PUBLISHED ON : நவ 09, 2014

ஜான்சி ராணி லட்சுமி பாய்! 1835ல் பிறந்து, 1858ல் போர்களத்தில் இறந்த வீரப்பெண்மணி; வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் முதல் வித்து.
அக்காலத்தில் அரசர் களின் சொத்துகளை அபகரிக்க, வெள்ளையர்கள் கொண்டு வந்த, வாரிசுரிமைச் சட்டத்தை எதிர்த்து, தான் தத்து எடுத்து வளர்த்த பிள்ளையை முதுகில் தூளி கட்டி தொங்க விட்டு, கையில் வாளுடன் போர்களத்தில் எதிரிகளை துவம்சம் செய்தவர் ராணி லட்சுமிபாய்.
ஜான்சியை ஆண்ட இந்த ராணியின் பெயரில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, இப்போதும் நம் நாட்டில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு, ஜான்சி ராணி என்று பெயர் வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வாரமலர் டூரில் கலந்து கொண்ட போடியைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கும் அப்படித்தான் பெயர் வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி என்கிற போடிநாயக் கனூரில் உள்ள இவரது வீட்டிற்கு சென்று, இவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, 'உங்களது பெயருக்கான காரணம் தெரியுமா?' என்று கேட்டதுதான் தாமதம், உட்கார்ந்திருந்தவர் வெகுண்டெழுந்து, ஜான்சி ராணியின் முழு வரலாற்றையும் சொல்லி முடித்தார்.
அந்த பெயர் வைத்ததினாலோ என்னவோ, போடி ஜான்சியிடமும் வீரமும், தீரமும், துணிச்சலும், நேர்மையும் நிறையவே இருந்தது. எம்.ஏ., -
எம்.பில்., - பி.எட்., மற்றும் எம்.எஸ்சி., யோகா படித்துள்ள இவர், அரசு வேலைவாய்ப்பிற்கான அனைத்து தேர்வுகளை யும் எழுதி வருகிறார். லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாதவர்.
ஒருமுறை இவரை அணுகிய உள்ளூர் பிரமுகர் ஒருவர், 'நீங்க நல்லா தேர்வு எழுதியிருக்கீங்க... உங்க பேப்பரை எடுத்து வச்சாச்சு; ஆனா, இந்த வேலைக்கு இவ்வளவுன்னு நாங்க ஒரு தொகைய நிர்ணயிச்சு வச்சுருக்கோம். அத கொடுத்துட்டா, அடுத்த தபாலில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துரும், என்ன சொல்றீங்க...' என்று கேட்டு இருக்கிறார்.
'லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குறதை விட சும்மாவே இருந்துடுவேன்; முதல்ல இங்கிருந்து கிளம்புறீங்களா...' என்று சொல்லி, அந்த பிரமுகரை விரட்டியுள்ளார்.
'நாட்டில எல்லாருமேவா கெட்டவர்களா இருப்பாங்க... எங்காவது ஒரு மூலையில், என்னைப்போல நல்லவர் ஒருவர் இருக்கத்தானே செய்வார்... அவர் பார்வையில், என் பேப்பர் படும்போது, பத்து பைசா லஞ்சம் தராமல், வேலைக்கு தேர்வு செய்யப்படுவேன். அதுவரை பேனாவில் மையை மட்டும் அல்ல, நேர்மையையும் நிரப்பிவைத்து, தொடர்ந்து தேர்வுகளை எழுதுவேன்...' என்று சொல்லி, தேர்வுகளை எழுதி வருபவர்.
ஐந்தருவியில் குளிக்க வாசகிகளை அழைத்துச் செல்லும் போது, பெண் காவலர் ஒருவரிடம், 'இவர்கள் எல்லாம் எங்கள் வாசகர்கள்; கொஞ்சம் தள்ளு முள்ளு இல்லாமல் குளிப்பதற்கு உதவி செய்ய முடியுமா?' என்று நான் வேண்டுகோள் விடுத்ததைப் பார்த்து, 'விறு விறு'வென அருகில் வந்தார்.
'இதுக்கு எதற்கு அவர்களது உதவிய கேட்கிறீங்க... அந்த பொறுப்பை எங்கிட்ட விடுங்க நான் பாத்துக்கிறேன்...' என்றவர், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களிடம், 'சிஸ்டர்ஸ் நீங்க ரொம்ப நேரம் குளிச்சுட்டீங்க... போதும், கொஞ்சம் வெளியே வந்தீங்கன்னா... நாங்க உங்களுக்கு நன்றி சொல்லி குளிப்போம்; இல்லன்னா...' என்றவரின் தோரணையையும், பேச்சையும் பார்த்து, குளித்துக் கொண்டிருந்தவர்கள் விலகி வழிவிட, இவர் சக வாசகியர்களோடு அருவிக்குள் நுழைந்து குளித்தார்.
ஒரு பஸ் நிறுத்துமிடத்தில், ஐந்து கார்களை நிறுத்தி, வணிக நோக்கோடு வசூல் செய்யும் குத்தகைகாரர், நம் வாசகர்கள் பயணிக்கும் பஸ்சை, பழைய குற்றாலத்தில் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தச் சொன்ன போது, 'பார்க்கிங் கட்டணம் வாங்கியபின், வாகனத்தை எங்கே நிறுத்துறதுன்னு முடிவு செய்ய வேண்டியது நாங்க...' என்று குரல் கொடுத்து, குத்தகைக்காரரை, 'வெலவெல'க்க வைத்தார்.
