தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்க்கை!

வாழ்க்கை!

வாழ்க்கை!


PUBLISHED ON : ஜன 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலை கலைந்து, முகம் வெளிறி வந்த கணவனை பார்த்தவுடன், ராதாவின் அடி வயிற்றில் பயம், அமிலமாய் உருண்டது.

''என்னாச்சுங்க?''

''எல்லாம் முடிஞ்சு போச்சு,'' என்றவன், சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். கையில், பாலிதீன் பையில் ஏதோ பார்சல்!

''என்ன சொல்றீங்க...''

''இனி, சொல்றதுக்கு எதுவுமே இல்ல; பெரிய மனுஷங்க கூடிப் பேசி முடிவு செய்துட்டாங்க. கடன் தலைக்கு மேல போயிருச்சு. இனி, பணத்தை கொடுப்போங்கிற நம்பிக்கை, பணம் கொடுத்தவனுக்கு இல்ல. அதனால, கடையை அவன் பேருக்கு எழுதிக் கொடுக்கணும்ன்னு முடிவாகிடுச்சு.

''வெத்து மனுஷனா வந்திருக்கேன்; சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமைக்கு வந்துட்டோம். இரண்டு பொம்பள புள்ளைங்கள வச்சுக்கிட்டு, இனி, நாம எப்படித்தான் வாழப் போறோமோ...'' என்றான் விரக்தியுடன்!

அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல், செயலற்று நின்றாள் ராதா.

''நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதை செயல்படுத்திட்டா, எல்லாருக்கும் நிம்மதி; எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைச்சிடும்,'' என்றான்.

கண்களில் சிறு நம்பிக்கை வெளிச்சம் தோன்ற, அவனை சட்டேன்று நிமிர்ந்து பார்த்தாள் ராதா.

''இந்தா... இதில பூச்சி மருந்து இருக்கு, எடுத்து வை. ராத்திரி, ஏதாவது குளிர் பானத்தில் கலந்து, பசங்களுக்கும் கொடுத்துட்டு, நாமும் போய் சேரலாம். இது தான் ஒரே முடிவு. மானத்தை இழந்து வாழ முடியாது,'' என்றான்.

கடனுக்காக, தன் எலக்ட்ரானிக்ஸ் கடை கைமாறப் போகும் விரக்தியில் கணவன் எடுத்திருக்கும் முடிவைக் கேட்டு, விக்கித்துப் போனாள் ராதா.

''அக்கா... இங்கே பாரேன்... இந்த ஓவியம் நல்லாயிருக்கா...'' என்று கேட்டாள் நந்தனா.

ஓவியத்தை வாங்கிப் பார்த்த ஷோபனா, ''அழகா வரைஞ்சிருக்கியே... அப்படியே சிங்கம் எதிர்ல நிக்கிற மாதிரியே இருக்கு,'' என்றாள்.

''எங்க டீச்சரும் இதைத்தான் சொன்னாங்க. அப்பாகிட்டே சொல்லி, டிராயிங் கிளாஸ்ல சேரப் போறேன்,'' என்றாள் உற்சாகத்துடன்!

''நான் மட்டும் என்ன... பள்ளி ஆண்டு விழாவுல நல்லா டான்ஸ் ஆடினேன்னு எனக்கு பரிசு கொடுத்தாங்கல்ல... எங்க மிஸ் என்னை டான்ஸ் கிளாசில் சேர்ந்து, பரதநாட்டியம் கத்துக்கச் சொல்லியிருக்காங்க.''

''அய்... அப்ப நாம பெரியவங்களானதும், நீ பெரிய டான்சராகவும், நான் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் வரப் போறோம்...'' என்று நந்தனா சொல்ல, இருவரும் சேர்ந்து சிரிக்க, அதை மவுனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராதா.

இரவு உணவின் போது, ''பிள்ளைங்க சாப்பிட்டாங்களா...'' என்று கேட்டவனுக்கு, ''ம்... சாப்பிட்டு, 'டிவி' பார்த்துட்டு இருக்காங்க; நீங்க சாப்பிடறீங்களா...'' என்று கேட்டாள் ராதா.

''சாப்பிடுவோம்; இது, கடைசி சாப்பாடு இல்லயா... திருப்தியா வயிறார சாப்பிடுவோம். போய் எடுத்து வை.''

துக்கம் தொண்டையை அடைக்க, எழுந்தவளிடம், ''அந்த பூச்சி மருந்தையும், குளிர்பான பாட்டிலோடு, நாலு டம்ளரும் கொண்டு வா,'' என்றான்.

அவன் கேட்டவற்றை கொண்டு வந்து அவனருகில் வைத்தாள்.

