PUBLISHED ON : ஜன 15, 2012

ஜன., 15 பொங்கல்
ரிஷிகளும், மகான்களுமே, கடவுளை நேரில் கண்டதாக, புராண நூல்கள் சொல்கின்றன. நம்மைப் போன்ற சாதாரணமானவர்களின் கண்ணில், அவர் பட்டதில்லை. ஆனால், தினமும் நாம் காணும், கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார் சூரிய பகவான்.
இப்போது, சிவாலயங்களில், சூரியனை ஒரு பரிவார மூர்த்தியாக வைத்திருக்கிறோம். நவக்கிரக மண்டபத்தில், சூரியன் இருந்தாலும், சனி, குரு, ராகு, கேதுவுக்கு இருக்கிற மதிப்பு கூட, சூரியனுக்கு இல்லை. ஆனால், ஒரு காலத்தில், சூரியன் மட்டுமே முழுமுதற் கடவுள் என்று வழிபட்ட, 'சவுமாரம்' என்ற, தனி மதம் இருந்தது. கிருஷ்ணன் பிறந்த, யது குல மன்னன் பிரசேனன். அவனது சகோதரன் சத்ராஜித், சூரியன் மீது பக்தி கொண்டவன்.
இவர்களில், சத்ராஜித், சூரியனை நினைத்து தவமிருந்து, 'ஸ்யமந்தகம்' எனும் அரிய ரத்தினக்கல் ஒன்றைப் பெற்றான். இந்த கல், இவ்வுலகின் பசியையே தீர்க்குமளவு, செல்வத்தை தரவல்லதாக இருந்தது. சூரியனின் கழுத்தில் அலங்கரித்த இந்த கல், சத்ராஜித்துக்கு தரப்பட்டது.
சூரியனை, 'அர்க்கன்' என்பர்; 'அர்க்கம்' என்றால், 'எருக்கு!' இதனால் தான் சூரியனார் கோவிலில், தல விருட்சமாக எருக்கை வைத்துள்ளனர். ஆதிசங்கரர் அம்பாளைக் குறித்து, 'சவுந்தர்ய லஹரி' எனும் நூல் எழுதினார். அதிலுள்ள ஒரு ஸ்லோகத்தில், 'சசி- மிஹிர - வ÷க்ஷõருஹயுகம்' என்ற சொல் வருகிறது.
இதற்கு அம்பாள், தன் தனங்களாக, சூரியனையும், சந்திரனையும் கொண்டு, உலக உயிர்களுக்கு பாலூட்டுவதாகச் சொல்கிறார்; உண்மையும் அதுவே! சூரிய ஒளி இல்லாவிட்டால், தாவரங்கள் இல்லை.
சூரியனின் ஒளிக்கற்றையில் இருந்து தான் தாவரங்கள், தங்களுக்குரிய சத்தைப் பெற்று, சேமித்து வைத்துக் கொள்கின்றன. இலை, காய், பழம் என, எந்த வகையாக இருந்தாலும், அதற்கான சக்தி, சூரிய ஒளிக்கற்றையை சேமித்ததால் மட்டுமே கிடைக்கிறது. அதாவது, சூரியன் நமக்கு தரும் பிரசாதமாகவே, நாம் சாப்பிடும் உணவை எடுத்துக் கொள்ளலாம்.
தன் தனமான சூரியனின் மூலம், அம்பாள், உலக உயிர்களுக்கு பாலூட்டுகிறாள் என்கிறார் ஆதிசங்கரர். சூரிய, சந்திரரை, சிவனின் கண்களாக புராணங்கள் சொல்கின்றன.
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. சூரியனுக்கே, 'ஞாயிறு' என்ற பெயரும் உண்டு. தொல்காப்பியத்தில் சூரியனை, 'ஞாயிறு' என்றே குறிப் பிட்டுள்ளனர். 'ஞா' என்றால், 'நடுவில் தொங்குகிற!' 'யிறு' என்றால், 'இறுகப் பற்றிக் கொண்டுள்ள!' நடுவில் இருக்கும் சூரியன், மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது. அதன் பிடி தளர்ந்தால், உலக மக்களின் கதி என்னவாகும் என்றே தெரியாது. 'சூரியன்' எனும் சொல்லுக்கு, 'இயக்குபவன்' என்று பொருள். இந்த உலகையே இயக்குபவர் என்பதால், அவருக்கு நாம் விழா எடுக்கிறோம்.
சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமே தை. ஒளி வடிவான இவர், இம்மாதத்தில் மகரத்திற்கு செல்வதால் தான், சபரிமலையில் ஐயப்பன் மகர ஜோதியாகக் காட்சித் தருகிறார். ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள், ஆரோக்கியத்திற்கு உரியவர் சூரியன். இதை விரும்பாதவர் யாருமில்லை. எனவே தான், அதிகாலையில் எழுந்து, சூரிய வழிபாடு செய்பவர்கள் ஆரோக்கியமாக, தீர்க்காயுளுடன் இருப்பதைக் காண முடிகிறது. 'அதிகாலையில் சூரியனைப் பார்க்காதவரின், வாழ்நாள் ஒவ்வொன்றும் வீணே...' என்கிறார் காஞ்சி பெரியவர்.
சூரியனை மட்டுமின்றி, நம்முடன் கலந்து விட்ட பசு, காளை <உள்ளிட்ட கால்நடைகளுக்கும், பொங்கலிட்டு வழிபடுகிறோம். தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு, கண் கண்ட உணவாக இருப்பது பசும் பால். மனிதன், பிறந்தாலும் பால் கொடுக்கின்றனர்; அவனது இறுதிக் கட்டத்திலும் பால் ஊற்றுகின்றனர்.
ஆதி முதல், அந்தம் வரை உதவும் பசுக்களுக்கும், நமக்கான உணவை அளிக்க, நிலத்தை உழும் காளைகளுக்கும், நாம் நன்றி செலுத்த வேண்டும். அதனால் தான், ஆன்மிகத்தில், பசுவை, காமதேனு என்றும், காளையை, ரிஷபம் என்றும், தெய்வங்களுக்கு வாகனமாக ஆக்கியுள்ளோம்.
இனிய பொங்கல் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.
***
தி. செல்லப்பா
