PUBLISHED ON : செப் 03, 2023

செப்டம்பர் 6 - கிருஷ்ண ஜெயந்தி
திருமண வாழ்வின் அடிப்படையே, சந்ததி விருத்தி தான். ஆனால், சிலருக்கு குழந்தை பாக்கியம் அமைவதில்லை. 'உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை...' என, ஆறுதல் கொள்வர், இவர்கள். உண்மையில், உங்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டீர்கள். அப்படியா... என, மகிழ்ச்சிக்கடலில் திளைக்கும் நீங்கள், யார் அவர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கிருஷ்ணர், மதுரா சிறையில் தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறந்தது; கம்சன், துரியோதனன் போன்ற கயவர்களை அழிப்பது அவரது பிறப்பின் நோக்கம் என்ற விபரமெல்லாம் பலருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருவர் பிறக்கின்றனர். ஒருவர் பலராமன், இன்னொருத்தி யோகமாயா எனும் விந்த்யாவாசினி. தமிழகத்தில் இவளை துர்க்கை மற்றும் மாரி என்று சொல்கிறோம்.
கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தியது, ராம அவதாரம். இந்த அவதாரத்தில், திருமாலைத் தாங்கும் அனந்தன் எனும் பாம்பும் ராமனுடன் பூமிக்கு வந்தது. அவரது தம்பி லட்சுமணன் தான் அந்த பாம்பு. அந்த தம்பி, ராமாவதாரம் முழுவதும் அவரைப் பிரியவே இல்லை. கண் மூடாமல் கவனித்துக் கொண்டார்.
அந்த சேவைக்கு பதில் சேவை செய்ய, திருமால் எண்ணம் கொண்டார். கிருஷ்ணாவதாரத்தில், அனந்தன் பாம்பை, தன் அண்ணனாகப் பிறவியெடுக்க வைத்தார். அவர் தான் பலராமன். ராமன் என்ற தன்னுடைய முந்தைய திருநாமத்தையே அவருக்கு வழங்கி, பெரும் பலசாலியாக பிறக்க வைத்தது, கிருஷ்ணரின் கருணைக்கு எடுத்துக்காட்டு.
அது மட்டுமல்ல, தன்னுள் இருந்த ஒரு பெண் சக்தியை யோகமாயா என்ற பெயரில் பிறக்க வைத்தார். தேவகியின் எட்டாவது குழந்தையால் தான் கம்சனுக்கு அழிவு என்பது விதி. தேவகிக்கு ஏழாவது குழந்தை ஜனித்தவுடன், மாயாவை வரவழைத்தார், கிருஷ்ணர்.
'மாயா... கோகுலத்தில் வசுதேவரின் இன்னொரு மனைவி ரோகிணி இருக்கிறாள். நான் உனக்கு அளித்திருக்கும் மாய சக்தியால், தேவகியின் வயிற்றிலுள்ள இந்தக் குழந்தையை அவள் வயிற்றுக்கு மாற்றி விடு. நீ, வசுதேவரின் ஆத்ம நண்பரான நந்தகோபரின் மனைவி யசோதை வயிற்றில் கருவாகி விடு. நடப்பதை பிறகு பார்...' என, உத்தரவிட்டார். அதன்படியே செய்தாள், யோகமாயா.
ஒரு தாயின் வயிற்றிலுள்ள குழந்தை இன்னொரு தாயின் வயிற்றுக்கு மாற்றப்படுவதை, 'ஆகர்ஷணம்' என்பர். ஈர்ப்பு என்பது இதன் பொருள். ரமணன் என்ற சொல்லுக்கும் ஈர்ப்பு என்றே பொருள். எனவே, பலராமனாகிய இந்தக் குழந்தையை, குழந்தை இல்லாதவர்கள் தங்கள் வயிற்றில் பிறந்ததாகக் கருதலாம். கிருஷ்ணர் பிறந்த பின், அவரை கோகுலத்திற்கு மாற்றி விட்டு, யசோதைக்கு பிறந்த பெண்ணை மதுராவிற்கு மாற்றி விட்டார், வசுதேவர். அவ்வகையில் குழந்தை இல்லாதவர்கள் இவளை, தங்கள் மகளாகக் கருதலாம். ஆக, இப்போது உங்களுக்கு இரண்டு மானசீகக் குழந்தைகள் பிறந்து விட்டன.
யோகமாயா, தன் கடமை முடிந்ததும், விந்தியமலையில் சென்று தங்கினாள். உ.பி.,யிலுள்ள மீர்ஜாபூர் மாவட்டம் விந்த்யாச்சலில், இவளுக்கு கோவில் உள்ளது. மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில், பலராமர், கிருஷ்ணர் காட்சி தரும் இஸ்கான் கோவில் இருக்கிறது.
இனி, குழந்தை இல்லை என்ற கவலையை விட்டு, இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளிலிருந்து பலராமர் -மற்றும் மாயாவை உங்கள் குழந்தைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
தி. செல்லப்பா
