sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தனிமை சுகம்!

தனிமை சுகம்!

தனிமை சுகம்!


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க் நகரின், பிரமாண்டமான கட்டடத்திலிருந்து, வெளியே வந்தான் அருண்.

'பார்க்கிங்'கில் இருந்த காரை நோக்கி சென்றவனின் மொபைல் போன் அழைக்க, எடுத்துப் பார்த்தான். இந்தியாவிலிருந்து சுந்தரியம்மா.

''சொல்லுங்கம்மா; அப்பா எப்படியிருக்காரு... டாக்டர், வாரா வாரம் வந்து பாத்துட்டு போறாரா... அப்பாவுக்கு பிடிச்சதை செய்து தர்றீங்களா; வேலன், ஒழுங்கா வேலைக்கு வந்து, அப்பாவை கவனிச்சுக்கிறானா...'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை வீசினான்.

சிறிது நேர மவுனத்திற்கு பின், ''எல்லாம் நல்லாவே நடக்குது... ஆனா, அப்பா தான், வர வர பேசறதை குறைச்சுட்டு, எப்பவும் ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறாரு. 'டிவி' போட்டாக் கூட பாக்கிறதில்ல; கேட்கிற கேள்விக்கு, பதில் சொல்றதும் இல்ல. எப்பவும் வெறிச்சு பாத்துட்டு இருக்காரு; மனசுக்கு கஷ்டமா இருக்கு தம்பி,'' என்றாள் அவர்கள் வீட்டில் பணிபுரியும் சுந்தரியம்மா.

''ஏன்... என்னாச்சு... உடம்புக்கு ஏதும் சரியில்லயா... டாக்டர் என்ன சொன்னாரு?''

''தெரியல தம்பி... நீயே டாக்டர்கிட்டே பேசு; மொத்தத்தில், அப்பா பழைய மாதிரி இல்ல. உங்கிட்டே சொல்லணும்ன்னு தோணுச்சு. முடிஞ்சா ஒருமுறை நேரில் வந்து, அப்பாவை பார்த்துட்டு போப்பா,'' என்றாள்.

''என்ன பிராப்ளம் அருண்; முகமே சரியில்ல...''

கழுத்து வரை இருந்த தலைமுடியை, ரப்பர் பேண்டால் கட்டியபடி கேட்டாள், லேகா.

''இந்தியாவிலிருந்து போன் வந்தது... அப்பா, கொஞ்ச நாளா சரியில்லயாம்; தனிமையில், ரூமிலே அடைஞ்சு கிடக்கிறாராம்.''

''ஏன்... என்ன விஷயம்?''

''தெரியல... ஒருமுறை, இந்தியா போய்ட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்.''

''சான்ஸே இல்ல; மிதுன், மியூசிக் கிளாசும், சரண், சம்மர் கோர்ஸ் போறாங்க; நகர முடியாது.''

''நீங்க எல்லாம் வரவேணாம்; நான் மட்டும் போயிட்டு வர்றேன்.''

''உங்க இஷ்டம்... ஆனா, ஒரு வாரத்திற்கு மேல் வேணாம். இந்த இயர் என்டில், யூரோப், 'டிரிப்' வச்சிருக்கோம்; அதுக்கு லீவு வேணும். ஞாபகம் வச்சுக்குங்க.''

அதற்கு மேல் பேச ஒண்ணுமில்லை என்பது போல், லேகா உள்ளே போக, மவுனமானான் அருண்.

'எனக்கென்னவோ மறுகல்யாணத்தில் இஷ்டமில்ல பெரியப்பா... இதோ, என் மகன் அருண் போதும். இவன் எதிர்காலத்தை பிரகாசமாக்கி, இவன் நிழலில் வாழ்ந்துட்டுப் போறேன்...'

தன் மறுமணம் பற்றி ஒருமுறை பெரியவங்க பேசியபோது, இப்படிதான் பதில் கூறினார் அருணின் அப்பா.

எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள். அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து, சந்தோஷப்பட்டார்.

'உன் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செய்துக்கிறதில், எனக்கு எந்த வருத்தமுமில்லை அருண்; சந்தோஷமா இரு...' என்று வாழ்த்தினார்.

அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்த போது, 'உனக்காகவே வாழ்ந்துட்டேன்... உன்னை விட்டுப் பிரியாமல், நீ தான் எல்லாம்ன்னு இருந்ததால, நீ வெளிநாடு கிளம்பறது, கொஞ்சம் வேதனையாக தான் இருக்கும்; ஆனாலும், உன் முன்னேற்றம் முக்கியம் இல்லையா, கிளம்புப்பா...' என்று கண்கலங்க சொன்ன போது, 'உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துட்டு தான் போறேன்; சமையலுக்கு ஆள், உங்க கூடவே உங்க வேலைய கவனிக்க வேலையாள். நிம்மதியா இருங்கப்பா; பணம் அனுப்பறேன்...' என்று கூறி, விடை பெற்றான்.

இதோ பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது.

மிதுன், சரண் பிறக்க, பேரன்களை, இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, பத்து நாட்கள், இந்தியா, 'விசிட்' அவ்வளவு தான்.

அந்த நாளுக்காகவே காத்திருந்தது போல, ஒவ்வொரு நிமிடத்தையும், பேரன்களோடும், மகனோடும் செலவழிப்பார்; முகம் கொள்ளாமல், புன்சிரிப்பு தாண்டவமாடும்.

பிரியும் போது, அப்பாவின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிவான்; மனதில், குற்றவுணர்வு தலைதூக்கும்.

''வாங்க தம்பி... வரேன்னு போன் செய்யலயே...''

''அப்பாவை பாக்கணும்ன்னு தோணுச்சு; புறப்பட்டு வந்துட்டேன். அப்பா எங்கே...'' கண்கள் அப்பாவைத் தேட, ''தோட்டத்தில் இருக்காரு தம்பி,'' என்றாள், சுந்தரியம்மா.

பின் பக்கம் வந்தான். துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்து, மரத்தையே வெறித்து பார்த்தபடி இருந்தார்.

உடல் மெலிந்து, வயதின் மூப்பு அதிகரித்தது போல தோன்றியது.

தான் அருகில் வந்த உணர்வு கூட இல்லாமல், எதைப் பார்க்கிறார் என்று பார்வை போன திசையைப் பார்த்தான்.

மரத்தில், கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு, தன் வாயிலிருந்த இரையை, ஊட்டிக் கொண்டிருந்தது காகம்.

கண் இமைக்காமல் அதையே பார்த்தவரை, ''அப்பா...'' என்று தோளை தொட, அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

''அப்பா... நான் அருண் வந்திருக்கேன்...'' தோளில் கை வைத்து திரும்பினான். திரும்பியவரின் கண்கள், அனிச்சையாக அவனை பார்த்தது. மகனை பார்த்த சந்தோஷம், மகிழ்ச்சி என, எதுவுமே கண்களில் புலப்படவில்லை.

''அப்பா... நல்லாயிருக்கீங்களா...''

''ம்...''

திரும்ப, அவர் கண்கள் மரத்தை பார்க்க, 'இப்படி தான் தம்பி... எது கேட்டாலும் ஒன்றிரண்டு வார்த்தை தான். பசின்னு சொல்றதில்ல; தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறதில்ல. நாங்க தான், பாத்து பாத்து கொடுக்கிறோம்.''

அருணின் மனம் குமுறியது; கண்களில் கண்ணீர்!

''அப்பாவுக்கு உடம்பில் பெரிசா தொந்தரவு எதுவும் இல்ல அருண்... வீக்லி ஒன்ஸ் போறேன்; பிரஷர், ஷுகர் கூட நார்மலா தான் இருக்கு. தனிமையின் சுமையை தாங்க முடியாம, அவர் மனசு, ரொம்ப சோர்ந்து போச்சுன்னு தான் எனக்குப் படுது.

