PUBLISHED ON : ஏப் 23, 2023

23.4.2023 அட்சய திரிதியை
அட்சய திரிதியை அன்று, எந்த பொருளை வாங்கினாலும் பெருகும் என்று சொல்வர். பொருள் வாங்குவது மட்டுமல்ல, தானம் செய்வதாலும், கிடைக்கும் பலன்கள் ஏராளம். என்னென்ன தானங்கள் செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாமா!
* உப்பு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை தானம் செய்வதால், வாகனங்களில் செல்லும்போது ஏற்படும் அகால மரணம், விபத்துகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்
* திரிதியை அன்று இளநீர், மோர், வெள்ளரி போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை தானம் செய்வது சிறப்பை தரும். தயிர் தானம் செய்வதால், நாம் அறியாமல் செய்த பாவங்களுக்கு கூட விமோசனம் கிடைக்கும்
* கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனரா... அவர்கள் பெயரில், கோவிலில் விசேஷ அர்ச்சனை, வழிபாடுகள் செய்யலாம். மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்க்கும், நீர் தானம் செய்தால், அவர்கள் கல்வி நிலையில் உயர்ந்து விளங்குவர்
* வீட்டில் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சார்பில், இறை வழிபாடு செய்து, வண்ண ஆடைகள் தானம் செய்தால், விரைவில் குணம் அடைவர். அவர்களுக்கு நோய்களின் தாக்கத்தால் ஆயுள் பங்கம் ஏற்படாத சுப பலன் கிட்டும்
* உயர்வான ராஜயோக வாழ்க்கையையே, எல்லா மனிதர்களும் விரும்புவர். அதை அடைய, அட்சய திரிதியை நாளில், ஏழைகளுக்கு நிரந்தரமாக உதவும் நிதியை ஏற்படுத்த, வழி வகை செய்யலாம்
* வாழ்க்கையில் சிலர் எப்போதும் தடைகளையே சந்தித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், இந்த சுப நாளில், காலணிகள், விசிறி, குடை ஆகியவற்றை தானமாக தரலாம். ஒரு ஜீவனுக்கு உடல் நலம் தரும் பொருளை தானமாக கொடுத்தால், நமக்கு அவை பன்மடங்கு சுபங்களைத் தந்துவிடும் என்று சாஸ்திரம் சொல்கிறது
* நீரிட்டால் நெஞ்சம் வாழ்த்தும், அன்னமிட்டால் அங்கம் அனைத்துமே வாழ்த்தும் என்பர். இதயத்திற்கு இதம் தருகிற பழங்களை தானம் செய்வதால், நல்ல இதயங்கள் வாழ்த்தும். நல்லோர்க்கும், அல்லோர்க்கும் பழங்களை இந்த நாளில் தானம் செய்வது, உயர்ந்த பதவிகளையும், சமூகத்தில் நற்பெயரையும் உருவாக்கித் தரும்.
