
எங்கே போனாலும், அரசு பஸ்களில் பயணிக்கும், எளிய மூத்த தம்பதி. தங்களுக்கு சொந்தமான கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துகளை, தானமாக கொடுத்ததுடன், மேலும் மேலும் தானமாக கொடுத்து, சுகம் காண்கின்றனர்.
மதுரை திருநகரை சேர்ந்தவர்கள், ஜனார்த்தனன் - ஜலஜா தம்பதி. மத்திய அரசு ஊழியர்களாக இருந்த, இவர்கள் இருவரும், தொண்டு செய்வதற்காகவே, விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற பின், கிடைத்த பணத்தை வைத்து, முதியோர் இல்லம் நடத்த முடிவு செய்து, மதுரை, திருநகரில், 5 கிரவுண்டு நிலத்தை வாங்கி போட்டனர். அதன் இன்றைய மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும்.
திடீரென, ஜனார்த்தனனுக்கு பார்வைக் கோளாறு ஏற்படவே, முதியோர் இல்லம் நடத்த முடியாது. எனினும், முதியோர் இல்லம் நடத்துவோர் யாருக்காவது இடத்தை கொடுத்து விட, முடிவு செய்தனர்.
அந்நேரத்தில், டாக்டர் பாலகுருசாமி உள்ளிட்ட, சில இளம் டாக்டர்கள் குழு ஒன்று சேர்ந்து, 'ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற அமைப்பை துவங்கினர். ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானோருக்கு ஆதரவு கொடுத்து, தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து, காப்பாற்றி வந்தனர். ஆனால், வாடகை கொடுக்க முடியாமலும், போதுமான இடவசதி இன்றியும் சிரமப்பட்டனர்.
இதைக் கேள்விப்பட்ட ஜனார்த்தனன் - ஜலஜா தம்பதி, தங்கள் இடத்தை, தானமாக கொடுத்ததோடு, தங்கள் செலவிலேயே பதிவும் செய்து தந்தனர்.
இடம் கிடைத்து விட்டது. இனி, இதில் கட்டடம் கட்ட வேண்டுமே என்ற நிலை வந்தபோது, இதே தம்பதி, மீண்டும் தங்களது வெளிநாட்டு, உள்நாட்டு உறவுகள், நட்புகளிடம் விஷயத்தை சொன்னதும், நிதி குவிந்தது; இரண்டு மாடி கட்டடமும் கட்டப்பட்டது.
கட்டடம் கட்டியாகி விட்டது. நோயாளிகள் படுக்க, படுக்கை வேண்டுமே என்ற சூழ்நிலையில், கொஞ்சமும் தயங்காமல், 50 கட்டில்கள் வாங்கிக் கொடுத்தனர். இதையெல்லாம் நிர்வாகம் செய்ய, இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும் என்ற போது, 'இந்தாருங்கள்...' என்று, அதையும் வாங்கிக் கொடுத்தனர்.
'இதுவும் கொடுப்பான்... இன்னமும் கொடுப்பான்...' என்ற கர்ணனை போல, தர்ம காரியத்திற்கு கொடுத்தபடியே இருக்கும் இந்த தம்பதி, ஒன்றும் பெரிய பணக்காரர்கள் அல்ல... மத்திய அரசு வழங்கும், ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள் தான்.
எங்காவது வெளியில் செல்ல வேண்டு மென்றால், 'கால் டாக்சி'யில் போனால் செலவாகும் என்று, 'டவுன் பஸ்'சில் தான் பயணிக்கின்றனர். வீட்டு வேலைக்கு, ஆள் கிடையாது. தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்கின்றனர்.
மாலை நேரங்களில், அறிவை பகிர்ந்துகொள்ள, அக்கம் பக்கத்திலிருக்கும் குழந்தைகளை அழைத்து, இலவச, 'டியூஷன்' எடுக்கின்றனர். பின், நேரம் கிடைக்கும்போது, 'ஐஸ்வர்யம் அறக்கட்டளை'க்கு விஜயம் செய்து, அங்குள்ளோரிடம் அன்பாக பேசி, ஆறுதல் வார்த்தை கூறுகின்றனர்.
தங்களுக்கு தெரிந்த யாரிடம் பேசினாலும், தர்மம் செய்ய வலியுறுத்தி, அந்த தர்மத்தை, 'ஐஸ்வர்யம் அறக்கட்டளை' உள்ளிட்ட, தொண்டு நிறுவனங்களை பெற செய்கின்றனர்.
இவர்களின் தயவால், தற்சமயம், 39 பேர், 'ஐஸ்வர்யம் அறக்கட்டளை'யில் தங்கி, கடைசி காலத்தை நிம்மதியாக கழித்து வருகின்றனர்.
அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் நிம்மதியாக வாழ்க்கையை கடக்க வேண்டும் என்றால், தர்மம் செய்வதை, சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளையும், தர்மம் செய்ய பழக்குங்கள்...
தேவைக்கு மேல் அல்ல, தேவைகளை குறைத்து, கொடுத்து பாருங்கள்... அதன் சுகமே தனி என்று சொல்லும், இந்த தம்பதியை வாழ்த்த விரும்புவோர்: 0452 - 2484100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தம்பதியர், 75 வயதை தாண்டியவர்கள். ஆகவே, போனை எடுக்க தாமதமாகலாம், எடுக்காமலும் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
எல்.முருகராஜ்