''மகன், பேரன்கள்ன்னு சேர்ந்து வாழ முடியாத தன்மை; உறவுகளின் அருகாமையில் இல்லாம, தனித்து இயங்க வேண்டிய கட்டாயம்; வயதாக ஆக, அவரால் இதை ஜீரணிக்க முடியல. அதன் விளைவு, அவர் மூளை சரிவர இயங்க மறுக்குது.

''இதற்கான டிரீட்மென்ட், உங்களுக்கே தெரியும்... உறவுகளின் அருகில் இருக்கணும்,'' என்றார்.

''அப்பா சாப்பிடுங்க.''

சாதத்தை பிசைந்து, தன் கையால் ஊட்டினான்.

வாயை துடைத்து, மாத்திரைகளையும், தண்ணீரையும் கொடுக்க, வாங்கி, வாயில் போட்டு விழுங்கினார்.

''அப்பா... ஏன்ப்பா என்கிட்டே பேச மாட்டேன்கிறீங்க...''

பதில் இல்லா மவுனம்.

பெட்டியை திறந்து, மிதுன், சரண் புகைப்படத்தை எடுத்து, அவர் கையில் கொடுத்தான்; கண் இமைக்காமல் அதையே பார்த்தார்.

இதழ்கள் விரிந்து மலர்ந்தன; அடுத்த நிமிடம், கண்களில் கண்ணீர்.

''அப்பா அழறீங்களா... உங்க பேரன்களை தெரியுதாப்பா...''

''ம்...''

அருணுக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.

பெட்டியில் எல்லாம் எடுத்து வைக்க, ''ஊருக்கு கிளம்புறீங்களா தம்பி.''

''ஆமாம்மா. ஈவினிங் பிளைட்.''

''நீங்க வந்ததை கூட அப்பா உணரல பாத்தீங்களா; மனசுக்கு கஷ்டமா இருக்கு தம்பி...''

''அப்பாவை நல்லபடியா பாத்துக்குங்க... உங்கள நம்பி தான் கிளம்பறேன்.''

''போயிட்டு வாங்க... உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும். நாங்க பாத்துக்கிறோம்; அவரால், எந்த தொந்தரவும் இல்ல.''

அப்பாவின் அறைக்கு வந்தான்.

கண்களை மூடி படுத்திருந்தார்.

''தூங்கறாரு போலிருக்கு... எழுப்பட்டுமா; சொல்லிட்டு கிளம்பறீங்களா?''

''வேணாம்; அவர் தூங்கட்டும்.''

நாற்காலியை இழுத்து, கட்டிலின் அருகில் போட்டு உட்கார்ந்தான். மெல்லிய குறட்டை ஒலி.

இரண்டு கைளையும் சேர்த்து, நெஞ்சின் மீது வைத்திருந்தார். இணைந்த கைகளுக்கிடையே, வெள்ளையாக தெரிய, 'என்ன அது' என்று நினைத்து மெதுவாக உருவினான்.

மிதுன், சரணின் புகைப்படங்கள்.

மனதிற்குள் ஏதோ ஒன்று உடைய, நெஞ்சை அழுத்தும் வலி, பாரமாக தாக்க, எதுவுமே செய்ய இயலாத, தன் நிலையை நினைத்து, துக்கம் தொண்டையடைக்க, அப்பாவின் கால்களில் தலை புதைத்து, சத்தம் வராமல் அழுதான். பின்புறம் முதுகு குலுங்குவதிலிருந்து, அவன் நிலையை புரிந்து கொண்ட சுந்தரியம்மா, 'அந்தப் பிள்ளையின் பாரம், அழுவதிலாவது தீரட்டும்...' என நினைத்தவளாக, கதவைச் சாத்தி, வெளியேறினாள்.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us