தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கார்த்திகை பெண்கள் கோவில்!

கார்த்திகை பெண்கள் கோவில்!

கார்த்திகை பெண்கள் கோவில்!


PUBLISHED ON : ஜூலை 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகனை வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பது, அறிந்த விஷயம். ஆனால், இவர்களுக்கென ஒரு கோவிலில் சன்னிதி இருப்பது தெரியுமா...

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் (தட்சிணாமூர்த்தி) கோவிலுக்கு வந்தால் இவர்களைத் தரிசிக்கலாம்.

பிரம்மாவின் புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களுக்கு சிவபெருமான், குருவாக இருந்து, அஷ்டமா சித்திகள் எனும், அதீத சக்திகளைப் பெறுவது பற்றி, உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

அந்த வேளையில் நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு கார்த்திகைப் பெண்கள் அங்கு வந்தனர். தங்களுக்கும் அஷ்டமா சித்தி பற்றி உபதேசிக்க வேண்டினர்.

அவர்களிடம், 'யார் ஒருவர் அம்பிகைக்கு சேவை செய்கிறாரோ, அவரே அஷ்டமா சித்திகளை பெறும் தகுதியை பெறுவார்...' என்றார், சிவன்.

அப்பெண்கள், அதை விரும்பவில்லை. அம்பிகையை மதிக்காத அவர்களை, கல்லாக மாறும்படி சபித்து விட்டார், சிவன். அவர்கள் கல்லாக மாறி, ஆல மரத்தின் கீழ் கிடந்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு வேண்டி, சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு, சுய வடிவம் தந்தார், சிவன்.

இந்த சம்பவம் நடந்த இடமே, பட்டமங்கலம். பிற்காலத்தில், இங்கு, சுந்தரேஸ்வரர், மீனாட்சி மற்றும் கார்த்திகை பெண்கள் சன்னிதிகளை உள்ளடக்கி, கோவில் அமைக்கப்பட்டது.

இக்கோவிலில் விசேஷமானவர், தட்சிணாமூர்த்தி. பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் இவர், இங்கு, கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது விசேஷம். இவரது சன்னிதிக்கு பின்புறம் உள்ள ஆல மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் அமைந்துள்ளது.

சன்னிதி முன் மண்டபத்தில், ராசிக்கட்டம் இருக்கிறது. குரு பெயர்ச்சி விழா நாட்களில், தட்சிணாமூர்த்தி சன்னிதியில், 108 கலசங்களுடன், கிரகதோஷ பரிகார யாகம் நடக்கும். இந்த யாகசாலையில், ஆறு கார்த்திகை பெண்களும் எழுந்தருள்வர் என்பது சிறப்பு.

குழந்தை இல்லாத தம்பதியர், இங்குள்ள ஆல மரத்தின் விழுதை, மண் நிரப்பிய மூங்கிலுக்குள் பதித்து, 'விழுது இறக்கும் சடங்கு' செய்கின்றனர். இதனால், ஆல மரம் போல வம்சம் தழைக்கும் என்பது நம்பிக்கை.

கோவில் வளாகத்தில் ஏரழிஞ்சி என்ற மரம் உள்ளது. இம்மரத்தில் விளையும் பழத்தின் விதை, மீண்டும் இம்மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது.

மதுரையில் இருந்து, 65 கி.மீ., துாரத்திலும், திருச்சியிலிருந்து - புதுக்கோட்டை வழியாக, 90 கி.மீ., துாரத்திலும் திருப்புத்துார் உள்ளது. இங்கிருந்து, 8 கி.மீ., சென்றால், பட்டமங்கலத்தை அடையலாம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us