தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மங்கையே மணாளனின் பாக்கியம்!

மங்கையே மணாளனின் பாக்கியம்!

மங்கையே மணாளனின் பாக்கியம்!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலை முடிந்து, வீட்டிற்கு வந்த ரவி, முகம் கழுவி, தனி அறையில் கட்டிலில் அமர்ந்து, ஜெயந்தி போட்டுத் தந்த காப்பியை, முதல் வாய் பருகப் போனான்.

''இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?'' என்று, ஆரம்பித்தாள் ஜெயந்தி.

காபியை கீழே வைத்த ரவி, ''ம்... சொல்லு,'' என்று, தன் மனைவியை ஏறிட்டான்.

''அட, நீங்க, காபிய சாப்டுங்க.''

''இருக்கட்டும். காபி, வழக்கமா சாப்பிடறது தானே... ஆனா, நீ ஏதோ புதுசா சொல்லப்போறன்னு நினைக்குறேன்,'' ரவி சொல்ல,'' என்ன கிண்டலா? நான் நடந்தததான சொல்றேன். அதக் கேட்கவே போரடிக்குதோ... அப்ப, அனுபவிச்சவளுக்கு எப்படி இருக்கும்,'' என்றாள் ஜெயந்தி.

''சரி சொல்லு... மறந்துடபோற,'' ரவியின் கிண்டல் தொடர்ந்தது.

'' இட்லிக்குன்னு மாவு எடுத்து வச்சிருந்தேன். ஆனா... அத்தை, அதுல தண்ணி ஊற்றி, தோசை மாவாக்கி, சுட்டும் வச்சிட்டாங்க. இந்த வீட்ல, டிபன் இட்லி தான்னு, முடிவு செய்ய கூட, எனக்கு உரிமை கிடையாதா?''

''சரி. இட்லிக்கும், தோசைக்கும் என்ன பெரிய வித்யாசம்? அடிப்படைல மாவுதான?''

''உங்கம்மாவ விட்டுக் கொடுக்க மாட்டீங்களே... நான் கேட்டது என்ன... நீங்க சொல்றது என்ன?''

''புரியுது. உன்ன மதிச்சு, காலை டிபன் என்ன செய்யப்போறன்னு, அம்மா கேட்டிருக்கணும். அதுதானே... சரி... இதப்போய் கேட்டு, சண்டை போட முடியுமா?

''கல்யாணமாகி, ஆறு மாசம் ஓடிபோச்சு... காலம்பூரா இப்படியே போகணுமா... உங்க தம்பி, சாப்பிட்ட தட்ட, ஒரு சமயம் கழுவறாரு, சில சமயம், டேபிள்ல அப்படியே வச்சிட்டு போய்டுறாரு. இதுக்கு என்ன சொல்றீங்க?''

''ஏன், சர்வன்ட் கிட்ட போட வேண்டியது தான?''

''யாரு நானா?''

பதில் பேசவில்லை ரவி. 'உன் தம்பியின் எச்சில் தட்டை எடுக்கவா, என்னை, உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்...' என்று, தொடர்ந்து தாக்குதல் வரும்.

''இத நீயே கூப்பிட்டு சொல்ல வேண்டியது தான?''

''என்னங்க... புரியாம பேசறீங்க, அவரு என்ன நெனச்சுப்பாரு... அண்ணி வேலை வாங்கறாங்கன்னு, தப்பா நெனக்க மாட்டாரு?''

''சரி... இப்ப நான் என்ன செய்யணும்?''

பதில் பேசவில்லை ஜெயந்தி. காபியை குடித்தான் ரவி .

திருமணமான சில வாரங்களிலேயே, இதுபோன்ற பிரச்னைகள் ஆரம்பித்து விட்டன. ஜெயந்தி வளர்ந்த விதம், அவளால் மற்றொரு வீட்டில், அந்த வீட்டு சூழ்நிலைக்கேற்றவாறு, அனுசரித்து போக முடியவில்லை. 'பேசற அளவுக்கு, இதெல்லாம் ஒரு விஷயமா...' என்று கேட்டால், 'இதை, உங்களிடம் சொல்லாமல், யாரிடம் போய் சொல்வது... இந்த வீட்டில் நீங்கதானே எனக்கு எல்லாம்...' என்று, அழ ஆரம்பித்து விடுவாள்.

இன்றைய சூழ்நிலையில், ஜெயந்தி போன்ற பெண்களுக்கு, தனிக்குடித்தனம் தான், ஒரே தீர்வு. ஆனால், அது சட்டென்று நடக்கக்கூடிய காரியமா...

