தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இருதய ஆண்டவர்!

இருதய ஆண்டவர்!

இருதய ஆண்டவர்!


PUBLISHED ON : டிச 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துவ தேவாலயங்களைப் பொறுத்தவரை, ஆண்டவர் இயேசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் இயேசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார்.

இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், மூன்றாவது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.

பிரான்ஸ் நாட்டில், 130 ஆண்டுகளுக்கு முன், மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர், பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில், மரணத்தை எதிர்நோக்கி இருந்தார்.

இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர், 'ஒன்பது நாட்கள் விரதமிருந்து ஆண்டவராகிய இயேசுவை மனமுருகி வழிபட்டால் நோய் தீரும்...' என்று கூறினர். இதை ஏற்றுக் கொண்ட அன்னாள், அவ்வாறே விரதமிருந்து வழிபட துவங்கினார். ஐந்தாவது நாளே உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தார்.

மறுநாள் டாக்டரிடம் சென்று காண்பித்த போது, இதய நோய் குறைந்து வருவதாக கூறிய அவர், நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறினார். இதனால், மகிழ்ச்சியடைந்த அவர், தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினார்.

இச்சமயத்தில், இடைக்காட்டூரில் பங்குத் தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பெர்டிணன்ட் செல், அங்கு தேவலாயம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக பொருள் தேடி, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார்.

இதைக் கேள்விப்பட்ட அன்னாள், அதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். பின், 'ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது, ஆண்டவரை எப்படி உருவாக்குவது...' என்று ஆலோசித்தனர்.

மார்க்ரேட் மேரி என்பவர், 1673 ல் பிரான்சில், பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். அவர், இயேசு மீது மிகுந்த பற்று கொண்டவர்.

ஒருநாள், அவர் கனவில், 'ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார்...' என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் இயேசு.

அதைப் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே இயேசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான, திரு இருதய ஆண்டவர் உருவம் உருவாக்கப்பட்டது.

புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டினான்ட் செல், இடைக்காட்டூர் வந்து, கட்டுமானப் பணிகளைத் துவங்கினார். பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக்கலையின் அடிப்படையில், சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டன.

சுமார், 120 ஆண்டுகளைக் கடந்தும், வானளாவிய உயரத்துடன் காணப்படும் இந்த ஆலயத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என, வழக்கமான விழாக்கள் நடந்தாலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடக்கும் சிறப்பு திருப்பலி மிகவும் விசேஷம். இதில், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் என, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். இது தவிர, ஏப்ரல் மாத ஈஸ்டர் மற்றும் பாஸ்கு திருவிழாக்களும் நடக்கும்.

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாஸ்கு திருவிழா நடைபெறும் நேரத்தில், ஒரு வாரத்திற்கு முன், வெளியூரில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி வரவழைப்பர். உறவினர்களும் இரு நாட்களுக்கு முன்பே வந்து, பாஸ்கு திருவிழா ஏற்பாடுகளை ஜாதி, மத வேறுபாடின்றி செய்வர்.

தற்போது இங்கு, வெளி நாட்டினரும் வருகை புரிவதால், தமிழக அரசு, இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.

ஆலயத்திற்கு எப்படி செல்வது...

சென்னை-மதுரை வந்து, ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மானாமதுரை அருகே, 40 கி.மீ.,ல் உள்ளது முத்தனேந்தல். இங்கு இறங்கி, மேம்பாலத்தை கடந்தால், இடைக் காட்டூர். திருத்தலத்திற்கு போக, ஆட்டோ வசதிகளும் உள்ளன.

டி.செல்வம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us