PUBLISHED ON : ஆக 15, 2021

தம்பதிகளின் மனதில் நீங்கா இடம் பெற்ற, முக்கிய விரதம், வரலட்சுமி விரதம்.
'நான் முன்னே போகிறேன், நீ பின்னால் வா...' என்று சொல்லும் தைரியம், எத்தனை பேருக்கு வரும். இந்த உன்னத சத்தியத்தை தம்பதியர், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, திருமணத்தன்றே ஏற்றுக் கொள்கின்றனர்.
சரி... மணமக்கள் இருவரும் சத்தியம் ஏற்க, மணமகள் மட்டும் வரலட்சுமி விரதத்தை ஆண்டுதோறும் மேற்கொள்வானேன்! இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டுமல்லவா? இதோ, அந்த ரகசியம்...
திருமணச்சடங்கில், மாங்கல்யம் பூட்டும்போது, கெட்டி மேளம் ஒலிக்கும். அந்த சத்தத்தையும் மீறி, புரோகிதர் உச்ச ஸ்தாயியில், 'மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்...' என்ற மந்திரத்தை முழங்குவார்.
இது, சாதாரண மந்திரமல்ல. கணவன், தாலியை கையில் வைத்திருக்க, ஒரு சங்கல்பம் (உறுதிமொழி) செய்கிறார். இந்த மந்திரத்தை மொழி பெயர்க்கும்போது, சற்றே மாற்றி மொழி பெயர்த்தால், பொருள் எளிதாக புரியும்.
மம ஜீவன ஹேதுனா - என் வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகிக்க வந்திருப்பவளே...
மாங்கல்யம் தந்துனானே - இந்த மாங்கல்யத்தை எதற்காக அளிக்கிறேன் தெரியுமா?
கண்டே பத்னாமி - உன் கழுத்தை சுற்றி அணிவிக்கும் இந்த மங்கல நாண், நம் உறவை இறுதி வரை உறுதி செய்யும் அடையாளமாக இருக்கும்.
சுபாகே - தலை சிறந்த நற்குணங்களை உடையவளே...
த்வம் சஞ்சீவ சரத சதம் - நீ, நுாறாண்டு வாழ வேண்டும்.
இப்படி, மணமகன், தன் மனைவியை வாழ்த்துகிறான். இதற்கு நன்றிக்கடனாக, காலம் முழுவதும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவி, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கிறாள். இதன் நோக்கம் தீர்க்க சுமங்கலியாக இருப்பது.
தீர்க்க சுமங்கலியாக இவள் இருக்க வேண்டும் என்றால், அவன், அவளுக்கு பின்பும் இந்த பூமியில் வாழ்ந்தாக வேண்டும். இப்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக, 16 வகை செல்வங்களையும் அவர்கள் பெறுகின்றனர். இந்த செல்வங்களை தங்களுக்கு வரமாக அருளும் செல்வராணியான லட்சுமியை, இந்த நாளில் வணங்குகின்றனர். வரமருளும் லட்சுமிக்கு, வரலட்சுமி என, பெயர் சூட்டுகின்றனர்.
நம் விரதங்களும், மந்திரங்களும் அர்த்தமுள்ளவை. அவற்றை உணர்ந்து கடைப்பிடித்தால், வாழ்க்கை மங்களகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தி. செல்லப்பா
