PUBLISHED ON : ஆக 15, 2021

சிறுவர்களிடமும் எச்சரிக்கை தேவை!
தோழி வீட்டிற்கு சென்றிருந்தபோது, அவள் வீட்டில் இல்லாததால், அருகே மைதானத்தில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கே வந்த இளம் பெண் ஒருவர், உடற்பயிற்சி செய்ய துவங்கினாள். அதுவரை, ஒழுங்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அந்த பெண்ணை கண்டதும், அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதும், ஒருவருக்கொருவர், 'கமென்ட்' செய்வதுமாய் இருந்தனர்.
அவர்களுக்கு பின்னால் நான் நிற்பது தெரியாமல், அவர்களில் ஒருவன், 'மாப்ள... போன்ல பார்த்த மாதிரியே செமையா இருக்குதுடா...' என்றான்.
இன்னொருவன், ஆபாசமாக பேசியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், அவர்களது கைகளில், 'ஆண்டிராய்டு' போன் இருந்தது, கூடுதல் அதிர்ச்சியை தந்தது. என் தோழி வந்ததும், அவளிடம் மைதானம் குறித்து கேட்டேன்.
'இந்த ஏரியா பெண்கள், இங்கு தான் உடற்பயிற்சி செய்வர்; நானும் இந்த மைதானத்தில் தான் உடற்பயிற்சி செய்வேன். விடுமுறையால், பள்ளி சிறுவர்கள், கிரிக்கெட் விளையாட வருவர்...' என கூறியவனிடம், நடந்ததை கூறினேன்.
அதிர்ச்சி அடைந்த தோழி, 'நான் ஒரு போதும் சிறுவர்களை உன்னிப்பாக கவனிப்பதில்லை. அவர்கள் பிஞ்சிலே பழுத்திருப்பது, நீ சொல்லிதான் தெரிகிறது...' என்றாள்.
'இனிமேல், மைதானத்திற்கு பாதுகாப்பான உடை அணிந்து செல்; சிறுவர்கள்தானே என, அசாதாரணமாய் எடை போடாதே... ஜாக்கிரதையாக இரு...' என, அறிவுரை கூறி வந்தேன்.
தோழியரே... சிறுவர்களையும் சாதாரணமாக எடை போட வேண்டாம்... ஜாக்கிரதை!
- இலக்கியா மகேஷ், கோவை.
வாசகர்களுக்கு உதவும் நுாலகர்!
அண்மையில், ஒரு நுாலகத்திற்கு சென்றிருந்தேன். மேஜையில், படிக்கும் இடத்தில் ஆங்காங்கே கொஞ்சம் துண்டு பேப்பரும், பேனாவும் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நுாலகரிடம் கேட்டேன்.
'நுாலகத்திற்கு வரும் பலரிடம் குறிப்பெடுக்க பேனா, பேப்பர் இருக்காது. இதனால், பலர் புத்தகத்தின் முக்கிய பக்கத்தை யாருக்கும் தெரியாமல் கிழித்து விடுகின்றனர். பலர் பயனடைய வேண்டிய செய்திகளை, இப்படி கிழித்துப் போவதால், அது மற்றவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. ஆகவே தான், இந்த ஏற்பாடு.
'இப்போது புத்தகங்களில் பக்கங்கள் கிழிபடுவது இல்லை. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்...' என்றார், நுாலகர்.
அவரின் நற்செயலை பாராட்டி வந்தேன்.
- பி. பாண்டியன், காரைக்குடி.
சுய தொழிலுக்கு வழிகாட்டி!
தையற் கடை வைத்திருக்கும் என்னை, தையல் மிஷின் வாங்க வேண்டும் என்று, உதவிக்கு அழைத்தார், வாடிக்கையாளர் ஒருவர்.
அவருடன் கடைக்கு சென்று, ஒரு தையல் மிஷினை வாங்கினோம். வாங்கிய மிஷினை, என் கடையில் தினக்கூலியாக பணிபுரியும் தையற்கார தொழிலாளிக்கு பரிசளித்தார், வாடிக்கையாளர்.
ஒன்றும் புரியாமல் பார்த்த என்னிடம், 'இன்று, என் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும், எனக்கு அறிமுகமான சிறந்த தொழிலாளியை, முதலாளியாக்கி பார்ப்பது வழக்கம். சென்ற ஆண்டு, என் வாகனங்களை பழுது நீக்கும், மெக்கானிக் ஷாப்பில் பணிபுரியும், 'வெல்டிங்' வேலை செய்த பையனுக்கு, வெல்டிங் மிஷின் வாங்கிக் கொடுத்து, என் பிறந்தநாளை கொண்டாடினேன்.
'அதற்கு முந்தைய ஆண்டு, நான் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டலில் பணிபுரிந்த ஒரு முதிய பெண்மணிக்கு, டிபன் கடை ஆரம்பிக்க, தள்ளு வண்டி, கேஸ் அடுப்பு, இட்லி பானை இன்னும் சில பொருட்களை வாங்கி கொடுத்தேன். இது, இனியும் தொடரும்...' என்றார்.
அவரால் உள்ளம் நெகிழ்ந்த நான், அவரை முன் மாதிரியாக வைத்து, அவர் வழியை பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்.
- கே. கணேஷ், கடலுார்.