''வாசல் கதவை தாழ் போட வேணாம்; சும்மா சாத்தி வை,'' என்றவன், ''ராதா... இப்ப உன்கிட்ட எவ்வளவு நகை இருக்கு...'' என்று கேட்டான்.

''பிள்ளைங்க நகை அஞ்சு பவுனோடு, என் நகையையும் சேர்த்தா, 20 பவுன் தேறும்,'' என்றாள்.

''சரி... அதை என் தங்கைக்கு எழுதி வச்சுடறேன். நமக்கான ஈமக் காரியங்களை அவளே செய்யட்டும்; பேப்பர், பேனாவை எடு,'' என்றான்.

எடுத்து அவனிடம் தந்ததும், தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என எழுதி, மேஜையின் மேல் நான்காக மடித்து வைத்து, அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்தான்.

''நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்; உனக்கு வருத்தமில்லையே... போதும் கஷ்டத்தில் உழண்டு வாழ்ந்தது... போய் சேருவோம்,'' என்றவன், நான்கு டம்ளரிலும் குளிர் பானத்தை ஊத்தி, அதில் பூச்சி மருந்தை கலந்தான்.

''போய் ஷோபனாவையும், நந்தனாவையும் கூட்டிட்டு வா,'' என்றான்.

''அதுக்கு முன், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள் ராதா.

என்ன என்பது போல பார்த்தான்.

''எல்லா பிரச்னைக்கும் தீர்வு, சாவுதான்னு முடிவு செய்துட்டா, இந்த உலகத்தில மனுஷனாய் பிறந்ததில் எந்த பிரயோசனமும் இல்லயே... பிசினசில் நஷ்டம்ன்னா, அதுக்காக வாழவே வழி இல்லாம போயிடுமா... கவுரவம்ங்கிறது நாம நடந்துக்கிற முறையில இருக்கு; திருடாம, பொய் சொல்லாம நேர்மையாக வாழறது தான் கவுரவம். பிசினசுல கடன் வாங்குறதும், நஷ்டப்படறதும் சகஜம். இதில், கவுரவம் பறி போக என்ன இருக்கு...

''உங்களால பிரச்னைய சமாளிச்சு வாழ முடியலங்கிறதுக்காக, நம் பிள்ளைகளோட உயிரை பறிக்க நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?

''நம்மாலே, இந்த உலகத்துக்கு வந்த ஜீவன்களை, நாம் வாழ வைக்கணுமே தவிர, அழிக்கக் கூடாது. அவங்களுக்குள் இருக்கும் ஆயிரம் கனவுகளைக் குழி தோண்டிப் புதைக்க, நமக்கு எந்த உரிமையும் இல்ல.

''கடவுள் நமக்குக் கொடுத்த உயிரை அழிக்க, நமக்கே உரிமையில்லாத போது, உங்களால வளர்த்து, ஆளாக்க முடியாதுங்கிற காரணதுக்காக, அந்த பிஞ்சு உயிர்களை அழிக்க நினைக்கறீங்களே... இது சரியா?

''ஒரு அப்பாவா உங்களால, பிரச்னைகளை சமாளிச்சு, பிள்ளைகள வாழ வைக்க முடியாம போகலாம். ஆனா, பெத்த தாயான என்னால, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய கொடுக்க முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

''கீழே விழறது தப்பு இல்ல; ஆனா, இனி எழுந்திருக்கவே முடியாதுன்னு நினைக்கிறோம் பாருங்க... அது தான் தவறு,'' என்று சொன்னவள், விஷம் கலந்து குளிர் பானம் ஊற்றப்பட்ட மூன்று டம்டளர்களை மட்டும் எடுத்து போய் வாஷ்பேசினில் கொட்டியவள், திரும்பி வந்து, ''இதோ... உங்க முன்னால டம்ளரில் இருக்கிற விஷத்தை குடிக்கிறதும், கீழே ஊத்தறதும் உங்க முடிவு. ஆனா, என்னால இந்த உலகத்தில பிரச்னைகளை சமாளிச்சு வாழ்ந்து, என் பெண்கள கரையேத்த முடியும். எனக்கு சாக விருப்பமில்ல; நான் போய் தூங்கறேன்,'' என்று கூறி அங்கிருந்து அகன்றாள்.

அடுத்த பத்தாவது நிமிஷம், வாஷ்பேசினில் தண்ணீர் ஊற்றும் சப்தம் கேட்டது.

தன்னருகில் வந்து படுக்கும் கணவனின் மார்பில், அவள் கைகள், ஆதரவாய் விழுந்தன.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us