/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கொட்டும் பனியில் அழகு கெடாமலிருக்க...
/
கொட்டும் பனியில் அழகு கெடாமலிருக்க...
PUBLISHED ON : டிச 15, 2024

பனிக் காலத்தில், உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். அதிகப்படியான குளிரால், பலருக்கும் சருமம் வறண்டு, முகம் பொலிவின்றி காட்சியளிக்கும். இச்சமயத்தில், நம் முகத்தின் மிருது தன்மை குறையும். இதை தடுக்க, சில ஆலோசனைகள்:
* குளிர் காலத்தில் நிறையப் பேர் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இது, முற்றிலும் தவறு. குளிர் காலத்தில், நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் சருமம் வறட்சியாகாமல், ஈரப்பதத்துடன் இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது. மூலிகை தேநீரும், சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும்.
* குளிர்காலத்தில் தான் உங்களின் சருமத்திற்கும், தலை முடிக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்நேரத்தில், வெதுவெதுப்பான நீர் மிகவும் நல்லது. 'மாய்சுரைஸர்' சோப்பை பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும்
* 'பிரஷ்' ஆன காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றுடன் பிரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க, சருமம் வறண்டு போகாது
* உதட்டை அடிக்கடி எச்சில் படுத்தாதீர். இப்படி செய்வதால், உதடு காய்ந்து போகும். அதற்கு பதிலாக தரமான, 'லிப் பாம்' உபயோகிக்கலாம்
* ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று முறையாவது, முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். இப்படி சுத்தம் செய்யும் போது, சோப்பையோ, 'பேஸ் வாஷை'யோ பயன்படுத்தினால், முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைந்து விடக் கூடும். அதனால், பனிக்காலத்தில் முகம் கழுவ, 'மாய்சுரைஸர் பேஸ்வாஷ்' தான் சிறந்தது
* குளிர் காலத்தில், தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்வது, சருமத்திற்கு மிக நல்லது. மிதமான சூடுள்ள எண்ணெயில், குளிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன், மசாஜ் செய்து குளியுங்கள். இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் அவகோடோ எண்ணெய் போன்றவை, 'மசாஜ்' செய்வதற்கு ஏற்றவை
* குளிர் காலத்திற்கேற்ப, 'ஆயில் மிக்ஸ்டு மாய்சுரைஸரை' உபயோகிக்கலாம். இது, உங்கள் சரும வறட்சியை தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்
* கோடை காலத்தில் தான், 'சன் ஸ்கிரீன் லோஷன்' பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர், பலர். பனிக் காலத்திலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன், 'சன் ஸ்கிரீன் லோஷனை' பூசிக் கொள்ளலாம்
* உடலில் மற்ற பகுதிகளை விட, கைகள் மிகவும் மிருதுவானது. எனவே, 'மாய்சுரைஸர் லோஷனை' உங்கள் கைகளிலும், கால் பாதங்களிலும் மறக்காமல் பூசிக் கொள்ளுங்கள். இது, அப்பகுதியில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.