சர்வதேச யோகா சாம்பியனான, மாற்றுத்திறனாளி தேஜஸ்வி!
சர்வதேச யோகா சாம்பியனான, மாற்றுத்திறனாளி தேஜஸ்வி!
PUBLISHED ON : ஆக 13, 2023

இந்தியா, உலகிற்கு வழங்கிய உன்னதமான பரிசு, யோகா. யோகாவின்
சிறப்பும், பலனும் உலகம் முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு
ஆண்டும், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு,
கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 21ல் நடைபெற்ற யோகா தின
விழாவில், உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர், யோகா பயிற்சியில்
ஈடுபட்டனர். அவர்களில் அதிகம் கவனிக்கப்பட்டவர், தேஜஸ்வி குமார் என்ற
இளைஞர். காரணம், இவர் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.
டில்லியைச்
சேர்ந்த இவர், ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது, 'இரண்டு கால்களும்
போலியோவால் பாதிக்கப்பட்டு விட்டது. இனி, இந்த குழந்தை இயல்பாக நடக்க
இயலாது. ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்தே தான் இருக்கும்...' என்று,
மருத்துவர்கள் கூறி விட்டனர்.
அந்த வார்த்தைகளை பொய்யாக்கும்
விதத்தில், இன்று, ஒரு இடத்தில் உட்கார கூட நேரமில்லாமல், சர்வதேச யோகா
சாம்பியனாக, உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார், தேஜஸ்வி குமார்.
தன்னை
உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, ஐந்து வயதில் யோகா கற்க
ஆரம்பித்தவர், கொஞ்ச காலத்திலேயே அதில் உள்ள அநேக வித்தைகளையும் கற்றுத்
தேர்ந்தார். யோகாவை வாழ்க்கையில் ஒரு பகுதியாகக் கருதாமல், அதையே தன்
வாழ்க்கையாக கருதி செயல்பட்டார்.
மற்றவர்கள் கஷ்டப்பட்டு செய்யும்
யோகாவை, இவர் மிகவும் இஷ்டப்பட்டு இலகுவாக செய்வார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான யோகா போட்டி நடக்கிறதா என்று விசாரித்தார்.
'அப்படி
எல்லாம் இல்லை. நீ பொது போட்டியிலேயே கலந்து கொள்ளலாம்...' என்று தகவல்
கூறினர். அதன்படி, முதன் முதலாக கலந்து கொண்ட போட்டியில், தேஜஸ்வி தான்
சாம்பியன்.
அதன் பிறகு, எந்த யோகா போட்டியில் கலந்து கொண்டாலும்,
ஒரு பதக்கத்தை தட்டி வந்து விடுவார். பெரும்பாலும் அது, தங்க பதக்கமாகவே
இருக்கும்.
மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.
2015ல், 'உலகின் மிகவும் நெகிழ்வான ஊனமுற்ற யோகா சாம்பியன்' என்ற
அங்கீகாரத்தைப் பெற்றார்.
சம்தா விருது, பாரத யோக் ரத்னா விருது
மற்றும் இளம் சாதனையாளர் விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். கேலா
விளையாட்டுப் போட்டியின் இளம் நடுவராக செயல்பட்டுள்ளார். டில்லியில்,
யோகா பயிற்சி கொடுத்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை களைய வேண்டும் என்பதற்காக, சட்டம் பயின்று, நீதிமன்றத்தில், வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.
முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், ஊனம் தடையல்ல என்பதற்கு, உதாரணமாக இருக்கிறார், தேஜஸ்வி.
எம்.ஆர்.ஜே.,