மகனுக்கு ஆசையாய் திருமணம் செய்து, வீட்டிற்கு மருமகள் வந்து, பேரன் -பேத்தி என்று, வம்சம் வளர்ந்து, கடைசி காலத்தில், மகிழ்ச்சியாக, கவுரவமாக இருக்க ஆசைப்படும் பெற்றோர் களைக் கொண்டது தானே, நம் நாடு.

இதை, 'குடும்பத்தை பிரிந்து வந்த, ஒரு பெண்ணின் உணர்வுகளை, புரிந்து கொள்வதில்லை, மதிப்பு கொடுக்கவில்லை, தனிமை இல்லை' என்று, சின்னச் சின்ன விஷயங்களைக் கூட, அனுசரித்து செல்ல முடியாத, இவளைப் போன்ற பெண்களால், கணவனை மட்டும், எத்தனை நாள் அனுசரித்து போக முடியும்...

இம்மாதிரி மனநிலை உடைய பெண்கள், 'எங்களுக்கும் அப்பா - அம்மா குடும்பம் உண்டு. நாங்கள் மட்டும் ஏன் உங்கள் வீட்டிற்கு வந்து, எல்லாரையும் அனுசரித்து நடக்க வேண்டும். முடிந்தால், மாப்பிளை, எங்கள் வீட்டிற்கு மருமகனாக வரட்டும். இல்லாவிட்டால், தனியா குடும்பம் நடத்தலாம்...' என்று, தைரியமாக, நேர்மையாக, திருமணத்திற்கு முன், சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து, குடும்பத்தை கட்டிக் காக்கும் குலவிளக்காக சிரித்து, அடக்கமாக நடித்து, திருமணமான பின், சம உரிமை பேசி, சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி, ஏதோ நரகத்தில் இருப்பது போல், ஒரு உருவகம் செய்து, மனைவியா, குடும்பத்தினரா என்று தவிக்கும், மனநிலையை, கணவனுக்கு ஏற்படுத்தி, ஒரு முகூர்த்த நாளில், திடீரென்று, குடும்பத்தை விட்டு, கணவரை பிரித்துக்கொண்டு செல்வது, எந்த வகையில் நியாயம்... கணவனே நிம்மதி வேண்டி, மனைவியோடு தனிக் குடித்தனத்திற்கு கிளம்பும் மன நிலைக்கு, தள்ளப்படுவது என்ன நீதி...

சுற்றுபுற நடவடிக்கைகளை கவனித்து, எல்லாவற்றையும் கணித்து வைத்திருந்தான் ரவி.

ஜெயந்தியிடம், 'பொறு சரியாயிடும்' என்று, எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும். தீவிரமாக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து, ஒரு நாள் காலை...

''ஜெயந்தி... உனக்கு, உங்க வீட்ல கொடுத்த சாமான்களை, லாப்ட்டுல கட்டி வச்சிடு! நகை, டிரஸ்களை, 'பேக்' செய்திடு.நாம கொஞ்ச நாள் வேற எடத்துக்கு போகப் போறோம். சாயந்தரம் ரெடியா இரு,'' ரவி சொல்ல, ஜெயந்தி, சற்று தடுமாறிப் போனாள். 'தனியாக என்றால், தனிக்குடித்தனமா... அப்படி என்றால், சாமான்கள் தேவையில்லையா... இல்லை வெளியூர் பயணமா... அப்படி என்றால் ஆபீஸ்!'

குழப்பம் இருந்தாலும், 'கொஞ்ச நாள், கணவனுடன் தனியாக இருக்கப் போகிறோம்' என்ற எண்ணமே, அவளுக்கு, சந்தோஷத்தை கொடுத்தது.

அன்று மாலை...

இரண்டு சூட்கேசுடன், ரெடியாக இருந்தாள் ஜெயந்தி.

தன் தாயிடம் தனியாக ஏதோ கூறினான் ரவி . ஆச்சரியமாக இருந்தது. ரவியின் அம்மா, எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.

''நல்லபடியா இரும்மா,'' காலில் விழுந்த மருமகளை, கனிவோடு வாழ்த்தினாள். ஏற்கனவே, ரவி சமாதானப்படுத்தியிருப்பானோ!

''போகலாமா ஜெயந்தி?''

தலையாட்டிய ஜெயந்தி, ''ஏங்க உங்க தம்பி கிட்ட சொல்ல வேணாமா?'' என்றாள்.

