PUBLISHED ON : ஜன 08, 2023

விவசாயி என் நண்பன்
பசி தீர்க்கும் மருத்துவன்
இந்நாட்டின் முதுகெலும்பு என்று
வீர வசனம் பேசும்
வாய் ஜால நண்பர்களே...
வித்துக்கள் விதைத்தோ
விளை நிலம் மிதித்தோ
களைச்செடிகள் பறித்தோ
கை வேலைகள் செய்ததுண்டா!
சேற்றில் இறங்கி
சேவை செய்தோ
மண் தளத்தில் மரம் நட்டோ
மழைக்கு வித்திட்டதுண்டா!
அறுவடை செய்து அளந்துவிட்டு
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
கஞ்சித் தண்ணீர் குடித்த குடியானவனின்
குறைகள் ஏதும் கேட்டதுண்டா!
கடன் தொல்லை தாங்காமல்
கண்ணீர் சிந்தும் விவசாயிக்கு
உதவிக்கரம் நீட்டி
உள்ளம் தேற்றியதுண்டா!
வேதனையிலும் விளைச்சல் உண்டாக்கி
விருந்து படைக்கும் விவசாயியிடம்
விதைச்ச விளைச்சலுக்கு விலை கிடைத்ததா
எவரேனும் விபரம் கேட்டதுண்டா!
வாடிப் போன பயிர் பார்த்து
ஓடிப்போயி உயிர் விட்ட விவசாயிக்கு
உங்களின் பங்கு என்னவென்று
எப்போதாவது யோசித்ததுண்டா!
வாய்ப்பாட்டு பாடியே
வளமான வாழ்க்கைக்குள் வட்டமிட்டு
வருத்தம் தெரியாமல் வாழும்
மாடி வீட்டு மனிதர்களே...
விவசாயி வாழ்க என்று
வேஷமிட்டு கோஷம் போடும்
முகமூடிக்கு பூட்டு போட்டு
சேற்றில் இறங்கி நாற்று நட்டு
நாற்றங்கால் வளர்க்கும்
நடைமுறையில் தோள் கொடுத்தால்
நஷ்டப்பட்ட விவசாயியும்
இஷ்டப்பட்டு ஏர் பிடிப்பான்
எல்லார் இதயங்களிலும் இடம் பிடிப்பான்!
அ. ரேவந்த்,
எர்ணாகுளம், கேரளா.
