PUBLISHED ON : அக் 13, 2019

ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் - வாசல்கள், 7 அடி உயர பெருமாள் என, எல்லாம் ஏழு ஏழாக அமைந்திருக்கிறது, ஒரு பெருமாள் கோவிலில்.
வரதராஜர் என பெயர் பெற்ற இந்த பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ளது.
திருப்பதியில் இருக்கும் பெருமாள், ஏழுமலை தாண்டி இருப்பதால், ஏழுமலையான் எனப்படுகிறார். வரதராஜ பெருமாளோ, ஏழு மலைகளின் அடிவாரத்தில் பக்தர்களை மலை ஏறும் சிரமத்துக்கு ஆளாக்காமல் அருள்பாலிக்கிறார். இதனால், இந்த கோவிலை, 'தமிழக திருப்பதி' என்கின்றனர். பெருமாளுடன் பெருந்தேவி தாயாரும் காட்சி தருகிறார்.
துரியோதனனின் மாமாவான, சகுனியிடம் சூதாட்டத்தில் தோற்று, வனவாசம் சென்றனர், பஞ்சபாண்டவர்கள். அவர்கள், சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். பெருமாளை வழிபடுவதற்காக, அர்ஜுனன், இங்கிருந்த மலையில் கல் எடுத்து, சிலை வடித்தான்.
பாண்டவர்கள் ஐந்து பேரும், இங்கு வந்ததன் நினைவாக, 'ஐந்து குண்டு' என்ற, ஐந்து குன்றுகள் உள்ளன. இந்த மலை, சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனால், இவ்வூர் சூலகிரி எனப்பட்டு, சூளகிரியாக மாறியது. கிரி என்றால், மலை.
பெருமாள் கோவில்கள், கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இந்தக் கோவில், மேற்கு பார்த்து இருப்பது விசேஷம். தை முதல் ஆனி வரையான உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தில், சூரிய உதயத்தின் போது அதன் கதிர்கள், பெருமாளின் பாதத்தில் படுவது போல வடிவமைக்கப் பட்டுள்ளது. நாராயணனை சூரியன் வழிபடுவதால் தான், சூரிய நாராயணன் என்ற பெயர், பலருக்கும் சூட்டப்படுகிறது.
சூளகிரி மலையின் உயரம், 3,000 அடி. மலையடிவாரத்தில், வரதராஜப் பெருமாள் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோவிலின் கருவறை உயரம், குறைவாக அமைக்கப்பட்டது. உள்ளே சிறிய பெருமாள் சிலையே இருந்தது. கால மாற்றத்தில், அது வளர ஆரம்பித்தது. இப்போது, 7 அடி உயரம் இருக்கிறது. வளரும் இந்தப் பெருமாளை தரிசித்தால், வாழ்வில் எல்லா நலமும் வளரும் என்பது ஐதீகம்.
வரதராஜ பெருமாள், மேற்கு நோக்கி இருந்தாலும், பெருந்தேவி தாயார் பெருமாளைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருடாழ்வார் சிலை, இங்கு தான் உள்ளது.
ஓசூர் - சென்னை சாலையில், 24 கி.மீ., துாரத்தில் சூளகிரி உள்ளது.
தி. செல்லப்பா
