தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மெட்டி பிள்ளையார்!

மெட்டி பிள்ளையார்!

மெட்டி பிள்ளையார்!


PUBLISHED ON : மே 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநாயகப் பெருமானை, தமிழகத்தில், பிரம்மச்சாரியாக வழிபடுகின்றனர். வட மாநிலங்களில் ரித்தி (புத்தி), சித்தி என்னும் சக்திகளை திருமணம் செய்த குடும்பஸ்தராக வழிபடுகின்றனர். ரித்தி என்றால், செல்வ வளம்; சித்தி என்றால், ஆன்மிக அறிவு.

விநாயகரை வணங்கினால், ஆன்மிக எண்ணங்களுடன் நல்லவனாகவும் வாழலாம். செல்வ வளமும் பெறலாம் என்ற அடிப்படையில், இந்த சக்திகள் ஒட்டிக் கிடக்கின்றன. இந்த இரண்டு நன்மைகளையும் இரு பெண்களாக பாவனை செய்து, ரித்தி, சித்தி என்கின்றனர்.

இவர்களை பிரம்மனின் புத்திரிகள் என்றும், படைப்புத் தொழிலில் பிரம்மனுக்கு உதவியாக விளங்கும், பிரஜாபதிகளில் ஒருவரான விஸ்வரூபன் என்பவரின் மகள்கள் என்றும் கூறுவதுண்டு. இவர்களை, விநாயகர் திருமணம் செய்து கொண்டார்.

தமிழகத்தில், விநாயகரின் சக்திகளை சித்தி, புத்தி என்பர். ஆனால், சித்தி, புத்தியுடன் இணைந்த கோவில்களைக் காண்பது அரிது. அவற்றில் ஒன்று, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார், மலை மேல் இருக்கிறார். கும்பகோணத்தில், மேடான இடத்தில் இருப்பதால், இவரை, உச்சிப்பிள்ளையார் என்கின்றனர்.

கும்பகோணத்திலுள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், தலைமையாக உள்ளதாலும், இவருக்கு, உச்சிப்பிள்ளையார் என்று, பெயர் வந்திருக்க வாய்ப்புண்டு.

உச்சிப்பிள்ளையார் இங்கு அருள்பாலிக்க காரணம் உண்டு. அயோத்தியில், ரங்கநாதர் சிலையைப் பெற்று வந்த ராவணனின் தம்பி, விபீஷணன், காவிரியின் மேடான இடத்தில், அதை, ஒரு சிறுவனின் கையில் கொடுத்து, 'தம்பி... இதை தரையில் வைத்து விடாதே, மீண்டும் எடுக்க முடியாமல் போய் விடும். நான் நீராடி விட்டு வருகிறேன்...' என்றார்.

அந்த சிறுவன் தான் விநாயகர் என்பதை அவர் அறியவில்லை. விநாயகரோ, அதை தரையில் வைத்தார். தன் மாமாவான விஷ்ணு, அந்த இடத்திலேயே அருள்பாலிக்க வேண்டும் என்பது, அவரது விருப்பம். நீராடி வந்த விபீஷணன் ஏமாந்தது, அறிந்த கதை.

இதன்பின், உலகமே அழிந்த காலத்திலும், அழியாமல் இருந்த கும்பகோணத்துக்கு வந்தார், விநாயகர். அங்கே, ஒரு மேடான இடத்தில் அமர்ந்து, தன் தந்தை, கும்பேஸ்வரரை தினமும் பூஜித்து வருவதாக ஐதீகம்.

மேடான இடத்தில் அமர்ந்ததால், இவரும், உச்சிப்பிள்ளையார் எனப்பட்டார். இங்கு, சித்தி - புத்தியை திருமணம் செய்வதுடன், அவர்களுக்கு, மெட்டி அணிவிக்கும் கோலத்தில், விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த சுதைச் சிற்பத்தைக் காண, கண் கோடி வேண்டும். இவரை, மெட்டிப்பிள்ளையார் என, செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர், பக்தர்கள்.

திருமணத் தடை நீங்க, இவரை வணங்குவர். இங்கேயும், தன் மாமாவான விஷ்ணுவை, கண் குளிரக் காண வேண்டும் என, விநாயகர் எண்ணினார் போலும். சாரங்கபாணி கோவில் திருப்பத்தில் அமர்ந்து விட்டார்.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், (நாகேஸ்வரன் வடக்கு வீதி), இந்தக் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us