PUBLISHED ON : ஜூன் 07, 2015

இப்படத்தை பார்த்ததும், ஏதாவது, 'கிராபிக்ஸ்' செய்த படமாக இருக்குமோ என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே, வனப் பகுதியில், சிங்கத்தின் குகைக்கே சென்று, உயிரை கையில் பிடித்தபடி, எடுக்கப்பட்ட படம்.
லாகூரில் உள்ள வனப் பகுதியில், லயன் சவாரிக்குக்கு, சக பயணிகளுடன் வேனில் சென்றார் பாகிஸ்தானின் பிரபல புகைப்பட நிபுணர் அதீப் சயீது. அப்போது, ஒரு சிங்கம், பிடரியை சிலிர்த்து, வாயை பிளந்து உறுமியபடி, வேனை பார்த்து சீறியது. மற்றவர்கள் எல்லாம், இதைப் பார்த்து அலற, சயீதோ, வேனின் கதவை திறந்து, அதன் வாசலில் நின்றபடி, உயிரை பணயம் வைத்து, அதி நவீன கேமராவின் மூலம் இப்படத்தை எடுத்தார்.
'நான், ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதை நிரூபிப்பதற்கு இப்படம் ஒன்று போதும்; என் வாழ்நாளில் வேறு எதுவும் தேவையில்லை...' என, அந்த சிலிர்ப்பான நிமிடங்களை நினைவு கூர்கிறார் அதீப்.
— ஜோல்னாபையன்.