''அப்புறம் போன்ல சொல்லிக்கிறேன்.''

ரவி, ஜெயந்தியை அழைத்துக் கொண்டு, வாசலில் ரெடியாக இருந்த ஆட்டோவில் ஏறினான்.

''ஏங்க இப்பவாவது சொல்லுங்க... எங்க போகப் போறோம்?''

''வெயிட் பண்ணு... அந்த இடத்த பார்த்ததும், நீ அசந்து போய்டுவ,'' ரவி சொல்ல, மேலும் ஆர்வமானாள் ஜெயந்தி.

ஆட்டோ சில நிமிடங்களில், மீனாட்சி நகருக்குள் நுழைய, மீனாட்சி நகரில் உள்ள, தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு செல்லத்தான், ரவி, கூட்டிக் கொண்டு வருகிறான் என, புரிந்து கொண்டாள் ஜெயந்தி.

ஜெயந்தியின் வீட்டின் முன், ஆட்டோ நின்றது. இறங்கிய ரவி, பணத்தை கொடுத்து, ஆட்டோவை, 'கட்' செய்தான்.

விழித்தாள் ஜெயந்தி...''ஏங்க... என்ன, ஆட்டோவை அனுப்புறீங்க?''

''பின்ன... அது என்ன, நம்ப சொந்த ஆட்டோவா, நாம் தங்கப்போற எடம் வந்தாச்சு, வா.''

ஜெயந்தியை எதிர்பார்க்காமல், இரண்டு சூட்கேசையும் எடுத்துக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தான் ரவி. எதுவும் புரியாது, வேறுவழியின்றி, ரவியை பின் தொடர்ந்தாள் ஜெயந்தி.

உள்ளே ஜெயந்தியின், அம்மா - அப்பா, கனிவோடு வரவேற்றனர்.

''வாங்க மாப்ள... வா ஜெயந்தி.''

ரவி, ஜெயந்தியிடம்,''உங்கப்பா, அம்மாகிட்ட அனுமதி வாங்கிட்டேன்; சரின்னுட்டாங்க. இது, நீ பிறந்து வளர்ந்த இடம்... உனக்கு பிடிச்ச அப்பா -அம்மா அப்புறம், உன் தங்கச்சி. இனிமே, இங்கதான் இருக்கப் போறோம். உனக்கு இதவிட, வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும் ஜெயந்தி,'' என்றான்.

மேலும், விழித்த ஜெயந்தியால், எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

ரவி, வீட்டோடு மாப்பிள்ளையாக வருகிறான் என்பது, எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் என்றும் புரியவில்லை.

''எங்க மாமா... எங்க ரூம்?''

''அதோ!'' என்று, ரவியின் மாமனார் கைகாட்ட, அந்த அறைக்குள் சென்றான் ரவி.

பின் தொடர்ந்த ஜெயந்தி, ''ஏங்க... உங்களுக்கு, இது சரிபட்டு வருமா... அப்புறம், ஏன், கொஞ்ச நாள்னு சொன்னீங்க?'' எனக் கேட்டாள்.

''கொஞ்ச நாள்ன்னு சொன்னது எனக்கில்ல... நான் காலம்பூராவும், இங்கேயே இருக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன். அது உனக்கு, நீ ஏதாவது சொன்னா, அப்புறம் முடிவு செஞ்சுக்கலாம். என்ன சந்தோஷம் தானே?'' கேட்டான் ரவி.

முழுதாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை ஜெயந்தியால். தன் பிறந்த வீட்டிற்கு வருவது மகிழ்ச்சிதான் என்றாலும், ஏன் இந்த முடிவு என்றும், ரவி சொல்வது போல், வாழ்க்கையே இங்கு தான் என்றால், அவளுக்கு குழப்பமே மிஞ்சியது.

ஜெயந்தியின் தங்கை ஸ்ரீதேவி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.

''ஹை... அக்காவும், அத்தானும் நம்ப கூடவே இருக்கப் போறாங்களா?'' விஷயம் கேள்விபட்டு, குதித்தாள்.

ரவி, எப்போது தன் பெற்றோரிடம் பேசினான்... எப்படி அப்பா- அம்மா இதற்கு, சம்மதித்தனர் என்று, ஜெயந்திக்கு புரியவில்லை.

'நீங்களும் எனக்கு பெத்தவங்க மாதிரிதான்... உங்க கூட இருக்க போறோம்'ன்னு மாப்ள கேட்டாரும்மா, நாங்க என்ன சொல்ல முடியும்?'' ஜெயந்தியின் அப்பா சொன்னார்.

