PUBLISHED ON : செப் 17, 2023

மூன்று வேடங்களில், கலக்கும் கவுண்டமணி!
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது, ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில், கதையின் நாயகனாக நடித்து வருகிறார், கவுண்டமணி. அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்தில், நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி மற்றும் பொதுஜனம் என, மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இதற்காக மூன்று, 'கெட் - அப்'களில் நடிக்கும் கவுண்டமணி, 'இது, காமெடி படமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு தேவையான ஆழமான கருத்தை சொல்லப் போவதால், மனதளவில், எனக்கு ஒரு திருப்தியை கொடுத்திருக்கிறது...' என்கிறார்.
சினிமா பொன்னையா
அஜித்துக்கு வந்த, பான்- இந்தியா ஆசை!
சமீப காலமாக ரஜினி, கமல், விஜய் மற்றும் தனுஷ் படங்கள் அனைத்தும், பல மொழிகளிலும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகிறது. துணிவு படத்தை அடுத்து, தான் நடிக்கும் விடாமுயற்சி படத்தையும், பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார், அஜித்குமார்.
இதையடுத்து, 'விஜயின், லியோ, ரஜினியின், ஜெயிலர் படங்களில் நடித்த, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை, என் படத்தில் வில்லனாக்கி இருக்கிறேன். அத்துடன், இன்னும் சில தெலுங்கு, மலையாள நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்து, பல மொழிகளிலும் என் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், அஜித்குமார்.
— சி.பொ.,
ரஜினி படத்தை கைப்பற்றிய, மஞ்சு வாரியர்!
ஜெயிலர் படத்தை அடுத்து, ரஜினி நடிக்கும், 170வது படமும், பான் இந்தியா படமாக உருவாகிறது. இதனால், அப்படத்தில் நடிப்பதற்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என, பல மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர் - நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
ரஜினி படக்குழுவுடன் பேசி, முக்கிய வேடத்தில் நடிக்க, ஒப்பந்தமாகி விட்டார், மலையாள நடிகை மஞ்சு வாரியர். ஏற்கனவே தமிழில், தனுஷுடன், அசுரன்; அஜித்துடன், துணிவு போன்ற படங்களில் நடித்திருக்கும், மஞ்சு வாரியர், 'இப்போது, ரஜினி படமும் கிடைத்திருப்பதால், மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன்...' என்கிறார். — எலீசா
மாபியா கூட்ட
தலைவராகும், தனுஷ்!
பான் இந்தியா கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிய, தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தன், 51வது படத்தில், மாபியா கூட்ட தலைவனாக நடிக்கப் போகிறார்.
'நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக, இந்திய சினிமாவையே மிரட்ட வேண்டும் என்பதற்காக, என், 'கெட் - அப்' மட்டுமின்றி, இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட, 'ஆக் ஷன் பர்பாமென்ஸ்'சை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
'மேலும், இந்த படத்தில், உடல் எடையை குறைத்து, அதிகப்படுத்தி என, இரண்டு விதமான உடல்கட்டுக்கு மாறியும் நடிக்க உள்ளேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
'கோலிவுட்டில், 'நம்பர் ஒன்' நாம் தான்...' என்று நினைத்துக் கொண்டிருந்த,
தளபதி நடிகருக்கு, உலக நடிகரும், உச்ச நடிகரும், கடைசியாக தங்கள் நடிப்பில் வெளியான படங்கள் மூலம் அதிகப்படியான வசூலை குவித்து, மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.
அதிலும், தளபதி நடிகர் படங்களின் வசூலை விட, இந்த இரண்டு சீனியர் படங்களின் வசூல் அதிகமாக இருந்ததால், அவருக்கு, தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே, தற்போது தான் நடித்துள்ள இரண்டு எழுத்து படத்தை, அதிகப்படியான தியேட்டரில் வெளியிட்டு, வசூலை அதிகப்படுத்தி காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும், வெளிநாடுகளிலும், தன் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிடுமாறு, தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.
சினி துளிகள்!
* சந்திரமுகி - 2 படத்திற்கு பிறகு, ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக, நடிக்கப் போகிறார், நயன்தாரா. ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் இதை இயக்குகிறார்.
* தன் 68வது படத்தில், அப்பா - மகன் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார், விஜய். இந்த படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக, சிம்ரன் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
