PUBLISHED ON : அக் 13, 2019

பக்குவமான அணுகுமுறை!
கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால், பெரும் செல்வந்தரான, நண்பர், தன் ஒரே மகளை செல்லமாக வளர்த்திருந்தார். படிப்பு முடித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்றாள். சக ஊழியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, காதலாக மாறியது.
அவன் குடும்ப சூழல் மற்றும் ஜாதி காரணமாக, பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என தெரிந்து கொண்டாள், மகள். எனவே, தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தி, 'எங்களுக்கு, உங்கள் ஆசி மட்டும் போதும்... சொத்தில் சல்லிக்காசு வேண்டாம்...' எனக் கூறி, அவர்களின் அறிவுரைகளை அறவே ஏற்க மறுத்தாள்.
என் நண்பர், அவளிடம் கடுமையாக பேசவில்லை; கோபத்தில் கொந்தளிக்கவில்லை.
'அந்த பையனிடம் பேசி முடிவு செய்கிறேன்; வரச்சொல்...' என்று கூறி, ஒரு நாள், அவனை சந்தித்தார்.
அவனுக்கு, பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் இருப்பது உண்மை; ஆனால், அதற்கான எந்த திட்டமும் அவனிடம் இல்லை. அவன் சொல்லி தருவதை தான், வீட்டில், மகள் பேசுகிறாள் என்பதை தெரிந்து கொண்டார். இதன் மூலம், அவர் சொத்தின் மீது, குறி வைத்திருப்பதும் தெளிவாகியது.
உடனே அவர், தனக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலம், சொத்து அனைத்தையும், குல தெய்வம் கோவிலுக்கும், முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு கொடுப்பதாகவும், போலி பத்திரங்கள் தயார் செய்து, மகள் மற்றும் அந்த பையனிடம் காட்டினார்.
'நீங்கள், சொந்த காலில் நிற்க விரும்புவதாலும், சொத்தின் மீது பற்று இல்லை என்று கூறியதாலும், என் சொத்துகள் அனைத்தையும், தான, தர்மம் மற்றும் இறை பணிக்கு அர்ப்பணித்துள்ளேன்...' என்று, ஒரு பிரம்மாஸ்திரத்தை போட்டார்.
திட்டம் தவிடு பொடியானதை அடுத்து, அவன் முகம், இருண்டது. அன்று முதல், அப்பெண்ணின் பக்கமே வருவதில்லை. உண்மை நிலையை உணர்ந்த மகளும், காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் சினிமாவுக்கு மட்டுமே லாயக்கு என்றுணர்ந்து திருந்தினாள். தற்போது, பெற்றோர் பார்க்கும் வரனை மணக்க சம்மதித்துள்ளாள்.
கொந்தளிக்காமல், உணர்ச்சி வசப்படாமல், பெரும் பிரச்னையை, சாதுர்யமாக சமாளித்து வெற்றி பெற்ற, நண்பரின் அனுபவம், பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆர். ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதுார்.
கையூட்டு வேண்டாமே...
என் தந்தை, மேட்டூரில் உள்ள, அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சிறு வயதில், அங்குள்ள, பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்தோம்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்தவர், 'ரெவின்யூ' துறையில், உயர் பதவியில் இருந்தார். அவருக்கு, பார்வையிழந்த இரு மகன்கள். அவர் மனைவி, தினம் ஒரு பட்டு புடவை, நெக்லஸ் என, அலங்காரமாக வலம் வருவார்.
சில ஆண்டுகளுக்கு பின், என் தந்தைக்கு, சென்னைக்கு மாற்றல் வரவே, இங்கு குடியேறினோம்.
ஒருநாள், மாம்பலம் ரயில் நிலையத்திற்கு சென்றபோது, கும்பலாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, ஒரு கூட்டம்.
எட்டிப் பார்த்த நான், அதிர்ந்தேன். அங்கு, மேட்டூரில், எதிர் வீட்டில் வசித்த மாமியுடன், பார்வையற்ற இரண்டு மகன்கள், புல்லாங்குழல் வாசித்து, பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர்.
விசாரித்ததில், அந்த உயர் அதிகாரி, எக்கச்சக்கமாக லஞ்சம் வாங்கி, சிறை சென்று, மனம் நொந்து மடிந்து விட்டாராம். வருமானம் இல்லாமல், வீதிக்கு வந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு, அவர்கள் குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது.
கால் வயிற்றுக் கஞ்சியில் வயிற்றை நிரப்பினால் போதுமே. லஞ்சம் எனும் பேயின் கையில் வாழ்க்கையை தொலைப்போருக்கு, இது ஒரு பாடம் என்று நினைத்துக் கொண்டேன்.
- பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை.
சுண்டல் செய்யப் போகிறீர்களா...
நவராத்திரியின்போது, தன் வீட்டில் கொலு வைத்திருந்த என் அலுவலக தோழி, ஒருநாள், வெல்லம் சேர்த்த பச்சை பயறு சுண்டல் கொண்டு வந்து, ஆசையாக கொடுத்தார். சுண்டலை சுவைக்க, அவரது டேபிளை சுற்றி நின்றிருந்தோம். அப்போது, எங்கள், எம்.டி., அங்கு வர, அவருக்கும் சுண்டல் கொடுத்தாள், தோழி.
கொஞ்சம் சுண்டலை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டவர் முகம், அஷ்டகோணலாக மாறியது.
என்னமோ, ஏதோ என்று நாங்கள் பதற, அவரோ, பொறுமையாக, 'ஏம்மா... என் மீது உனக்கு 'ரொம்ப பாசம்'ன்னு தெரியும். அதற்காக, இப்படியா... ஒரு கரண்டி பச்சை பயறுக்கு, முக்கால் கரண்டி, 'வெல்லம்' சேர்த்து கொடுக்கலாமா...' என்றார். அப்போதும், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
'இந்த சுண்டலை எனக்கு தந்தீர்களே... உங்கள் அன்பான கணவருக்கு கொடுக்கவில்லையா...' என்று கேட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.
அதன்பின், நாங்கள் சுண்டலை, 'டேஸ்ட்' செய்தபோது, பல்லில், 'கடாமுடா' என்று, கல் அரைபட்டதும் தான்,
எம்.டி.,யின் முக மாறுதலுக்கான காரணம் தெரிந்தது. அதைத் தான் அவ்வளவு நாசுக்காக கோபத்துக்கு பதிலாக, 'ரொம்ப பாசம்' என்றும், கல்லுக்கு பதில், 'வெல்லம்' என்று கூறியதும் புரிந்தது. எங்களது, வெடி சிரிப்பில், அந்த இடமே அதிர்ந்தது. சங்கடத்தில் நெளிந்தாள், தோழி.
எனவே, தோழியரே... பருப்பு வகைகளை ஒருமுறைக்கு இருமுறையாக சுத்தம் செய்து, சுண்டல் செய்யுங்கள். இல்லாவிட்டால், இதுபோன்ற சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
செ.செந்தாமரை, சென்னை.