மெயினருவியில் யாருக்கும் தெரியாமல் ஷாம்பூ போட்டு குளிக்க முயற்சித்த ஒரு பெண்ணிடம், 'இப்பதான் அருவி தண்ணீரை மாசாக்கக்கூடாதுன்னு அரசு அக்கறை எடுத்து, அருவியில் குளிப்பவர்கள் எண்ணெய், ஷாம்பூ உபயோகிக்க கூடாதுன்னு உத்தரவு போட்டுருக்கு. அது தெரிஞ்சும், தெரியாதது போல தப்பு செய்யறீங்க ளேம்மா...' என்று தட்டிக் கேட்டார்.
'போலீசே பாத்துட்டு சும்மாயிருக்குது; நீ ஏம்மா துள்ளுற...' என்று அந்த அம்மா, தன் தப்பிற்கு வார்த்தையால் வலு சேர்க்க முயல, 'தப்பு செஞ்சா போலீஸ்தான் கேட்கணும்ன்னு இல்ல, பொதுமக்கள் யார் வேணும்ன்னாலும் கேட்கலாம். அமைதியா எல்லார் மாதிரியும் குளிக்கிறீங்களா... இல்ல, போலீஸ் பிடியில் சிக்கி அவமானத்தை சந்திக்க போறீங்களா...' என்றதும், 'நான் ஷாம்பே போடல தாயி...' என்று கையில் இருந்த ஷாம்பூவை தூக்கி எறியப் போனவரை தடுத்து, 'கண்ட இடத்துல குப்பையை எறிந்து, பொது இடத்தை குப்பையாக் காதீங்க; கொண்டுபோய் குப்பைத் தொட்டியில போடுங்க...' என்றார்.
பொதுவாக தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பது பழமொழி. ஆனால், ஜான்சி ராணி விஷயத்தில் இது நேர்மாறாக நடந்தது. டூரின் போது ஜான்சி ராணி தன் செயல்களால் எட்டடி பாய்ந்தார் என்றால், அவருடன் வந்திருந்த அவரது தாய் விஜயலட்சுமி, பதினாறடி பாய்ந்தார் என்றே சொல்ல வேண்டும்; அவரைப்பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், ஸ்ரீ காமுலு அம்மாளும்!
வழக்கமாக குற்றால டூருக்கு வரக்கூடிய வாசகர்கள், தங்களைப் பற்றிய குறிப்புகளை கொண்டு வருவர்.
இதில், போடி நாயக்கனூர் வாசகி ஜான்சி ராணி, கொஞ்சம் வித்தியாசமாக தான் பிறந்த ஊரான போடியைப் பற்றிய பெருமையான பல குறிப்புகளை கொண்டு வந்திருந்தார்.
'பசுமையும், வளமையும் மட்டுமல்ல, வெளியே தெரியாத பல உன்னதமானவர்களின் வரலாற்றையும் கொண்டதுதான், எங்கள் போடி நாயக்கனூர்...' என்று ஊர் பெருமை பேசியவரின் குறிப்புகளில் இருந்து, ஒருவர் கவனத்தை ஈர்த்தார்.
கேரளம், தமிழகத்தோடு இணைந்திருந்த போது, கேரள சிற்றரசன் வர்மாவின் ஆட்சி அதிகார பிடியில், போடி நாயக்கனூர் இருந்தது. அந்த அரசனை வெற்றி கொண்டு, ஆட்சி செய்தவர்களின் வாரிசுகளில் ஒருவர்தான், ஸ்ரீ காமுலு அம்மாள். ௧௮௮௮ முதல் ௧௯௨௧ வரை போடி ஜமீன்தாரிணியாக இருந்து, இந்த மண்ணை ஆண்டவர்.
இவருடைய ஆட்சியில், கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இவர் ஆரம்பித்த பள்ளிதான், இன்றைக்கும் அவர் பெயரைத் தாங்கி, பெருமையோடு கம்பீரமாக நிற்கிறது.
தங்கள் ஊரில் மட்டுமல்லாது, எங்கு கல்விக் கூடம் திறக்க உதவி கேட்டு வந்தாலும், அதற்கு உதவியவர். அன்று, பெரிய குளத்தில் பள்ளிக் கூடம் திறக்க உதவி கேட்டு வந்த போது, பெரிய அளவில் பொருள் உதவி செய்ததால், இன்றைக்கு அப்பள்ளி, விக்டோரியா மெமோரியல் பள்ளியாக நிமிர்ந்து நிற்கிறது.
கல்விக்கூடம் மட்டுமின்றி மருத்துவமனை மற்றும் கோவில்களும் கட்டியவர். எஸ்டேட்டில் காபி பயிரிடும் முறையை அறிமுகப்படுத்தி, பலரது வாழ்வாதாரத்திற்கு வித்திட்டவரும் ஸ்ரீகாமுலு அம்மாள் தான்.
நம்மை எத்தனையோ ராஜாக்களும், மன்னர்களும், ஜமீன்தார்களும் ஆட்சி செய்திருக்கலாம்; ஆனால், அவர்களில் சிலர்தான் இப்போதும் நம் மனதை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம், அவர்கள் மக்களுக்கு செய்த தொண்டுகள்தான்; அவர்களில் முதன்மையானவர் ஸ்ரீகாமுலு அம்மாள்.
- எல். முருகராஜ்
