தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடவுளிடம் யாசிப்போம்!

கடவுளிடம் யாசிப்போம்!

கடவுளிடம் யாசிப்போம்!


PUBLISHED ON : ஆக 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகத்தை இறைவனுக்கு சமர்ப்பித்து, ஆசையின்றி வாழ்வோருக்கு, உலகியல் துன்பம் நெருங்காது என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்:

சேது நாட்டில், பரத்தைவயல் எனும் ஊரில் வாழ்ந்து வந்தனர், தாண்டவராயர் --- முத்துத்தாய் தம்பதியர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, முத்துக்குட்டி என பெயரிட்டனர். சிறு வயதிலிருந்தே இலக்கணம், இலக்கியம் என பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார், முத்துக்குட்டி.

அவரது குருநாதர், 'முத்துக்குட்டி... கல்வியின் பயன், கடவுளைத் தொழல் என்பது வள்ளுவர் வாக்கு; சிறந்த மாணவனாக திகழும் நீ, கடவுளை மறவாதே... தெய்வ வழிபாடு தான் நலன்கள் அனைத்தையும் தரும்...' என, உபதேசித்தார்.

அதை ஏற்ற முத்துக்குட்டி, படிக்கும் நேரம் போக, மற்ற நேரமெல்லாம் தெய்வ சிந்தனையிலும், வழிபாட்டிலுமே இருந்தார். மனதால் கூட மற்றவருக்கு தீங்கு எண்ணாத முத்துக்குட்டிக்கு, தெய்வ அருள் கைகூடியது.

அவர் என்ன சொன்னாலும், அப்படியே பலித்தது. மேலும், பாடல் புனைவதில் அவருக்குள்ள திறமை காரணமாக, 'முத்துக்குட்டி புலவர்' என, அழைத்தனர், மக்கள். செல்வந்தர்கள் அவரை பாடச்சொல்லி, பரிசுகள் அளித்து மகிழ்ந்தனர். முத்துக் குட்டியோ, தாம்பெற்ற வெகுமதிகளை மற்ற புலவர்களுக்கும் பகிர்ந்தளித்து, மகிழ்ந்தார்.

ஒருசமயம், திருக்கோட்டியூர் என்ற ஊருக்கு சென்றார், முத்துக்குட்டி. அவ்வூருக்கு போய் சேர்ந்தபோது, இரவாகி விட்டது. இரவு உணவை முடித்து, துாங்கி விட்டனர், மக்கள். முத்துக்குட்டிக்கோ கடும் பசி!

தேரடியை அடைந்த முத்துக்குட்டி, 'சவுமிய மூர்த்திப் பெருமாளே... இரவு நெடுநேரமாகி விட்டது; உணவு தருவார் யாருமில்லை. எனக்கோ பசி வாட்டுகிறது. நீ தான் உணவு தர வேண்டும்...' என, வேண்டினார்.

பிறருக்கு தீங்கு எண்ணாத நல்மனம் கொண்ட நல்லோர் வாட, கடவுள் பொறுத்திருக்க மாட்டார் அல்லவா...

வேதியர் வடிவம் கொண்டு, சர்க்கரைப் பொங்கலை முத்துக்குட்டியின் பார்வையில் படும்படி தேரின் மீது வைத்து, மறைந்தார், திருக்கோட்டியூர் சவுமிய மூர்த்தி பெருமாள்.

'பெருமாளே... இந்த எளியவனுக்காய் நள்ளிரவில், உணவளித்த உத்தமனே... என்ன கைமாறு செய்வேன் யான்...' என, பாடி துதித்தார், முத்துக்குட்டி.

இவர் பாடிய அருந்தமிழ் பாடல்கள் பல மறைந்து போனாலும், ஒரு சில பாடல்கள் கிடைத்துள்ளன. தான் கற்றது மற்றும் தெய்வ அருளால் கிடைத்ததை, அடுத்தவருக்கும் அளித்து உதவி புரிந்து வாழ்ந்த உத்தமர், முத்துக்குட்டி.

முத்துக்குட்டிப் புலவரைப் போலவே, நமக்கும் கல்வி செல்வத்தையும், நல் மனதையும் அருளுமாறு பகவானிடம் வேண்டுவோம்!



- பி.என். பரசுராமன்


அறிவோம் ஆன்மிகம்!

மந்திரங்களில் உயர்ந்த மந்திரம் எது?

மந்திரங்களில் உயர்ந்தது, சிவ மந்திரம். 'சிவாய நம' எனும் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை ஒருமுறை கூறினாலும் அதற்குரிய பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us