட பிரசாதம்.
ஆடி மாதம், சுவாதி நட்சத்திரம், கருட ஜெயந்தி, இதே மாத வளர்பிறை பஞ்சமி திதி, கருட பஞ்சமி. சிலர், திதி அடிப்படையிலும், சிலர் நட்சத்திர அடிப்படையிலும் கருடன் பிறப்பைக் கொண்டாடுவர். இவர்களில் குழந்தை இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது, பஞ்சமி திதியைத் தான்.
ஏனெனில், குழந்தை பிறப்புக்கு ஜாதக ரீதியாகவோ அல்லது புறசூழ்நிலைகள் காரணமாகவோ, தடை இருக்கும். அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாம் நாளே, பஞ்சமி. பஞ்ச என்றால், ஐந்து என்றும், தட்டுப்பாடு என்றும் பொருள்படும். ஐந்து வகை காரணங்கள், கர்ப்பம் தரிக்க இயலாத ஒரு பெண்ணுக்கு தட்டுப்பாடாக, அதாவது தடங்கலாக இருக்கிறது.
முதல் வகை தடங்கல், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஜாதக அடிப்படையிலானது. இதனால் தான், பஞ்ச என்ற சொல்லைக் கொண்டு, இவை ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கம் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஐந்திலும் முக்கியமானது, திதி. குடும்பத்தில் நமக்கு முன் வசித்தவர்களும், இப்போது இருப்பவர்களும், முன்னோருக்குரிய திதியை சரியாகத் தராமல் இருந்திக்கலாம். குழந்தை பிறப்புக்கு பிதுர் சாபம் எனப்படும், முன்னோர்களின் அதிருப்தியின்மை முக்கிய காரணம்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள். இந்த புறசூழ்நிலைகள் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபடலாம்.
இந்த இரண்டு தடைகளையும் உடைக்கும் தீர்வு தான், கருட வழிபாடு. ஒரு வயல் மேல் கருடன்கள் பறந்தால், அந்த நிலத்துக்கே நல்லதாம். அங்கே, பூச்சிகள் குறைந்து தரமான பயிர் விளையும். சிறந்த உணவை சாப்பிட்டால், கர்ப்பம் தரிக்கும் சக்தி அதிகரிக்கும்.
இதற்கு ஐவகை பூதங்களின் ஒத்துழைப்பு தேவை. இவற்றால் ஏற்படும் தடையை உடைக்க, அமாவாசையின் ஐந்தாம் நாளான பஞ்சமியை, கருட வழிபாட்டுக்கு தேர்ந்தெடுத்தனர். ஐந்து நாளிலும் ஒவ்வொரு வகை தடை அகன்று விடும்.
கர்ப்பவதிகளுக்கு, பஞ்சமி திதியன்று வளைகாப்பு நடத்தினால், அறிவுள்ள குழந்தை பிறக்கும்; பிரசவம் எளிதாக இருக்கும் என்பது நம்பிக்கை. சிலருக்கு, ராகு, கேது எனும் நாக தோஷத்தால், குழந்தை பிறப்பு தடைபடும். நாகங்களை ஒடுக்குவதும், கருடன் தான்.
கருட பஞ்சமியன்று, அமிர்தகலசம் எனும் நைவேத்யம் தயாரிப்பர். வெல்லப்பாகுவில், பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்த கலவை, நெய், ஏலக்காய் துாள் சேர்த்து, வாணலியில் இட்டு கிளற வேண்டும். இந்த மாவை மோதகம் மற்றும் கொழுக்கட்டை அளவுக்கு பிடித்து, இட்லி தட்டில் துணி விரித்து, அவிக்க வேண்டும்.
கருடன் படம் முன், இதை நைவேத்யம் செய்து சாப்பிட்டால், குழந்தை பிறப்பு தடைகளை நீக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஐதராபாத்திலிருந்து, 28 கி.மீ., துாரத்திலுள்ள சில்கூர் கிராமத்தில், பாலாஜி மந்திர் - வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கு, ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, 5,000 பெண்களுக்கு, கருட பிரசாதம் தரப்படுகிறது. இங்குள்ள கருடனுக்கு படைக்கும் நைவேத்தியமே அது.
இந்தக் கோவிலுக்கு சென்று கருடனையும், பெருமாளையும் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆக., 2, கருட பஞ்சமியன்று, கருடனை வழிபட்டு, நற்பலன் பெறுங்கள்.
தி. செல்லப்பா

