
சிவனுக்குரிய வாகனமான காளை - ரிஷபம், கருவறைக்கு வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் அதிசயம், கர்நாடக மாநிலம், மங்களூரு பாண்டேஸ்வரர் கோவிலில் நடக்கிறது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர், சகுனியுடன் சூதாட்டம் விளையாடி, தோற்றார். அவரது மனைவி திரவுபதியை, பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினான், துரியோதனன். அவமானம் தாங்காத அவள், 'குருஷேத்திர யுத்தத்தில், துரியோதனனின் தலை உருண்டால் தான், என் கூந்தலை முடிவேன்...' என, சபதம் செய்தாள்.
இதன் பின், பாண்டவர்கள் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில், கோவில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு, 'பாண்டேஸ்வரர்' என்று பெயர் உண்டானது.
கோவில் முகப்பில் பிரமாண்டமான சிவன் சிலையும், எதிரில் நந்தியும் உள்ளது. பஞ்சுளி, முண்டித்தாயா மற்றும் வைத்தியநாகர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். காஷ்மீர் வைஷ்ணவி தேவி மற்றும் லட்சுமி நாராயணர், ஆகியோருக்கும் சன்னிதி உள்ளது. 22 அடி உயர, ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது.
நவக்கிரக மேடையில், அரச மரம் இருப்பது வித்தியாசமானது. சிவனின் ஜடாமுடி, கருவறையை சுற்றி பரந்து கிடப்பதாகவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீர், அவரது பின் பக்கம் வருவதாலும், இதைத் தாண்டக் கூடாது என்பதாலும், இங்கு, சன்னிதியை சுற்றும் வழக்கம் இல்லை.
இங்குள்ள கோ மடத்தில், காளை மாடு ஓன்றும் வளர்க்கப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு நடக்கும் உச்சிக்கால பூஜையிலும், இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போதும், இந்த காளை மாடு, சன்னிதிக்கு வந்து பூஜையில் பங்கேற்கிறது.
கருவறை படிக்கட்டில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும், அப்போது வெளிப்படும், காளையின் வாய் நுரை வாசனை, தங்கள் மீது பட்டால் உடல்நலமும், நீண்ட ஆயுளும் உண்டாகும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
ஒன்பது கண்கள் உள்ள பெரிய விளக்கில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு, நந்தாதீபம் என்று பெயர். இது, அணையாமல் தொடர்ந்து எரியும். கிரக தோஷம் நீங்க, இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றுவர்.
இரவு, 8:00 மணிக்கு நடக்கும், பூஜையில் பக்தர்கள் கோவில் முழுவதும் வரிசையாக தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.
பாண்டேஸ்வரர் சிலை மேல், 108 துளைகள் இடப்பட்ட சிறிய கலசத்தில் புனிதநீர் மற்றும் நெய் நிரப்பி கட்டப்படுகிறது. அவை, லிங்கம் மீது வழியும். இதை, 'தாராபிஷேகம்' என்பர். திருமண தடை விலகவும், புத்திரப்பேறு பெறவும், இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
தல விருட்சமான, அரச மரம் கோவில் எதிரில் உள்ளது. இதில், பிரம்மா, விஷ்ணு, சிவன் இருப்பதாக ஐதீகம். ஏமாற்றப்பட்டவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நியாயம் வேண்டுபவர்களும், இதற்கு பூஜை செய்கின்றனர்.
பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில், சத்தியநாராயண பூஜையும், சங்கரமணா எனப்படும், சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி செல்லும் தமிழ் மாதப்பிறப்பு அன்று, 11 புரோகிதர்கள் பங்கேற்கும், சதுர்தாபிஷேகம், இங்கு விசேஷம். மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, 1.5 கி.மீ, துாரத்தில் கோவில் உள்ளது. தொலைபேசி: 0824 - 244 1210.
தி.செல்லப்பா

