PUBLISHED ON : ஜூலை 31, 2022

ராமாயண தொடர் ராமருடன் இரண்டரை மணி நேரம்!
டிச., 31, 1987, 'குமுதம்!' பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் ராமானந்த் சாகர் எழுதி இயக்கி தயாரித்த, ராமாயணம் நெடுந்தொடர், ஜன., 26 1987ல் துார்தர்ஷன் 'டிவி'யில் ஒளிபரப்பானது. ஹிந்தி தெரியாதவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த தொடரை பார்த்து ரசித்தனர்.
சொந்த விஷயமாக நானும், மனைவி ரஜனியும், மும்பை செல்ல நேர்ந்தது. 1987 தீபாவளி அன்று, தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினோம். தீபாவளிக்கு இரண்டாம் நாள், மும்பை சேர்ந்தோம்.
சென்னையில் இருந்து கிளம்பும் முன், நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் என்பவரை தொடர்பு கொண்டு, 'டிவி தொடரில் ராமர், சீதை பாத்திரங்களில் நடிக்கும் நடிகர் - நடிகையை நான் பேட்டி எடுக்க விரும்புகிறேன்...' என்றேன்.
உடனே, ராமானந்த் சாகரிடம் பேசி ஏற்பாடுகள் செய்திருந்தார், ஜி.வி., 'டிவி' ராமாயண தொடரில் ராமராக நடித்துவரும் அருண் சந்திரபிரகாஷ் கோயலை, மும்பை, வர்ஸோவா பகுதியில், அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
அருண் கோயல் கூறுகிறார்:
ராமாயணம் தொடர் எடுக்க முடிவு செய்தபோது, முதலில் எனக்கு, 'மேக் - அப்' பரிசோதனை செய்தனர். ஒரு கட்டத்தில், ராமர் வேடத்திற்கு நான் லாயக்கில்லை என்று சொல்லி, வேறு ஒருவரை போட முடிவு செய்தனர். லட்சுமணன், பரதன் ஆகிய இருவரில் ஒருவராக நடிக்க கேட்டனர்.
'நடித்தால், ராமாராக நடிப்பேன். இல்லை என்றால் இத்தொடரில் நான் நடிக்க மாட்டேன்...' என்றேன். ராமர் பாத்திரம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது.
என் மனைவி கூட, 'அருண் சாதாரணமாக இருப்பதற்கும், ராமராக நடிப்பதற்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை...' என்பார். குடிக்கும் பழக்கம் முன்பு இருந்தது; இப்போது இல்லை. ராமராக நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு குடிக்க மனமில்லை. குடிக்க கூடாது என்று யாரும் எனக்கு சொல்லவில்லை. எனக்கு தோன்றாமல் போய் விட்டது.
ராமர் பாத்திரத்திற்கு இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். உடம்பு, மனம் இவ்விரண்டிலும் அந்த கதாபாத்திரமாக இருக்க வேண்டும். உடல் தோற்றத்தை பொறுத்தவரையில் கொஞ்சம் அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்; கட்டுப்பாடு பொருத்தவரையில் பதட்டம் இல்லாமல், கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல, ராமரின் தெய்வீக சிரிப்பு, படம் முழுக்க அதே மாதிரி ஆகிவிட்டது. ராமரின் காதல் கூட மிகவும் பண்பாடோடு இருக்க வேண்டும். சொல்லப் போனால் ராமாயணத்தில், அவருக்கு காதலே கிடையாது.
பாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஓரளவு நன்றாகவே பாடுவேன். முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும், பல மேடைகளில் பாடி இருக்கிறேன். இந்த ராமாயண தொடரில் நடிப்பது, என் அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி, என்றார்.
'டேப்ரிக்கார்டரில்' அருண் கோயல் பேசியதை பதிவு செய்து, அதை போட்டு கேட்டு கட்டுரையை எழுதினேன்.
சீதையாக நடித்த தீபிகா சிக்லியா பேட்டி!
