தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம் பாதமும் பதியட்டும்!

நம் பாதமும் பதியட்டும்!

நம் பாதமும் பதியட்டும்!


PUBLISHED ON : ஏப் 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்.,- 17 - திருநாவுக்கரசர் குருபூஜை

'மாசில் வீணையும் மாலை மதியமும்...' என்ற தேவாரப்பாடலை இசைக்காத பக்த நெஞ்சங்களே இல்லை. இந்த இனிய பாடலை எழுதிய திருநாவுக்கரசர் குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடக்கும். இந்த நன்னாளில், அவர் அவதரித்த திருவாமூர் தலத்துக்கு சென்று வரலாம். நாவுக்கரசரின் தந்தை பெயர் புகழனார், தாயார் மாதினியார், சகோதரி திலகவதியார். இவருக்கு மருள்நீக்கியார் என்பது நிஜப்பெயர். இளமையிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார்.

திலகவதியாருக்கு, அவ்வூர் சேனைத்தலைவர் கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க, நிச்சயித்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த பின், போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி, திருவதிகை என்ற தலத்திற்கு சென்று, சிவத்தொண்டு செய்து வந்தார். திருநாவுக்கரசரோ, சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி, தர்மசேனர் என்ற பெயர் சூட்டிக்கொண்டார்.

தன் தம்பியை, சைவ சமயத்திற்கு தொண்டாற்ற மீண்டும் தர வேண்டும் என, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார் திலகவதியார். சிவனும் அதை ஏற்று, தன் சோதனையை ஆரம்பித்தார். நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று, திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால், மெய்சிலிர்த்த அவர், 'திருப்பதிகம்' பாடி வழிபட்டார். அந்த இசையில் மயங்கிய சிவனே, அவர் முன் தோன்றி, 'இனிய பாடல்களைப் பாடிய நீர், 'நாவுக்கரசு' என போற்றப்படுவீர்...' என்றார்.

பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய நாவுக்கரசர், திருப்புகலூரில், சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். ஞானசம்பந்தர், இவரை தன் தந்தையாகக் கருதி, 'அப்பரே' என அழைத்ததால், 'அப்பர்' என்றும் பெயர் பெற்றார்.

நாவுக்கரசர் அவதரித்த திருவாமூரில், திரிபுரசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே அப்பர் பெருமான், நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால், மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வியில் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். பசுபதீஸ்வரரும், திரிபுர சுந்தரியும் அருள் பாலித்தாலும், அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் சன்னிதிகள் உள்ளன.

சித்திரை சதயநாளில், அப்பர் குருபூஜை நடக்கிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், தேவாரத்தை சிறப்பாக பாடும் சிறந்த ஓதுவாமூர்த்திக்கு, 'மூத்த திருமுறை இசைவாணர்' என்ற சிறப்பும், 'திருமுறை கலாநிதி' என்ற பட்டமும் வழங்கப்படுகிறது.

அப்பர், பங்குனி, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்ததாகக் கருதி, அன்றும் அவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார், போரில் இறந்து விட்டதால், இவ்வூரில் திருமணத்தன்று தான் நிச்சயதார்த்தம் செய்கின்றனர்.

நாவுக்கரசர் அவதாரம் செய்த, களரி வாகை மரத்தடியில், சுவாமிக்கு அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரம் செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே, இந்த மரம் இங்கு உள்ளது என்கின்றனர்.

பண்ருட்டியிலிருந்து, 9 கி.மீ., கடலூரிலிருந்து, 34 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 28 கி.மீ., தூரத்தில் திருவாமூர் உள்ளது. தேவாரம் பாடிய தலைமகன் அவதரித்த ஊரில், நம் பாதமும் பதியட்டுமே!

***

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us