PUBLISHED ON : ஜன 24, 2016

ஒருசமயம், பார்வதி தேவிக்கு, 'சிவாய நம' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை, உரைத்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அவ்விடத்திற்கு மயில் ஒன்று வர, பாடத்தை கவனியாமல், அதை வேடிக்கை பார்த்தாள் பார்வதி. சிவனுக்கு கோபம் வந்து, 'பாடம் நடக்கும் போது மயிலின் மீது நாட்டம் சென்றதால், நீ பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாயாக...' என சாபமிட்டார்.
பதறிப் போன பார்வதி, சாப விமோசனம் கேட்ட போது, 'உத்ராயண காலம், புஷ்ப நட்சத்திரத்தில், சாப விமோசனம் தருவேன்...' என்றார். மயில் வடிவமெடுத்து பூலோகம் வந்தாள் அம்பிகை; அவளுடன், தேவர்களும் மயிலுருவில் வந்தனர்.
மயில் உருவத்திலேயே சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வந்தாள் அம்பிகை. சாப காலம் முடிந்ததும், தைப்பூசத்தன்று, அவளுக்கு சுய உருவை கொடுத்து, 'கற்பகாம்பாள்' என பெயர் சூட்டினார் சிவன். அவர்கள் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர்.
சிவன் கபாலத்தை கையில் வைத்திருப்பவர் என்பதால், அங்கு எழுந்தருளிய கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவில் என பெயர் வைக்கப்பட்டது. இத்தலத்தில், தை பூச விழா, மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