ராமராக நடித்த அருண் கோயலை சந்தித்த அதே நாளில், சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவை, அன்று மாலை மும்பை, பேண்ட்ரா என்ற பகுதி, கிர்னார் அப்பார்ட்மென்ட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
வெளிர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேன்ட், கோடு போட்ட வெள்ளை பனியன், 'பாப்' செய்யப்பட்ட கூந்தல், மிகவும் மெல்லிய தங்கச்சங்கிலி, சில வளையல்கள் அணிந்திருந்தார்; வேறு அலங்காரம் எதுவும் கிடையாது.
ராமானந்த் சாகர் இயக்கி தயாரித்த, 'விக்ரம் அவுர் பேதால்' என்ற, 'டிவி' தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், தீபிகா.
தீபிகா பிறந்து வளர்ந்தது, மும்பையில் தான். 1978 - 79ம் ஆண்டில், அவரது குடும்பம், சென்னையில் இருந்ததால் கொஞ்சம் தமிழ் புரியும்.
சீதைக்கு திருமணமான போது, 14 வயது. அவள் உடலை விட்டு சொர்க்கத்திற்குப் போகும் போது, வயது 28. அதாவது, அந்தப் பாத்திரம் காண்பிக்கப்பட வேண்டியது, 14 ஆண்டுகளுக்கு தான். அங்கு வந்திருந்த பெண்களிடையே தீபிகாவுக்கு தான் அந்தப் பாத்திரம் பொருத்தமாக இருக்கும் என, ராமானந்த் சாகர் முடிவு செய்து இருக்கிறார்.
பேட்டி ஆரம்பிக்கும்போது, 'நாம் பேசுவதை, 'டேப் ரிகார்டரில்' பதிவு செய்து கொள்கிறேன். அப்போது தான் எனக்கு எழுத வசதியாக இருக்கும்...' என்றேன்; அவரும் ஒப்புக்கொண்டார். 'டேப் ரிகார்டரை' தன் மார்போடு அணைத்த மாதிரி வைத்து பேசினார்.
பேட்டி முடிந்ததும், 'மேடம் எதற்கும் சோதித்து பார்த்து விடலாம். இல்லாவிட்டால் கஷ்டம்...' என்றேன்.
'எனக்கு, 'ரெக்கார்டிங்' பண்ணத் தெரியும்...' என்று சொல்லி விட்டார்.
தீபிகாவிடம் இருந்து விடைபெற்று, நான் தங்கி இருந்த இடத்திற்கு வந்து, 'டேப்ரிக்கார்டரை' போட்டு பார்த்தேன். எந்த சத்தமும் வரவில்லை. சென்னைக்கு வந்ததும் நெருங்கிய நண்பர் ஏவி.எம். குமரனை தொடர்பு கொண்டேன்.
'ராமர், சீதையாக நடித்தவர்கள், 'குமுதம்' இதழ் அட்டையில் வரப்போகின்றனர். ஆனால், எடுத்த பேட்டியை கேட்க முடியவில்லை. எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்...' என்றேன்.
ஏவி.எம்., ஸ்டுடியோவிற்கு வரச்சொன்னார்.
முதன்மை சவுண்ட் இன்ஜினியரை அழைத்து, 'எப்படியாவது, ரஜத் இந்த பேட்டியை எழுத உதவி செய்ய வேண்டும்...' என்று சொன்னார்.
மிகவும் கஷ்டப்பட்டு, 'டேப்'பின் ஒலியை, நான் கேட்டு எழுதுவதற்கு ஏற்ப அதிகரித்து கொடுத்தார், சவுண்ட் இன்ஜினியர்.
தமிழகத்திலிருந்து மும்பைக்கு சென்று, ஒரே நாளில், 'டிவி' மெகா சீரியல் தொடரில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிப்பவர் இருவரையும் பேட்டி கண்டு கட்டுரை எழுதிய, தமிழ் பத்திரிகையாளர் நானாகத் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
குக்கிராமத்தில் இருப்பவர்களும் படிக்கக் கூடிய முதலிரவு பிரச்னை...
— தொடரும்
எஸ். ரஜத்

