
நீங்கள் உண்மையாகவே, இரக்க குணம் கொண்டவரா என்பதை அறிய, கீழே கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும், மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்கு, பொருந்தும் விடையை, 'டிக்' செய்து கொள்ளுங்கள். விடைகளுக்கான மதிப்பெண்களும், உங்களைப் பற்றிய மதிப்பீடும் கீழே உள்ளன.
1. சமீபத்திய கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் போது என்ன செய்தீர்கள்?
அ) பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்து, வேதனைப்பட்டவாறே வீட்டில் இருந்தேன்.
ஆ) குறிப்பிட்ட தொகையை, வெள்ள நிவாரணத்துக்குப் பயன்படுத்தினேன்.
இ) வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன் அல்லது என் உறவினர்களை அப்படி ஈடுபடச் செய்தேன்.
2. விலங்குகள் தொடர்பான ஒரு படத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள். புலி ஒன்று மானை துரத்துகிறது. உங்கள் மனதில் ஓடும் எண்ணம் என்ன?
அ) மான் தப்பி விட்டால் நல்லது என நினைத்தபடி, தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பேன்.
ஆ) மனம் பொறுக்காமல், தொலைக்காட்சியை, 'ஆப்' செய்து விடுவேன் அல்லது வேறு சேனலுக்கு மாற்றி விடுவேன்.
இ) புலி, மானைப் பிடிக்கும் அந்த நிகழ்வுக்காக, ஆவலுடன் காத்திருப்பேன்.
3. டில்லி பேருந்தில், நிர்பயா என்ற பெண், சிலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, இறந்த செய்தியைப் படித்ததும், என்ன தோன்றியது?
அ) இரவு வேளைகளில், பெண்கள் கண்ணியமான உடை அணிந்து, ஆண் துணையோடு செல்ல வேண்டும்.
ஆ) கற்பழித்தவர்களை துடிக்கத் துடிக்க கொல்ல வேண்டும்.
இ) நாடு முழுவதும், இது தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
4. இந்த மூவரில் ஒருவரின் நடைமுறை தான் சரியானது என்று சொல்ல வேண்டுமென்றால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அ) சுபாஷ் சந்திர போஸ்
ஆ) ஹிட்லர்
இ) மதர் தெரசா
5. வீட்டுச் சுவரில், பல்லி ஒன்று பூச்சியை நெருங்குகிறது. என்ன செய்வீர்கள்?
அ) கை தட்டி, பூச்சியை அங்கிருந்து பறக்கச் செய்து விடுவேன்.
ஆ) ஆர்வம் பொங்க, அந்த உணவுக் காட்சிக்கு காத்திருப்பேன்.
இ) பல்லிக்கும் பசிக்குமே... சாப்பிட்டுப் போகட்டும் என்றபடி, என் வேலையில் கவனம் செலுத்துவேன்.
மதிப்பெண்கள்
1. அ) 1 ஆ) 3 இ) 5
2. அ) 3 ஆ) 5 இ) 0
3. அ) 0 ஆ) 5 இ) 3
4. அ) 3 ஆ) 0 இ) 5
5. அ) 5 ஆ) 0 இ) 3
மதிப்பெண்கள், 18லிருந்து, 25 வரை:
நீங்கள் இரக்க குணம் அதிகம் கொண்டவர்; சும்மா இரக்கம் மட்டும் கொள்ளாமல், தேவைப்படும் செயல்களிலும் ஈடுபடுகிறீர்கள். உங்கள் நல்ல மனம் வாழ்க. ஆனால், யாரும் உங்களை ஏமாற்றி விடாமல், கொஞ்சம் விழிப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
மதிப்பெண்கள், 10லிருந்து, 17வரை:
உங்களிடம் சுய நலமும், பிற நலமும் கலந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இப்படி இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், அதையும் தாண்டி முன்னேறுங்கள். உங்கள் இரக்க குணத்தை செயல் வடிவில் காட்டுங்கள்.
மதிப்பெண்கள், 10க்கும் குறைவு:
உங்கள் மனம் ஏன் இப்படி இறுகி விட்டது? ஒருவேளை, கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு விட்டதா? பிற உயிர்களிடம் மதிப்பு கொள்ளுங்கள். இல்லையென்றால், காலப்போக்கில், உங்களை சுற்றியுள்ளோர் உங்களை ஒதுக்கி விடலாம்.
அருண் சரண்யா

