PUBLISHED ON : ஆக 30, 2020

கேரள மக்கள், ஓணம் பண்டிகை கொண்டாடும் வேளையில், தமிழகம் வந்த நீதி தேவதையான, கேரள அம்மன் பற்றி அறிந்து கொள்ளலாம். இவள், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆட்சி செலுத்துகிறாள்.
ஐநுாறு ஆண்டுகளுக்கு முன், காடாக இருந்தது, ஆண்டிபட்டி. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை நட்டு, காளியாக கருதி, வழிபட்டனர், பக்தர்கள்.
இங்கு வசித்த பேரிநாயக்கரின் கனவில் தோன்றிய காளி, 'கேரளாவில் சோட்டாணிக் கரையிலிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட என் சிலை, வடமலை நாயக்கன் பட்டியில், வைகை ஆற்று மணலில் புதைந்து கிடக்கிறது. அதை எடுத்து, கோவில் கட்டி வழிபடுங்கள்...' என்றாள்.
மறுநாள், அம்பாள் சிலையை எடுத்து வந்து, கோவில் கட்டினர். அம்மனுக்கு, காளி என்று பெயர் சூட்டினர்.
கருவறையில், நீதியை நிலைநாட்டுபவளாக வீற்றிருக்கிறாள், காளி.
ஐந்து தலை நாகம், குடை பிடிக்கிறது. வலது காலை, மடித்தும், இடது காலை, தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு, நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில், உடுக்கை, பாம்பு, சூலம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கிறாள்.
அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்கு திருவிழா நடக்கும்.
தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தன் பக்தர்களுக்கு யாராவது தீங்கு எண்ணினால், நீதியை நிலை நாட்டுவாள் என்ற நம்பிக்கையில், இவளிடம் முறையிடுகின்றனர்.
எந்த செயலை செய்தாலும், காளியம்மனிடம் பூ கட்டி, உத்தரவு கேட்ட பின்பே, செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
சிவப்பு மற்றும் வெள்ளை மலரை தனித்தனி பொட்டலமாக கட்டிப் போட்டு, காளியின் திருப்பாதத்தில் இடுகின்றனர்.
பூஜை முடித்து, அர்ச்சகர் தரும் பொட்டலத்தில், வெள்ளை மலர் வந்தால், எண்ணிய செயல் காளியின் அருளால் நிறைவேறும் என, நம்புகின்றனர். வெள்ளிக்கிழமைகளில், இந்த வழிபாடு விசேஷம்.
விவசாயம் செழிக்க, பவுர்ணமியன்று, பகலில் உண்ணாமல் விரதம் இருந்து, கோவிலுக்கு வருகின்றனர். அன்று இரவில், பாலபிஷேகம் நடக்கிறது.
அய்யப்பன், அவரது காவலர், 18ம் படி கருப்பசாமி மற்றும் மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளாடை, ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகில் கோவில் உள்ளது.
காலை, 7:00 - 11:00 மணி, மாலை, 5:00 - இரவு, 9:00 மணி வரை நடை திறக்கும். வெள்ளிக்கிழமை பகலில், நடை சாத்துவதில்லை.
தி. செல்லப்பா
