PUBLISHED ON : டிச 14, 2014
களமிறங்கிய கமல்ஹாசன்!
முன்னணி கதாநாயகர்கள் ஒரு படத்தில் நடித்து விட்டால், அடுத்த படத்தை அவர்கள் துவங்குவதற்குள் அந்த படத்தை வெளியிட்டு விடுவர். ஆனால், கமல் நடித்த, விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் படங்கள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. அதனால், இதுவரை, 'அந்த படங்களின் ரிலீசுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை...' என்று கூறிவந்த கமல், இப்போது தானே களமிறங்கி, அந்த படங்களை வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார். அதில், விஸ்வரூபம்-2 படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ், 'ஐ படத்தை வெளியிட்ட பின் தான் விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடுவோம்...' என்று கூறி விட்ட நிலையில், இப்போது லிங்குசாமி தயாரித்துள்ள, உத்தமவில்லன் படத்தை வெளியிடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
'கெட்-அப்'பை மாற்றும் சசிகுமார்!
சசிகுமார் கடைசியாக நடித்த படம், தோல்வியடைந்து விட்டதால், தனக்கு கிராமத்து கதைகள் மட்டுமே ஒத்து வரும் என்று தற்போது பாலா இயக்கும், தாரை தப்பட்டை படத்தில் நடிக்கிறார். அதற்காக பல மாதங்கள் கரகாட்ட பயிற்சி எடுத்து வந்த சசிகுமார், அந்த கதாபாத்திரத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். ஆனால், இதுவரை அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை என்பதால், வேலை வெட்டியில்லாமல் தன் அலுவலகத்துக்கும், வீட்டிற்கும் அலைந்து, பொழுதை கழித்து வருகிறார்.
— சி.பொ.,
மேல்தட்டு கதாநாயகர்களை மடக்கும் ஆண்ட்ரியா!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் நடித்து அறிமுகமானவர் ஆண்ட்ரியா. குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவர், கமலுடன், விஸ்வரூபம்-2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்த பின், இப்போது மேல் தட்டு இளவட்டங்களுடன், 'டூயட்' பாடும் ஆசை மேலோங்கியுள்ளது. அதனால், தான் எந்த முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பின்னணி பாடச் சென்றாலும், அவர்களது பர்சனல் போன் நம்பரை வாங்கி, அடிக்கடி அவர்களுடன் பேசி நட்பு வளர்க்கிறார். அதோடு, 'நயன்தாரா, தமன்னா போன்று நானும் கவர்ச்சிக்கு தயாராக இருக்கிறேன். ஒரு சான்ஸ் கொடுத்து பாருங்கள்...' என்றும் கல்லெறிகிறார். இட்டபடியே ஒழிய, ஆசைப்பட்டுப் பலன் இல்லை!
— எலீசா
விஜய் படத்தில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!
சமீபகாலமாக தமிழில் வெற்றியடையும் படங்கள் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீ- மேக்காவது அதிகரித்து விட்டது. இந்நிலையில், விஜய் நடித்த, கத்தி படத்தின் தெலுங்கு ரீ - மேக்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார். காரணம், 'கத்தி படத்தில் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். அவர் நடித்த அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் தான் மறுக்கிறேன்...' என்று கூறியுள்ள மகேஷ்பாபு, 'நேரடி படங்களில் நடிப்பதை விட, ரீ - மேக் படங்களில் நடிப்பது ரொம்ப கடினம்...' என்றும் கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தாரா நடிகை, சேட்டை நடிகரை விட்டு முற்றிலுமாக விலகி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தந்தபோதிலும், 'அதெல்லாம் வெறும் நாடகம்; அவர்கள் எப்போதும் போல் இப்போதும் நட்பு வளர்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்...' என்று இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, ரீ-என்ட்ரிக்கு பின், நடிகரின் வீட்டில் வசித்து வந்த நடிகை, இப்போது அதே நடிகரின் இன்னொரு ரகசிய வீட்டில் குடியேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களைப்பற்றிய, 'கிசுகிசு'க்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை நிறுத்தவே மேற்படி நடிகரும், நடிகையும் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக சொல்கின்றனர்.
சிவாஜி கேர்ள் நடிகை, வாய்ப்பு கேட்டு சென்ற சில இடங்களில், அவர் முத்தின கட்டையாகி விட்டதாக வெளிப்படையாக சொல்லி நிராகரித்து விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, தன் இளமையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியாக, சில உற்சாக பான வேட்டையில் இறங்கியிருக்கிறார். 'அந்த பானங்களை எடுத்துக் கொண்டால், சில மாதங்களிலேயே உடலில் இளமை பொங்கி வழியும்...' என்று சில சீனியர் நடிகைகள், 'சிவாஜி கேர்ள்'க்கு ஐடியா கொடுத்துள்ளனர்.
நவரச நடிகரின் வாரிசு, உடன் நடிக்கும் நடிகைகளுடன் அடிக்கடி, 'பப்'களுக்கு சென்று ஆட்டம், பாட்டம் என்று செம கூத்தடித்து
வருகிறார். ஆரம்பத்தில் இதை கண்டும் காணாமல் இருந்த நவரசம், தற்போது, மகனை, 'நடிகைகள் பக்கமே செல்லக் கூடாது...' என்று தடா போட்டிருக்கிறார். அதோடு, அவர் நடித்து வரும் ஸ்பாட்டுகளுக்கு பறக்கும் படை
போன்று திடீர் திடீர் என்று
ரெய்டு செல்கிறார்.
துளிகள்
* கடல் பட கவுதம் மற்றும் லட்சுமி மேனன் நடித்து வந்த, சிப்பாய் படம் பைனான்ஸ் பிரச்னையால் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
* வேட்டைக்கு பின் தமிழில் நடித்து வரும், இறுதிச்சுற்று படத்தில், முதன்முறையாக தாடி கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.
* விசாரணை என்ற படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து தனுஷ் நடிப்பில், குரங்காட்டி என்ற படத்தை இயக்குகிறார்.
* தெலுங்கு சினிமாவில் நயன்தாராவுக்கு, ஓராண்டு, 'ரெட்' கார்டு போடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு படத்தில் நடிக்க முயற்சி எடுத்தார். ஆனால், அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததால், அந்த படாதிபதி, நயன்தாராவை கழட்டி விட்டுள்ளார்.
* வடிவேலு கதாநாயகனாக நடித்து வந்த, எலி படத்திற்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் காமெடியனாக மூன்று படங் களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவ்ளோதான்!
