PUBLISHED ON : செப் 08, 2019

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் உள்ள, ஒரு வார்டின் கவுன்சிலராக, தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார், இந்தியரான, 41 வயதாகும், யோகேந்திர புரானிக். இந்தியர் ஒருவர், ஜப்பானில், வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்படுவது, இதுவே முதல்முறை.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பல்கலையில், ஜப்பானிய மொழியை தேர்வு செய்து படித்தார். பிறகு, ஒரு ஆண்டு, 'ஸ்காலர்ஷிப்' கொடுத்து, தங்கள் நாட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது, ஜப்பான் அரசு.
அடுத்து, ஐ.பி.எம்.,மில் வேலையில் இருந்தபோது, ஜப்பான் செல்ல வாய்ப்பு வந்தது. ஆனால், எட்டே மாதத்தில் வேலையை ராஜினாமா செய்தார். காரணம், ஆபீஸ் மற்றும் தங்கிய இடத்தில், ஜப்பானியர் யாரும் நெருங்கவும் இல்லை, கலகலப்பாக பேசவும் இல்லையாம்.
கடந்த, 2003ல், 'இன்போசிஸ்' நிறுவனத்தில் வேலை கிடைத்து, ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். இந்த முறை, இந்தியர்கள் நிறைய பேர் வசிக்கும் இடத்தில் தங்கினார். வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது.
மார்ச் 11, 2011ல், ஜப்பானில் பூகம்பம் தாக்கியது. இதில், இந்தியர்கள் தங்கியிருந்த வீடுகளும் பாதிக்கப்பட்டன. சில நண்பர்களுடன் இணைந்து, 'ஹெல்ப் லைன்' துவக்கி, ஏராளமான உதவிகளை செய்தார். இதனால், இந்தியர்களிடமும், ஜப்பானியர்களிடமும் பிரபலம் ஆனார். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார்.
இதன் பலனாக, 'கான்ஸ்டீயூஷனல் டெமாகரடிக் பார்ட்டி' இவரை, வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தியது. மக்களிடம் பிரபலமாக இருந்ததால், ஜப்பானியர் ஓட்டுகளையும் பெற்று, ஜெயித்து விட்டார்.
இவருக்கு, சின்ன ஆசை. அடுத்து, ஜப்பானிய பார்லிமென்டில், எம்.பி., ஆகணுமாம்.
யார் கண்டது, வரும் காலத்தில், ஜப்பானையே ஒரு இந்தியர் ஆளும் நாளும் வரலாம்.
- ஜோல்னாபையன்.