நாட்கள் நகர ஆரம்பித்தன.

ரவி மிக இயல்பாக, தன் வீட்டில் வளைய வருவது, ஜெயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீதேவியுடன் கேரம்போர்டு விளையாடினான். அப்பாவை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். அம்மாவை பீச்சிற்கு கூட்டி சென்றான்.

''ஏங்க... உங்களுக்கு, எந்த சிரமமும் இல்லியா... இல்ல நடிக்கிறீங்களா? நாம தனிக்குடித்தனம் போகணும்ன்னு, உங்கிட்ட சில தடவ கேட்டேன் தான். ஆனா, அதற்காக, நீங்க ஏன், இந்த முடிவ எடுத்தீங்க?''

ரவியிடம் கேட்டாள் ஜெயந்தி.

''இல்ல ஜெயந்தி... நாம் கொஞ்சநாள் பெரியவங்க பார்வையில இருக்கணும். ஏன் உங்க அப்பா அம்மா கூட இருப்பதில், உனக்கு என்ன பிரச்னை?''

திருப்பி கேட்டான் ரவி. ஜெயந்தியால், பதில் சொல்ல முடியவில்லை.

''ஏங்க அத்தைக்கு, செலவுக்கு பணம்?''

''நான் தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன். அவன் பாத்துப்பான்.''

மீண்டும் பல நாட்கள் கடந்தன. ரவிக்கு, இப்போது, எந்த பிரச்னையுமில்லை. ஜெயந்தி, யார் பற்றியும் புகார் பட்டியல் வாசிப்பதில்லை.

சரியாக மூன்று மாதத்திற்கு பின், ஒரு நாள்...

''ஜெயந்தி உன் கூட பேசணும்...'' என்றான் ரவி .

வித்யாசமாக பார்த்த ஜெயந்தி, அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

''நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஒரு வாரத்திற்கு முன், ஒரு நாள், உங்கம்மா, ராத்திரி சாப்பிட கூப்பிட்டப்ப, நீ ஏன் வயித்துவலின்னு பொய் சொன்ன?''

யோசித்தவள்,''ம்... அது, அவுங்க கூட, ஒரு சின்ன பிரச்னைங்க. 'உருளைக்கிழங்க குக்கர்ல போடாதீங்க'ன்னு சொன்னேன். சீக்கிரம் வேலை முடியணும்ன்னு குக்கர்ல போட்டு, மாவு மாதிரி ஆக்கி, அது பொரியலா, மசியலான்னு தெரியாத மாதிரி செய்திருந்தாங்க. அதான்.''

''சரி. அப்புறம் ஒருநாள், உங்கப்பா கிட்ட போன்ல, 'இங்க இப்ப வராதப்பா. சித்தப்பா வீட்டுக்கு போ'ன்னு ஏன் சொன்ன?''

''அது... அது,'' தயங்கினாள் ஜெயந்தி.

''எனக்கு தெரியும் ஜெயந்தி... மாமாவுக்கு, எப்பவாவது, ட்ரிங்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அன்னிக்கு, அவரு, குடிக்கிட்டு வீட்டுக்கு வந்தா, என்கிட்ட மரியாதை போய்டும்ன்னு, நீ அப்படி சொன்ன. அது நியாயம் தான். சரி, அடுத்த கேள்விக்கு, பதில் சொல்லு. எதுக்கு, 'அவசர செலவுக்கு, அப்பாவுக்கு பணம் தேவைப்படுது. நம்ப நகையை கொடுக்கட்டுமா... சீக்கிரம் மீட்டுடுவாருன்'னு, ஒரு முறை என்கிட்ட கேட்ட?''

''அது வந்து... அப்பவே, உங்க கிட்ட சொன்னேங்க. 'தங்கம் விலை குறைஞ்சிருக்கு. ஸ்ரீதேவிக்கு நெக்லஸ் வாங்கன்'னு கேட்டாரு. நம்ப நகையை, அப்பா மீட்டு தந்திட்டாறேங்க,'' என்று, படபடத்த ஜெயந்தியைப் பார்த்து, சிரித்தான் ரவி.

''இதுல, எந்த தப்புமில்ல ஜெயந்தி. ஆனா, இப்ப நான் கேட்ட மூணு விஷயத்துலயும், நீ சாதாரண ஒரு பெண்ணா, அமைதியா நடந்துகிட்ட. காரணம், அதுல சம்பந்தப்பட்டவங்க, உன் அம்மா, அப்பா அப்புறம் நகை, அது உன் தங்கைக்கு. இதுவே, நம்ப வீட்ல நடந்திருந்தா... நீ எப்படி ரியாக்ட் செய்துருப்ப. மனசாட்சிய தொட்டு சொல்லு...''

