PUBLISHED ON : அக் 08, 2023

செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி
மறுபடியும் அதே தவறுகளை
செய்ய விடாமல்
நல்ல பாடங்களையும்
அனுபவத்தையும் கற்றுக் கொடுத்து
அடுத்த வெற்றிப் பாதைக்கு
வழி காட்டும் ஆசானாய் வரும்
தோல்வியே வா!
பிறர் கேவலமாக பேசி
மட்டம் தட்டி ஒதுக்கிய நிலையில்
வைராக்கியம் கொடுத்து எழுந்து தன்னம்பிக்கையாய்
வாழ வழி செய்த அவமானமே வா!
எனக்குள்ளிருக்கும்
குறைகளையும், குற்றங்களையும்
புதைந்திருக்கும் திறமைகளையும்
வெளிக் கொண்டு வந்த
எதிரியே வா!
பிரச்னைகளைக் கண்டு
பின் வாங்கிய என்னை
எதையும் சாதிக்கவும்
சமாளிக்கவும் முடியும் என்று
தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
கொடுத்த சவாலே வா!
உளி தரும் வலியால்
கல் சிலையாகிறது
நெருப்பில் சுட்டத் தங்கம்
புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது!
தோண்டி சிதைக்கப்பட்ட மண்விளை நிலமாகிறது
முள் செடியிலே ரோஜா மலர்கிறது...
துன்பங்களால் மனம் உறுதியாக்கப்படுகிறது
பிரச்னைகள்
சாதனை படைக்கத் துாண்டுகிறது!
— எம். பாலகிருஷ்ணன், பசுமலை, மதுரை.
