PUBLISHED ON : ஆக 20, 2023

ஆகஸ்ட் 25 - வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் என்றால், ஆடம்பரமான கொண்டாட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது. படிப்பினையையும் தருவதாக இருக்க வேண்டும்.
இன்றைய சூழலில், பல இளைஞர்களுக்கு பாரமாகத் தெரிபவர்கள், அவர்களது பெற்றோரான முதியவர்கள் தான். அவர்களைப் புறக்கணித்தால், நிலைமை என்னவாகும் என்பதை தெளிவுபடுத்துவதே, வரலட்சுமி விரதத்தின் நோக்கம்.
குஜராத்திலுள்ள சவுராஷ்டிர தேசத்தை, பத்ரஷ்ரவா - சுசந்திரிகா தம்பதி, ஆண்டு வந்தனர். இவர்களது மகள் சியாமாவை, மாலாதரன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
சுசந்திரிகா விரத முறைகளை சரி வர கடைபிடிப்பதில்லை. நல்லவளான இவளைக் கடைத்தேற்ற, அரண்மனைக்கு ஒரு முதிய சுமங்கலியாக வேடமிட்டு வந்தாள், மகாலட்சுமி தாயார்.
அப்போது, சுசந்திரிகா சாப்பிட்டு முடித்து, வெற்றிலை, பாக்கு போட்டிருந்தாள்.
இதைப் பார்த்த முதிய சுமங்கலி, 'மகாராணி... இன்று, வரலட்சுமி விரதம் என்பது உனக்கு தெரியும் தானே. இந்த நாளில், ஏழை சுமங்கலிகளுக்கு உணவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பின் தான், நீ சாப்பிட வேண்டும் என தெரியாதா?' என்றாள்; ராணிக்கு கோபம் வந்து விட்டது.
'ஏ கிழவி, ஒரு மகாராணி எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும் என்று உத்தரவு போடுமளவு உனக்கு தைரியம் வந்து விட்டதா? மரியாதையாக வெளியே போய் விடு...' என்றாள்.
ஏதும் சொல்லாமல், அரண்மனையை விட்டு வெளியேறி விட்டாள், மூத்த சுமங்கலி.
லட்சுமி, ஒரு வீட்டை விட்டு வெளியேறினால் நிலைமை என்னவாகும் என்பது, நாம் அறிந்தது தானே!
பகை மன்னர்கள், சவுராஷ்டிர தேசம் மீது படையெடுத்தனர். செல்வம் குறைந்தது. சோற்றுக்கே ஆட்டம் காணும் நிலை, மன்னனுக்கும், மக்களுக்கும் வந்து விட்டது.
இதையடுத்து, சியாமாவின் வீட்டுக்கு போய், தான் அவமதிக்கப்பட்டதையும், அவளது பெற்றோர், நாட்டின் தற்போதைய நிலையையும் எடுத்துச் சொன்னாள், மூத்த சுமங்கலி. சியாமாவோ, விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துபவள். அவள் செல்வச் செழிப்புடன் இருந்தாள்.
தன் பெற்றோர் சிரமப்படுவதைக் கேட்டு வருந்தியவள், ஒரு தங்கப்பானையில், தங்கக்காசுகளை நிரப்பி, மூதாட்டியிடமே கொடுத்து அனுப்பினாள். அதைப் பிரித்துப் பார்த்தனர் மன்னரும், ராணியும். பானையும், காசுகளும் சாம்பலாகி விட்டன. அதிர்ச்சியடைந்த அவர்கள், வந்திருப்பது மகாலட்சுமி என்பதை அறிந்து, வேதனைப்பட்டனர்.
பின், வரலட்சுமி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து, இழந்த நாடு, செல்வத்தை அடைந்தனர். முதியவர்களை அவமதிப்பவர்கள் எல்லாவற்றையும் இழந்து, தெருவில் நிற்கும் சூழல் உருவாகும் என்பதே, வரலட்சுமி விரதம் உணர்த்தும் தத்துவம்.
வரலட்சுமி விரதம் இருக்கும் முன், முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களை முதலில் வீட்டுக்கு அழைத்து வாருங்கள். உங்களுடன் இருக்கும் மாமியார், மாமனார், பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள். இது மட்டும் போதும்.
நீங்கள் புடவை, ஜாக்கெட் துணிகளை வாரி வழங்க வேண்டும் என்பதில்லை. நிஜமான ஏழைகளுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். லட்சுமி பாட்டி, உங்களுடன் நிரந்தரமாக குடியிருப்பாள்.
- தி. செல்லப்பா
