PUBLISHED ON : பிப் 04, 2018

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு,
குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேச்வர:
குருர் சாட்ஷாத் பரப்பிரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!
என்ற மகா மந்திரத்தைச் சொல்வர். இம்மந்திரமே கோவிலாக அமைந்துள்ள இடம், திருச்சி அருகிலுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்!
உயிர்களைப் படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றார், பிரம்மா. தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார், சிவன். இதனால், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார், பிரம்மா.
அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், 'ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்...' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்; படைப்புத் தொழிலும் பறி போனது. இதனால், தன் தவறுக்காக, இறைவனிடம் சாப விமோசனம் கேட்டார், பிரம்மா.
பூலோகத்தில் தன்னை, 12 லிங்கங்களாக வடித்து (துவாதச லிங்கம்) வணங்கி வந்தால், சாப விமோசனமும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத் தொழிலை அருள்வதாகக் கூறினார், சிவன். பிரம்மனும், துவாதச லிங்க வழிபாடு செய்து, சாபம் நீங்க பெற்றார். அவர் வழிபாடு செய்த இடமே திருப்பட்டூர்!
'என்னை மகிழ்வித்த உன்னை வழி படுவோரின் தீய தலையெழுத்தை, மங்களகரமாக மாற்றுவாயாக...' என, அவருக்கு வரம் அருளினார், சிவன். அன்று முதல், இத்தலத்தில் உள்ள பிரம்மா, தன்னை வழிபடுவோரின் தலையெழுத்தை மாற்றி, அருளுகிறார்.
சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பிரம்மநாயகி என்றும் பெயர்.
கோவில் நுழைவு வாசல் மண்டபத்தின் மேல், நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் சரபேஸ்வரர் சிற்பம் உள்ளது. எனவே, இக்கோவிலுக்குள் நுழைந்தாலே மங்கள வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
தமிழகத்தில், பிரம்மாவுக்கு தனி சன்னிதி உள்ள கோவில் இது மட்டுமே! வியாழக்கிழமைகளில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார், பிரம்மா.
மேலும், நரசிம்மர் மண்டபத்தில், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில், நரசிம்மர், இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது; அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது மற்றும் பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள நாத மண்டபத்தில், ராவணன், அகந்தையினால் மேரு மலையை, சிவ - பார்வதியுடன் சேர்ந்து துாக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து, சிவனை வசப்படுத்தும் இசைத்துாண்கள் உள்ளன.
பிரம்மன் வழிபட்ட பதினாறு பட்டை உடைய ஷோடசலிங்கம் தனி மண்டபத்தில் உள்ளது. இங்குள்ள நந்தியை தடவினால், நிஜ காளையை தடவிய உணர்வு ஏற்படும்.
இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
பிரம்மா வழிபட்ட, 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே, இங்கு சென்றால், ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும். தெற்கு நோக்கி இருக்க வேண்டிய கால பைரவர், இங்கு மேற்கு நோக்கி உள்ளது மற்றொரு சிறப்பு!
பிரம்மனுக்கு, 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து, ஒன்பது முறை அவரை வலம் வந்து, வழிபட வேண்டும்.
ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவரின் சமாதி, கோவிலுக்குள் இருக்கிறது.
வேதங்களை சிவன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர், ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப் பெரியவர் சொல்வார். அது, இங்கு தான் நிகழ்ந்துள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 30 கி.மீ., தொலைவிலுள்ளது சிறுகனுார்; இங்கிருந்து பிரியும் சாலையில், 4 கி.மீ., சென்றால் திருப்பட்டூரை அடையலாம்.
தி.செல்லப்பா