இடைவெளி விட்டான் ரவி. பதில் சொல்லவில்லை ஜெயந்தி.

''நானே சொல்றேன்... 'ஒரு உருளைக்கிழங்கு பொரியல் செய்யக்கூட, எனக்கு உரிமை இல்ல'ன்னு சொல்லுவ. 'உங்கப்பா குடிப்பாரா... ஐயையோ'ன்னு பதறுவ. 'தங்கம் விலை குறைஞ்சா, அதுக்கு என் நகை தான் வேணுமா... ஏதாவது பங்ஷன் வந்தா, எத மாட்டிக்கிட்டு போறதாம்... நீங்க என்ன மருமகளுக்கு, ஆசை ஆசையா வாங்கியா கொடுத்தீங்க'ன்னு குதிப்ப. ஆனா, இங்க நீ சாதாரணமா நடந்துகிட்ட. அப்புறம் என்னை எடுத்துக்க...

''நான் எங்க வீட்ல இருந்த மாதிரி, இங்க இருக்க முடியுமா ஜெயந்தி? மாமனார்- மாமியார் மரியாதைக்குரியவங்க. அதனால், எப்பவும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பேன். எங்கம்மா, என் தம்பிய விட்டு வந்திருக்கேன்னு கொஞ்சம் கூட புலம்பினதில்ல. வெளில, பலபேர் 'என்னப்பா திடீர்ன்னு வீட்டு மாப்பிள்ளையாய்ட்டியே'ன்னு கேட்டாங்க. ஆனா, நான் அதையும் கண்டுக்கல. எல்லாத்தையும் அட்ஜஸ்ட் செய்துட்டு இருக்கேன். இனிமேலும் இருப்பேன் ஜெயந்தி.

''அதேநேரம், இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னா... பொறுமை, கருணை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை... ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கறதால தான், அவங்களால, அடுத்தவங்க வீட்டுக்கு போய் வாழ முடியும்ன்னு , ஒரு பொண்ணு, கணவன் வீட்டுல, வாழுற கலாசாரம் நடைமுறைக்கு வந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனால், அது போன தலைமுறை வரைக்கும் வெற்றிகரமா வந்திருக்கு. ஆனா, இந்த தலைமுறையில சம உரிமை, பெண்ணுரிமை, வேலை, படிப்பு, தனி மனித உரிமைன்னு பெண்களுக்கு, 'ஏன் கூட்டுக் குடும்பத்துல வாழணும்' என்ற, எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கு. இது நல்லதான்னு தெரியல.

''அதேநேரம், ஒரு ஆண் நினைச்சா, மனைவி வீட்ல, அட்ஜஸ்ட் செய்துக்கலாம். அத நீயே... இங்க பாத்த. அப்புறம் உன் இஷ்டம் ஜெயந்தி. நீ நல்லா யோசிச்சு, ஒரு முடிவு எடு! எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் இங்கயே இருக்கேன்,'' நீண்ட லெக்சர் அடித்து விட்டு, ரவி தூங்கப் போனான்.

யோசிக்க யோசிக்க, ஜெயந்திக்கு தன் தவறு, புரிந்தது. அடிப்படையில், ஒருவரை பிடித்துவிட்டால், அவர்கள் மீது பெரிய கோபம் வராது. தவறு செய்தாலும் திருத்த முயற்சிப்போம். அதேசமயம், பிடிக்காமல் போய் விட்டால்...

ரவியின் பார்வையில், உண்மையிருப்பதை உணர்ந்தாள். மறுநாள் மாலை, ரவி, ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தான். ஜெயந்தி இரண்டு சூட்கேஸ்களோடு தயாராக இருந்தாள். கேள்விக்குறியோடு, ஜெயந்தியைப் பார்த்தான் ரவி.

''கிளம்புங்க நம்ப வீட்டுக்கு,'' என்றாள் ஜெயந்தி. ரவி தன் மாமனார்- மாமியாரை பார்த்தான்.

''நீங்க அவளுக்கு வாழ்ந்து காட்டி புரிய வச்சுட்டீங்க மாப்ள,'' என்று, கூறினார் மாமனார்.

மனம் மாறிய தன் மனைவியுடன் கிளம்பினான் ரவி.

***

டி. சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us