
சுகம் தரும் சுக்கு மல்லி காபி!
சுக்கு, மல்லி விதை (தனியா) ஆகியவற்றுடன், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபி தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்த சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே, வெந்நீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்தலாம்.
மூக்கடைப்பை விரட்ட...
குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம். இதை விரட்ட எளிமையான வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து, அதை அடுப்பில் காட்டி, எரிய விடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள்.
இவ்வாறு செய்யும் போது, மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமின்றி, கிருமிகளை அழிப்பதோடு, மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய மிளகை ஊசியில் குத்தி, நெருப்பில் காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க, மூக்கடைப்பு உடனே சரியாகும்.