
இளம் பெண்ணின் சீரிய முயற்சி!
எனக்கு தெரிந்தவரின் பெண், பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றதாக கேள்விப்பட்டிருந்ததால், 'எந்த கல்லுாரியில், என்ன கோர்சில் சேர்ந்திருக்கே...' என, கேட்டேன்.
'நான் பரீட்சை எழுதியிருந்த நேரம், திடீரென அப்பா - அம்மா இருவருக்கும் சேர்ந்தாப்ல உடல் நலமில்லாம போயிடுச்சு. தச்சு வேலை செய்து வந்த அப்பாவால், தொடர்ந்து அதை செய்ய முடியாத நிலை.
'கடையை மூடினால், உதவியாளர்கள் வேலை இழப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் இருந்தது. தச்சு தொழிலை நான் எடுத்து நடத்த முடிவு செய்தேன்.
'அப்பாவிடம் வேலை கற்றவர்களின் துணையுடன், வழக்கம்போல், கதவு, ஜன்னல்கள் செய்வதுடன், பர்னீச்சர் மார்ட்களில், 'ஆர்டர்' பெற்று, கட்டில், மேஜைகள் செய்து தர ஆரம்பித்தேன்.
'இதனால், பெற்றோருக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிவதுடன், தம்பி, தங்கையை தொடர்ந்து படிக்க வைக்கவும் முடிகிறது...' என்றார்.
பொதுவாக, பெண்கள், தச்சு வேலை செய்வதில்லை. அந்த நடைமுறையை மாற்றி, பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என, நிரூபித்து வரும் அந்த இளம் பெண், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, என் கண்களுக்கு தோன்றினார்.
- எஸ். சேதுராமன், திருவேடகம், மதுரை.
ஏமாறாதே, ஏமாற்றாதே!
ஐநுாறு ரூபாய்க்கு சில்லரை மாற்ற, கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், சற்று தள்ளி காத்திருந்தேன். அப்போது, மதுப் பிரியர்கள் மூவர், தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்க நேர்ந்தது.
'அவனுகளுக்கோ கண்ணு தெரியாது. வேற வேலைக்கா போகப் போறானுக. அதனால, கூலியை அதிகம் கொடுக்காத பங்காளி...' என்றான், ஒருவன்.
'வேன் வாடகை, டிரைவர் மற்றும் டீசல் செலவு. இது இல்லாம அவனுக பாட்டுங்குற பேர்ல கத்துறானுங்க. அதுக்கான பேட்டரி செலவுன்னு கணக்கு பார்த்தா, நமக்கு ஒண்ணும் மிஞ்சாதுப்பா...' என்றான், மற்றொருவன்.
கடையில் கூட்டம் குறைந்து, சில்லரை வாங்கி வரும் வழியில், வேன் ஒன்றில், பார்வை இல்லாதவர்கள் நடத்திய பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது தான், அந்த, 'குடிமகன்கள்' பேச்சின் உண்மை புரிந்தது.
வாகனங்களில் பாட்டுக் கச்சேரி நடத்தி, பிச்சை எடுக்கும் செயலில் மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்தும், மாபியாக்கள் அவர்கள் என்று. தர்மம் செய்வதாய் நினைத்து, நாம் போடும் பணத்தில், ஒரு கும்பல் கும்மாளம் அடிப்பதை நினைத்து, வருத்தம் தான் ஏற்பட்டது.
- ஜே.பி. மதுபாலன், திண்டுக்கல்.
கொஞ்சம் யோசிக்கணும்!
சமீபத்தில், நண்பனின் திருமணத்திற்கு செல்ல, காரைக்குடியிலிருந்து - மதுரைக்கு, தனியார் பேருந்தில் பயணம் செய்தேன். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண்கள், ஆண்கள், சிறுவர் - சிறுமியர் என, அனைவரும் நின்றபடி பயணித்தனர்.
அதில், சில பெண்கள், மொபைல் போனில் குடும்ப பிரச்னை மற்றும் காலை முதல் இரவு வரை நடந்த குடும்ப நிகழ்வுகளை மிக சத்தமாக பேசி, சிரிப்பில் மூழ்கினர்.
ஒரு சிறுவன், உடல் உபாதையை சொல்லியும், அவனது அம்மா, காது கொடுத்து கேட்பதாக இல்லை. சில நிமிடத்தில், நின்றிருந்த சிறுவன், என் மீதும், அருகில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் வாந்தி எடுத்தான். என்னால் பயணத்தை தொடர முடியாமல், பஸ்சிலிருந்து இறங்கி விட்டேன்.
இவ்வளவு நடந்தும், 'சார், தெரியாமல் நடந்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்...' என, குழந்தையின் பெற்றோர் கேட்கவில்லை. நண்பனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் திரும்பினேன்.
மனிதர்கள் தம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், பலருக்கு கேட்கும்படி, உரக்க மணிக்கணக்கில் வீண் பெருமை பேசலாமா? உடன் அழைத்து வந்தவர்களை மறந்து, உடன் பயணிப்பவர்களுக்கும் மிக இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல் முறையா? இவர்கள் எப்போது தான் திருந்துவரோ?
— டாக்டர் பொன்னு சேதுராஜ், அப்போலோ மருத்துவமனை, காரைக்குடி.

